சனி, 21 செப்டம்பர், 2013

நூஹின் கப்பல்: உண்மையல்ல புராணக் குப்பையே


செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 22



எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இசாஸின் பதிவு: நூஹின் கப்பல்: புரானக்கதயல்ல! உண்மைக்கதை!

நூஹின் கப்பல் புராணக் குப்பைதான் என்பதற்கு அந்தப் பதிவில் சில அம்சங்களைக் குறிப்பிட்டிருந்தேன். நங்கூரமாக காட்டப்படும் கல் குறித்த ஐயம், கப்பலின் அளவுகள் குறித்த ஐயம், ஆய்வாளர்களின் முடிவுகள், உலகம் முழுமைக்குமாக ஒரு ஊழிப் பெருவெள்ளம் உலகில் ஏற்பட்டதா எனும் ஐயம் போன்றவை. நூஹின் கப்பல் உண்ண்ண்ண்ண்ண்மைதான் என அழுத்தமாக கூற விரும்பும் நண்பர் இஹ்சாஸ் இவை குறித்து கூறுவதென்ன? நங்கூரக் கல் நங்கூரக் கல்லல்ல என ஒப்புக் கொள்கிறார். கப்பலில் அளவுகள் பைபிளில் இருப்பவை எனவே நாங்கள் அதை ஏற்பதில்லை என்கிறார். டேவிட் ஃபசோல்ட் மீண்டும் மாறிவிட்டார் என்கிறார், (ஃபசோல்ட் மட்டுமல்ல, அது கப்பலல்ல என்று கூறிய அறிவியலாளர்களின் பட்டியலே இருக்கிறது என்பதை நண்பர் தன்னுடைய வசதிக்காக மறந்துவிட்டார்) ஊழிப் பெருவெள்ளம் ஏற்பட்டதை நம்ப வேண்டும் என்கிறார். இது தான் இஹ்சாஸ் கூறியிருப்பது. பின் எப்படி கப்பல் உண்மை என்கிறார். ஒரு கேள்வி கேட்டிருக்கிறார், பின் எப்படி அந்தக் கப்பல் அவ்வளவு உயரத்திற்கு செல்ல முடியும்? ஐயா! அது கப்பலே இல்லை என்பதற்குத்தான் இவ்வளவு ஆதாரங்களையும் தந்திருக்கிறேன். இதை அந்தப் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களை படித்துப் பார்த்திருந்தாலே தெரிந்திருக்கும். தேவை கருதி அந்த பின்னூட்ட விபரங்களை சுருக்கமாக பார்க்கலாம்.

1960ல் ஜார்ஜ் வன்டேமன், டான் லாவரிட்ஜ் எனும் இரு அறிவியலாளர்கள் ராணுவ அனுமதியுடன் அந்த இடத்தை ஆராய்ந்தனர். கப்பல் வடிவிலான அந்த இடத்தை தோண்டியும், டைனமேட்கள் கொண்டு வெடித்தும் பார்த்துவிட்டு, அந்த இடத்தின் வடிவம் கப்பல் போல இருக்கிறதேயன்றி கப்பல் ஒன்றுமில்லை என்று அறிவித்தனர் என்று கட்டுரையிலேயே குறிப்பிட்டிருக்கிறேன். இது போன்ற பல ஆய்வாளர்கள் அங்கு கப்பல் என்று குறிப்பிடத்தகுத்ததாக ஒன்றுமில்லை என பதிவு செய்திருக்கிறார்கள். அனால் நண்பர் இஹ்சாஸ் அவ்வளவு உயரத்துக்கு அந்தக் கப்பல் எப்படி சென்றிருக்க முடியும் என்று கேட்கிறார். முதலில் அது கப்பல் தான் என்பதை உறுதிப்படுத்துங்கள் பின் மற்றதை பார்த்துக் கொள்ளலாம்.

நண்பர் இஹ்சாஸ் கப்பல் உண்மை என்பதற்கு எந்தவிதமான தரவுகளையும் முன்வைக்கவில்லை என்றாலும் அந்த பதிவின் பின்னூட்டங்களில் சலாஹுத்தீன் என்பவருடன் நடந்த விவாதத்தை சுருக்கி தருகிறேன். அது, நூஹின் கப்பல் எந்த அளவுக்கு புராணப் புரட்டாக இருக்கிறது என்பதை காண்பவர்களுக்கு தூலமாக உணர்த்தும்.

அனேக கிருஸ்தவ தளங்களில் மரப்பலகையும் ஆணியும் கண்டுபிடித்ததாக அளந்திருக்கிறார்கள். ஆனால் அங்கு பலகையோ ஆணியோ அல்லது உலோகங்களோ காணப்படவில்லை என்பதே உண்மை. அப்படி கண்டுபிடிக்கப்பட்டதாக நீங்களும் நம்பினால் அந்த கிருஸ்தவ தளங்களில் ஆதாரங்களை கேட்டுப் பாருங்கள், அப்போது உண்மை உங்களுக்கே புரியவரும்.
அலுமினியமும், டைட்டானியமும் காணப்பட்டதாக இவர்கள் கூறுவது ஒன்றே போதும் அதை பொய் என்று நிரூபிக்க, காரணம், டைட்டானியம் 1791ல் வில்லியம் கிரிகோரால் கண்டுபிடிக்கப்பட்ட உலோகம். அலுமினியமோ ஹான்ஸ் கிரிஸ்டியன் என்பவரால் 1825ல் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது.

பைபிளில் கப்பல் தங்கிய இடம் அராராத் மலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது, குரானில் ஜூதிமலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அராராத் மலையும் ஜூதி மலையும் வேறு வேறு மலைகள். ஜூதி மலை அர்மீனிய எல்லையில் இருக்கிறது. இப்போது கப்பல் தங்கிய இடமாக எதை கருதுவது? அராராத்தா? ஜூதியா? அராராத்திற்கு அருகிலேயே ஜூதி என்றொரு மலை இருக்க, மலைக்கு ஜபல் என்ற சொல்லும் இருந்திருக்க எந்த இடத்தில் கப்பல் தரை தட்டியது என்பதை தெரிவிக்க குழப்பமே ஏற்படாமல் ஜூதி எனும் சொல்லை தேர்ந்தெடுத்த அந்த எல்லாம் வல்ல இறைவனுக்கு என்னே தீர்க்கதரிசனம். ஜூதி என்ற சொல்லே மலையையும் குறிக்கும் என்பதால் இதுவரை மொழிபெயர்த்தவர்கள் ஜூதி மலை என்று மொழிபெயர்த்துவிட்டார்கள். நீங்கள் அப்படியில்லை என்கிறீர்கள். இரண்டில் எதை சரி என்பது. ஒன்று செய்யுங்கள் ஜபல் அல் நூர் என்பதுபோல் ஜூதி அல் உஹத் என்பது போன்று ஒரு சொல்லை மேற்கோள் காட்டமுடியுமா?

உலகின் பல பகுதியில் பல்வேறு காலகட்டங்களில் வெள்ளப்பெருக்கின் அடையாளங்கள் இருக்கின்றன. சிசிலியில், சிவாலிக் பகுதிகளில் வெள்ளத்தின் அடையாளங்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால் அவைகளெல்லாம் நோவாவின் பெருவெள்ளத்தோடு தொடர்புடையனவா? அந்தப்பெருவெள்ளம் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கா? உலகம் முழுமைக்குமா? இந்தக்கதையின் படி வெள்ளம் உலகம் முழுமைக்கும் தான். இல்லையென்றால் அனைத்து மிருகங்களிலும் பறவைகளிலும் புள்ளினங்களிலும் சதைசதையாக ஏற்றிக்கொள்ளச் சொல்லவேண்டிய அவசியமென்ன? உலகின் எல்லாப் பகுதிகளிலும் ஒரே மாதிரியான விலங்குகள் வசிப்பதில்லை. ஒரு சில விலங்குகள் அந்தந்தப் பகுதிக்கேயான சிறப்பு விலங்குகளாக இருக்கும். ஒரு பகுதியை மட்டும் அழிக்க நினைத்த இறைவன் அந்தப்பகுதிக்கான சிறப்பு விலங்கை மட்டும் ஏற்றிக்கொள்ளச்சொல்லாமல் விலங்குகள் ஒவ்வொன்றிலிருந்தும் ஜோடியை ஏற்றிக்கொள்ளச்சொல்வானேன்? இந்த ஒவ்வொன்றிலிருந்தும் எனும் சொல்லுக்கான பொருளை நூஹ் சரியாக புரிந்து கொள்ளவில்லையா அல்லது அந்தச்சொல்லுக்கு (மின் குல்லின்) அந்தப்பகுதியின் சிற்ப்பு விலங்கை குறிக்கும் பொருள் இருக்கிறதா என்பதை நீங்கள் தான் அருஞ்சொற்பொருள் கண்டு விளக்கவேண்டும். அந்தப்பகுதியில் இருக்கும் ஆனால் ஏனைய பகுதிகளில் இல்லாதா விலங்குகளை மட்டும் ஏற்றச்சொல்லியிருந்தால் போதுமானதல்லவா? ஏன் எல்லாவற்றிலும் ஜோடி ஜோடியாக என்று சொல்லவேண்டும்? அல்லது அந்தப்பகுதியில் இருந்த விலங்குகள் வேறு எந்தப்பகுதியிலுமே இருந்திராத அதிசய விலங்குகளாக இருந்தன என்பதற்கு குரானில் வசனம் ஏதேனும் இருக்கிறதா?

இன்றைய அராராத் மலையின் உயரம் நான் கூற வேண்டிய அவசியமின்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். அவ்வளவு உய்ரத்திலுள்ள மலையில் கப்பல் தங்கவேண்டுமென்றால் அந்த உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்திருக்கவேண்டும். கடல் மட்டத்தில் ஒரு சில மீட்டர்கள் கூடினாலே பாதி உலகம் காணாமல் போய்விடும் தெரியுமா உங்களுக்கு? மலை உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்தது உண்மை, எல்லா மிருகங்களையும் ஏற்றிக்கொள்ளச்சொன்னது உண்மை ஆனாலும் வெள்ளம் ஒரு பகுதில் மட்டும் தான், எங்கோ இடிக்கிறது அல்லவா? எவெரெஸ்ட் உயரத்திற்கு வெள்ளம் வரவில்லை என்றாலும் அராராத் அளவிற்கு வந்திருக்கிறது, சரிதானே இப்போது அராராத்தை விட உயரமான இமயமலை, ஆல்ப்ஸ்மலை, ராக்கி மலை, கிளிமஞ்சாரோ போன்ற சில உயரமான மலைகளை தவிர ஏனைய பகுதிகள் மூழ்கியிருக்கும் சரிதானே. அப்போது இதுபோன்ற வெகுசில மலைகளின் உயரத்தில் தங்கியிருந்த மக்களை தவிர ஏனையவர்களெல்லாம் அழிந்திருப்பார்கள் அப்படித்தானே. இப்படிப்பட்ட வெள்ளத்தை உலகம் முழுமைக்கும் வந்த வெள்ளமாக சொல்வது பொருத்தமாக இருக்குமா? இல்லை மொசபட்டோமியா பகுதிக்கு மட்டும் வந்த வெள்ளம் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா?

ராண் யாட் கண்டெடுத்ததாக சொல்லப்படும் மட்கிப்போன பலகையில் இருந்த கார்பனின் அளவு அவர் கொடுத்திருக்கும் இரண்டு பரிசோதனை கூடங்களின் அளவும் மாறுபாடாக இருக்கிறது. ஒன்றில் 1.88 விழுக்காடு மற்றொன்றில் 4.95 விழுக்காடு. மேலும் இந்த அளவு கார்பன் தான் அந்த பகுதியெங்கும் அதாவது அந்த மலைப்பகுதி முழுவதும் கிடைக்கிறது என்பதை முனைவர் பௌம் கார்ட்னெர் சோதனை செய்து காட்டியிருக்கிறார். எனவே ரான் யாட் கண்டெடுத்ததாக குறிப்பிடப்படுவது மரமல்ல. இன்னும் அந்த மலை எரிமலை குளம்புகளாலானது, எனவே மாங்கனீஸ் போன்ற வேதிப்பொருட்கள் கலந்திருக்கும் இதைத்தான் உலோகமாகவும் காட்டுகிறார்.

கல்லாய்ச்சமைந்த மரம் என ரான் யாட் காட்டுவதும் கல்மரமல்ல. இதுவரை உலகில் கண்டெடுக்கப்பட்ட எந்த கல்லாய்ச் சமைந்த மரத்தின் வகையிலும் சாராமலிருக்கிறது. முக்கியமான விசயம் என்னவென்றால் கல்லாய் மாறிய மரம் எனக் காட்டப்படும் ஒன்றில் வளர்வளையங்கள் காணப்படவில்லை. எந்த மரத்துண்டிலும் வளர்ச்சியை குறிக்கும் வரைகள் காணப்படும், கல்லாய் சமைந்த மரத்திலும் இவ்வரைகள் மாறுவதில்லை. ஆனால் இவ்வாறான வரைகள் எதுவும் கண்டெடுக்கப்பட்ட அதில் காணப்படவில்லை. இதுவரை 200 கல்லாய்ச் சமைந்த மரங்களை கண்டெடுத்திருக்கிறார்கள். அனைத்தும் இன்றைய மரவகைகளுடன் தொடர்புடையதாகவே இருக்கின்றன, ஆனால் இதில் மட்டும் எந்த தொடர்பையும் காணமுடியவில்லை. ஏன்? ஆக சாதாரணமாக மலைப்பகுதிகளில் காணப்படும் எடை குறைந்த கூடிய கற்களை மரம் என்றும் கல்லாய்ப் போன மரம் என்றும் காட்டியிருக்கிறார்.

ரான் யாட்டுடன் ஜி பி ஆர் (தரை துளைக்கும் ரேடார்) பணியில் ஈடுபட்டிருந்த டாம் ஃபென்னர் கூறுகிறார், “பலமுறை நாங்கள் பரிசோதனை செய்தும் ஒவ்வொறு முறையும் வேறுவேறான முடிவுகளே கிடைத்தன, ஒரே மாதிரியான முடிவு திரும்பவும் கிடைக்கவில்லை எனவே ஒன்றரை நாளில் ரேடார் பணியை நாங்கள் முடித்துக்கொண்டோம்” என்று. மேலும் அதே இடங்களில் முனைவர் பௌம் கார்ட்னெர் மூலக்கூறு அதிர்வு கருவியை கொண்டு சோதித்துப்பார்த்துவிட்டு “மனித கரங்களினால் பணியப்பட்ட எதுவும் இங்கு இருப்பதற்கு 10விழுக்காடிற்கும் குறைவான வாய்ப்பே இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

1959ல் அந்த இடம் நோவாவின் கப்பலாக அறியப்பட்டதிலிருந்து அங்கு ஆய்வுகளைச் செய்த பலர் இங்கு நோவாவின் கப்பல் இல்லை என்று அறிவித்திருக்கிறார்கள்.
ஜார்ஜ் வன்டேமன்
டான் லாவரிட்ஜ்
டேவிட் மெர்லிங்
டேவிட் ஃபசோல்டு
டாம் ஃபென்னர்
பௌம் கார்ட்னெர்
ஜான் மோரிஸ்
ஹெரால்ட் கஃபின்
இன்னும் பலர். இதன் பிறகும் அங்கு நோவாவின் கப்பல் இருப்பதாக நம்பத்தான் முடியும், ஏற்கமுடியாது.

ஆக மிகத்தெளிவாக அங்கு கப்பலோ படகோ அல்லது அது போன்ற எதுவுமே இல்லை என்பது மட்டுமல்லாமல் அவ்வாறு கூறுபவர்களெல்லாம் தங்கள் மதவாத பொய்களை நிலை நிறுத்துவதற்காக மூளையை மூடிக் கொண்டு முனங்கிக் கொண்டிருப்பவர்களே என்பதும் உறுதி.

நண்பர் இஹ்சாஸின் பதிவில் இன்னொரு அம்சமும் இருக்கிறது. அதாவது நூஹ் என்பவர் 950 ஆண்டுகள் பூமியில் வாழ்ந்தார் என்று குரான் கூறுகிறது. இவ்வளவு நீண்ட காலம் மனிதன் பூமியில் வாழ்வதாக இருந்தால் அதுவரை மனித உடலின் வேதிப்பொருட்கள் தாக்குப்பிடிக்காது எனக் குறிப்பிட்டிருந்தேன். இதற்கு பதில் கூறுவதாக நினைத்துக் கொண்டு நண்பர் இஹ்சாஸ் \\\இது தவறு என்பதற்கு முன் கடவுள் இல்லை என்று நிரூபிக்க வேண்டும். கடவுள் அதீத சக்தி வாய்ந்தவன். இதுவெல்லாம் அவனுக்கு சிரமமானதல்ல என்பதுதான் எமது நிலை. இது தவறு என்பதற்கு முன் கடவுள் இல்லை என்று ஒரு முடிவுக்கு வர வேண்டும். அது வரை இது தவறாகாது. இதுபோல் கேட்கப்படும் கேள்விகளுக்கு இதுதான் பதில்/// கடவுள் இல்லை எனும் அறுதியிலிருந்து தான் நான் வாதிட்டுக் கொண்டிருக்கிறேன். இது வெறும் வாதமல்ல. முடிந்தால் நான் ஏற்கனவே பலரிடம் கடவுளின் இருப்பை மறுத்து கூறியவற்றை மீண்டும் இங்கே கூறுகிறேன். நண்பர் இஹ்சாஸுக்கு திறனிருந்தால் இவைகளுக்கு பதில் கூறிப் பார்க்கட்டும்.

கடவுள் இல்லை என்பதற்கு அறிவியல் ரீதியான காரணங்கள்:
1. எப்போதும் நிலையாக இயங்கிக் கொண்டிருக்கும் ஆற்றல் என்று எதுவுமில்லை.
2. தொடக்கமோ முடிவோ இல்லாத பொருள் என்று எதுவும் இல்லை.
3. எந்த ஒரு பொருளையும் சாராமலும், எந்த ஒன்றிலிருந்து சார்பு பெறப்படாமலும் எதுவுமில்லை.

கடவுள் இல்லை என்பதற்கு வரலாற்றுரீதியான காரணங்கள்:
1. ஆதி மனிதர்கள் வாழ்வில் கடவுள் எனும் நிலை இருந்ததற்கான எந்த சான்றும் கண்டறியப் படவில்லை.
2. பூமியில் மனிதன் எனும் உயிரினம் தவிர ஏனைய உயிரினங்களுக்கு கடவுள் எனும் உணர்வு இல்லை.

கடவுள் இல்லை என்பதற்கு சமூக ரீதியான காரணங்கள்:
1. கடவுளின் தகுதிகள் கூறும் படியான ஆற்றல் இருந்திருந்தால் மனித வாழ்வில் அது செலுத்தியிருக்கும் தாக்கம் மக்களிடம் கண்டறியப்படவில்லை. தெளிவாகச் சொன்னால் மனித வாழ்வின் அறவாழ்வு விழுமியங்கள் அழிந்திருக்கின்றன.
2. கடவுளிடமிருந்து கிடைத்தது என்று சொல்லத்தக்க, சோதித்தறியத்தக்க எதுவுமே கண்டறியப்படவில்லை.

குகையில் தொடங்கிய குழப்பம் இஹ்சாஸ் வரை

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 23

dead sea scrolls
எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இசாஸின் பதிவு: குகைவாசிகளும் குழப்பும் செங்கொடியும்

எத்தனை தெளிவாக இருந்தாலும் குழப்பம் இருப்பதாய் கற்பித்துக் கொண்டால் தான் மதவாதம் நீடிக்க முடியும். இதற்கு தெளிவான சான்றாய் இருப்பது தான் நண்பர் இஹ்சாஸின் பதிவு. முதலில் குறிப்பிட்ட கட்டுரையில் என்ன கூறப்பட்டிருந்தது என்பதை சுருக்கமாக பார்த்துவிடலாம். குரானை மெய்ப்படுத்தும் திட ஆதாரங்களில் ஒன்றான ‘சாக்கடல் சாசனச் சுருள்கள்’ கிருஸ்தவர்களால் மறைக்கப்படுவது ஏன்? ஏனென்றால், ஏசு அதாவது ஈசா போதித்தது இஸ்லாம் தான் என்பதை அது உறுதிப்படுத்துகிறது என்பதால் தான். இது தான் இஸ்லாமியர்களின் பிரச்சாரம். இதை மறுத்து அந்தச் சுருள்கள் இஸ்லாத்தை உண்மைப்படுத்தவில்லை பௌத்தத்தை உண்மைப்படுத்துகிறது என்றும், ஏசு என்றொருவர் வரலாற்றில் வாழ்ந்ததற்கான தடயமில்லை. பௌத்தத்திலிருந்து உருவப்பட்ட கதைகளிலிருந்து உருவகிக்கப்பட்ட ஒரு பாத்திரம் என்றும் எழுதப்பட்டிருந்தது. நம்மை குழப்புவதாக கூறிய நண்பர் இஹ்சாஸ் தெளிவாகக் கூறுவது என்ன?

முதலில் முன்னர் கூறியிருந்தது போலவே கடவுளை மறுத்துவிட்டு பின்னர் பிறவற்றை பேச வேண்டும் என்கிறார். இத்தொடரின் சென்ற பதிவிலேயே இது குறித்த பதிலும் கேள்விகளும் கேட்கப்பட்டு இருப்பதால் நாம் அடுத்தவைகளுக்கு நகர்ந்துவிடலாம். கண்டெடுக்கப்பட்ட ஏடுகளின் காலம் என்ன? கட்டுரையில் கிமு மூன்றாம் நூற்றாண்டு என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் நண்பர் அவைகளின் காலம் என கிமு 150 லிருந்து கிபி 75 வரை என்கிறார். எது சரியானது? நண்பர் இஹ்சாஸ் குறிப்பிட்டிருப்பது கிருஸ்தவ தளங்கள் குறிப்பிடும் காலம். அவை இந்த காலத்தை மட்டுமல்ல கண்டெடுக்கப்பட்ட ஏடுகளில் இருந்தது பழைய ஏற்பாட்டின் வாசகங்கள் தான் என்றும் குறிப்பிட்டிருக்கிறனர். இவைகளை எப்படி ஏற்றுக் கொள்வது என்பதை நண்பர் இஹ்சாஸ் தான் கூற வேண்டும். குறிப்பிட்ட அந்தக் கட்டுரையிலேயே நண்பர் கூறியிருப்பதைப் போன்ற காலம் குறித்து அன்பரொருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலும் அளிக்கப்பட்டிருந்தது. நண்பர் அதை பார்க்கவில்லை போலும். நண்பருக்காக அந்த பதிலை இப்போது மீள்பதிவு செய்து விடலாம்.

\\\அந்தச் சுருள்களின் காலம் குறித்து மாறுபட்ட கருத்துக்களும் இருக்கின்றன. ஏசுவுக்கு 150 ஆண்டுகளுக்கு முன்னதாக என்றும் 200 ஆண்டுகளுக்கு முன்னதாக என்றும் 300 ஆண்டுகளுக்கு முன்னதாக என்றும் மாறுபட்டாலும் அனைவரும் ஏசுவுக்கு முன்னர் என்றுதான் குறிப்பிடுகின்றனர். இணையத்தில் பல தளங்கள் கிமு 150 லிருந்து 70 வரை காலம் என்றும், அவற்றில் இருந்தவை பழைய ஏற்பாட்டின் படிகள் என்றும் குறிப்பிடுகின்றன. இவற்றில் உண்மையில்லை. அவை எஸ்ஸீனர்களுடையவை என்பதில் வரலாற்று ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் இல்லை. எஸ்ஸீனர்கள் கிமு நான்காம் நூற்றாண்டிலிருந்தே அந்தப்பகுதிகளில் இருந்து வந்திருக்கிறார்கள். நாசரேத் எனும் பெயரும் நாசரேயனாகிய கிருஸ்து எனும் சொற்றொடரும் எஸ்ஸீனர்களுக்குறியவை. அதே நேரம் கிமு முதல் நூற்றாண்டுக்குப் பிறகு எஸ்ஸீனர்களைப் பற்றி குறிப்புகளில்லை. இந்தப் பின்னணியையும் சேர்த்து கணக்கிலெடுத்துக்கொண்டே வரலாற்றாய்வாளர்கள் கிமு நான்காம் நூற்றாண்டிலிருந்து இரண்டாம் நூற்றாண்டு வரை என கணிக்கிறார்கள். இதையே நான் கிமு மூன்றாம் நூற்றாண்டு என்று எடுத்துக்கொண்டேன். இதில் பிழையிருப்பதாக நான் கருதவில்லை.///

அடுத்து மறைக்கப்பட்ட அந்த ஏடுகள் குரானை உண்மைப்படுத்துகிறது அதனால் தான் கிருஸ்தவர்கள் அதை மறைத்துவிட்டார்கள் என இஸ்லாமியர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படி இஸ்லாமியர்கள் எவரும் பிரச்சாரம் செய்யவில்லை என்று நண்பர் குறிப்பிட்டிருக்கிறார். அவ்வாறல்ல, நண்பர் இஹ்சாஸ் போல பல இஸ்லாமிய  ஊற்றளித்துக் கொண்டிருக்கும் பிஜே தளத்தில் குரானுக்கான விளக்கவுரையாக இலக்கம் 271ல் இது தெளிவாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. \\\அந்தச் செய்தியிலிருந்து நாம் ஆச்சரியமான ஓர் உண்மையைத் தெரிந்து கொள்கிறோம். ஈஸா (அலை) அவர்களுக்கு இறைவன் இஞ்ஜீல் எனும் வேதத்தை வழங்கியதாகத் திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது. ஆனால் கிறித்தவ சமுதாயத்திடம் அந்த வேதம் நிச்சயமாக இல்லை எனலாம். ஏனெனில் பைபிளின் புதிய ஏற்பாடு என்பது இயேசுவுக்குக் கடவுள் வழங்கியதன்று. மாறாக ஏசுவைப் பற்றி மற்றவர்கள் எழுதிய குறிப்புகள் தான் புதிய ஏற்பாடு. “ராஜ்ஜியத்தின் சுவிஷேசத்தை இயேசு பிரசங்கித்தார்” என்று பைபிளில் கூறப்பட்டுள்ளது. (பார்க்க: மத்தேயு 4:23, மாற்கு 1:14) எந்த இறை வேதத்தை மறைத்தார்களோ அதைத் தான் இயேசுவின் வழி வந்த நல்ல மனிதர்கள் தங்களுடன் எடுத்துச் சென்று குகையில் தங்கினார்கள் என்று முடிவு செய்யப் போதுமான காரணம் இருக்கிறது. “குர்ஆனை ஒத்திருக்கின்றது” என்பது தான் அந்தச் சுருள்களைப் படித்த கிறித்தவ அறிஞர்களின் கருத்தாகும். இஞ்ஜீல் எனும் வேதத்தைக் திருக்குர்ஆன் மெய்ப்பிப்பதாக திருக்குர்ஆனும் பல இடங்களில் குறிப்பிடுகின்றது. அதை வாசித்த பாதிரியார்கள் திட்டமிட்டு மறைத்ததும் இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகின்றது. மனிதர்களால் எழுதப்பட்ட ஏட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளித்து இறைவன் கூறியிருக்க மாட்டான் என்பதும் இக்கருத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றது./// எனவே நண்பர் இஹ்சாஸ் தன் பி(டிவாத)ரச்சாரத்தை அந்த தளத்திலிருந்து தொடங்கட்டும்.

அடுத்து, புத்தருக்கும் ஏசுவுக்கும் உள்ள சில ஒற்றுமைகளை போகிறபோக்கில் குறிப்பிட்டு காட்டுவதைப் போல நண்பர் இஹ்சாஸ் கருதியிருக்கிறார். அவ்வாறல்ல. ஏசு என்பதற்கு வரலாற்றில் வாழ்ந்ததற்கான எந்த தடயமும் இல்லை என்பதை கட்டுரை தெளிவாகவே சுட்டிக் காட்டுகிறது. இவைகளை நண்பர் இஹ்சாஸ் கண்டு கொள்ளாமல் நகர்ந்து விட்ட மர்மம் என்ன? \\\அங்கு கிமு நான்கில் ஆட்சி புரிந்த ஜூலியஸ் சீசர், அவருக்குப்பின் அகஸ்டஸ் சீசர், கிமு மூன்றாம் நூற்றாண்டின் கிரேக்கத்தின் அலெக்ஸாண்டர் என்று பலர் வாழ்ந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. இந்தியாவில் புத்தர் (கிமு 563- 483) சந்திரகுப்த மௌரியர் (கிமு நான்காம் நூற்றாண்டு) அசோகன் (கிமு மூன்றாம் நூற்றாண்டு) போன்ற மன்னர்களுக்கு கல்வெட்டு சான்றுகள் இருக்கின்றன. மன்னர்கள் மட்டுமல்ல. சாக்ரடீஸ் (கிமு 427- 347) அரிஸ்டாட்டில் (கிமு 384- 322) போன்ற தத்துவ அறிஞர்கள், ஈஸ்கிளீஸ் (கிமு 525 – 456) யூரிபிடஸ் (கிமு 480 – 406) ஆஸ்ரிடோபான்ஸ் (கிமு 445 – 385) போன்ற கிரேக எழுத்தாளர்கள் குறித்த விபரங்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால் இவர்களைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் ஒரு புரட்சி வீரரான ஏசு குறித்த எந்தவித ஆதாரங்களும் கிடைக்காமல் போனதெப்படி? ஏசு எனும் ஒருவர் வரலாற்றில் வாழ்ந்திருந்தார் என்பதற்கு முன்வைக்கப்படும் ஆதாரங்களான ரோமர்கள் யூதர்கள் ஆகியோரின் நூல்களான பிலாவியஸ் ஜோசபஸ் எழுதிய தி ஆன்டிகுடீஸ் ஆப் தி ஜெவ்ஸ்(The Antiquities of the Jews), யூதர்களின் சிறப்பைக் கூறும் டால்முட்(Talmud), பிளீனிதியங்கர் ரோமப் பேரரசன் டார்ஜானுக்கு எழுதிய கடிதம், டாஸிடஸ் எழுதிய அன்னல்ஸ் (Annals) போன்ற அனைத்தும் ஐயத்திற்கிடமானவை என வரலாற்றாசிரியர்களால் தெளிவுபடுத்தப் பட்டிருக்கின்றன. மாக்ஸ்முல்லர் இவை குறித்து இவ்வாறு குறிப்பிடுகிறார் “புத்தரும் அவருடைய சீடர்களும் சொல்லிய மொழி நடைக்கும், கிருஸ்துவும் அவருடைய சீடரும் சொல்லிய மொழி நடைக்கும் பெரும் ஒற்றுமை இருப்பதைக் காணலாம். புத்தமத நூல்களில் காணப்படுகின்ற சில உவமைகளும் கதைகளும் புதிய ஏற்பாட்டிலிருந்து எடுத்தது தானோ என்று ஐயம் தோன்றலாம், ஆனால் அவையெல்லாம் கிருஸ்து பிறப்பதற்கு முன்பே எழுதப்பட்டவை”  2000 ஆண்டுகளுக்கு முன்பு பாலஸ்தீனத்தில் நாசரேத் எனும் ஊர் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. பழைய ஏற்பாடில் எந்த இடத்திலும் நாசரேத் எனும் ஊரைப்பற்றிய குறிப்பும் இல்லை. எனவே நாசரேயனாகிய கிருஸ்து எனும் பதம் நாசரேயர்கள் என்றழைக்கப்பட்ட புத்தக்கொள்கைகளால் கவரப்பட்ட குழுக்களையே குறிக்கும்./// இவ்வளவு வரலாற்று ஆதாரங்களுக்குப் பிறகு தான் நிகழ்வுகளின் ஒற்றுமை காட்டப் பட்டிருக்கிறதேயன்றி வெறுமனே ஒற்றுமையை மட்டுமே வைத்துக் கொண்டு இருவரும் ஒருவரே என்று கூறப்பட்டதல்ல.

இந்த இடத்தில் இன்னும் இரண்டு அம்சங்கள்யும் தெளிவுபடுத்த வேண்டும். 1) வரலாற்றில் வாழ்ந்ததாக கருதப்படும் அனேகருக்கு வரலாற்றுத் தடங்களைக் கண்டுபிடிப்பது அரிது. அப்படியான எல்லோரையையும் உறுதிப்படுத்த முடியாதது என்பது போலவே ஏசுவும். ஆனால் இங்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பது ஏசு வரலாற்று மனிதரா? கற்பனைப் பாத்திரமா? என்பதல்ல. ஒரு இஸ்லாமிய பொய்ப் பிரச்சாரத்தை உடைக்கும் வழியில் ஏசுவின் பாத்திரம் குறுக்கிடுகிறது என்பதால் தான். ரோமப் பேரரசை எதிர்த்து அடிமைகளின் எழுச்சி வரலாற்றில் தொடர்ச்சியாக நடந்து வந்திருக்கிறது. இந்த எழுச்சி நாயகர்களின் வரலாறு தான் ஏசுவின் உயிர். அடிமைகளின் எழுச்சியை அடக்க அந்த நாயகர்களின் நினைவைக் கொண்டே செய்யப்பட்ட முயற்சிக்கு உடலாக வாய்த்தது தான் புத்தரின் கதைகளும் உரையாடல்களும். இந்தப் பின்புலத்திலிருந்து தான் ஏசுவைப் புரிந்து கொள்ள வேண்டுமேயல்லாது. புத்தரும் ஏசுவும் ஒருவரே என்பதுபோல் குறுக்கிக் கொள்வது தங்களைத் தாங்களே ஏமற்றிக் கொள்வது போலாகும். 2) ஏசு புத்தரின் நூல்களிலுள்ள கதைகளிலிருந்து பிறப்பெடுத்த பாத்திரம் என்பது போலவே, கிருஷ்ணனும் பௌத்த நூல்களிலிருந்து உருவப்பட்ட பாத்திரம் தான். கிருஸ்துவும் கிருஷ்ணனும் ஒன்றுதான். புத்தரின் நகல்கள், கிருஷ்ணன் இந்தியாவின் ஏசு; ஏசு அரேபிய பகுதியின் கிருஷ்ணன்.

அடுத்து புத்தரையும் ஏசுவையும் ஒப்பிட்டுக் கூறியவற்றில் நண்பர் இஹ்சாஸ் தன்னுடைய கருத்துகளை மறுப்பாக வைக்கிறார். அவரும் சில ஒப்பீடுகளைச் செய்துள்ளார். அதிலும் புத்தரின் வரலாற்றுச் செய்திகளையும், ஏசுவின் மதக் கருத்துகளையும் எடுத்துக் கொண்டு ஒப்பீடு செய்திருக்கிறார். தந்தையின்றி யாரும் பிறந்திருக்க முடியாது அதுவும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு. ஏசுவுக்கு தந்தை இருந்ததாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. இருவருக்குமான வரலாற்று செய்திகளை எடுத்துக் கொள்ளலாம் அல்லது இருவருக்குமான மதச் செய்திகளை எடுத்துக் கொள்ளலாம். மாறாக ஒருவருக்கு வரலாற்றுச் செய்தியையும் மற்றொருவருக்கு மதச் செய்தியையும் எடுத்துக் கொண்டால் வேறுபாடு வருவது தவிர்க்கவியலாதது. இவைகளை விரிவாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஏனென்றால் எது வரலாறு எது புனைவு என்பதில் நமக்கு எந்த மயக்கமும் இல்லை. அதனால் தான் புத்தர் உண்மையில் வாழ்ந்தவர் ஏசு பொய் கதை என்பது போல் எழுதவில்லை. மீண்டும் ஒருமுறை இவற்றைக் குறிப்பிடும் போது எவ்வாறு எழுதப்பட்டிருந்தது என்பதை சுட்டிக்காட்டி விடலாம். \\\புத்தரின் வாழ்வை விவரிக்கும் நூலகளான திரிபீடகங்கள், லலிதவிஸ்தாரம், தம்மபதம் போன்ற நூல்களில் கூறப்படும் புத்தரின் வாழ்வில் நிகழ்ந்த அனேக நிகழ்வுகள் .. .. .. புத்தரின் வாழ்வில் நிகழ்ந்தவையாக கூறப்படும் இந்தநிகழ்வுகள் .. .. ./// அதாவது பௌத்த நூல்களில் கூறப்படும் புத்தரின் நிகழ்வுகளுக்கும் பைபிளில் கூறப்படும் ஏசுவின் நிகழ்வுகளுக்குமான ஒற்றுமை தான் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. என்ன எழுதப்பட்டுள்ளது எப்படி எழுதப்பட்டுள்ளது என்பதை உள்வாங்காமலேயே மேலெழுந்தவாரியாக \\\யாருடைய வாழக்கையாக இருப்பினும் ஏதாவது ஒரு சில விடயங்களில் ஒரு ஒற்றுமை இருக்கத்தான் செய்யும் அதை வைத்துக்கொண்டு இவ்விருவரும் ஒருவர்தான் என்பது மடத்தனம்/// என்று தங்கள் மடத்தனங்களை தாங்களே வெளிக்காட்டிக் கொள்வது மதவாதிகளுக்கு கைவந்த கலை.

மற்றும் இவை குறித்த மேலதிக விபரங்களுக்கு ஜோசஃப் இடமருகு எழுதிய கிருஸ்துவும் கிருஷ்ணனும் கற்பனையே எனும் நூலைக் காண்க.

சரி முதன்மையானவற்றுக்குத் திரும்புவோம். கண்டெடுக்கப்பட்ட அந்த ஏடுகள் குரானை உண்மைப்படுத்துகிறதா? என்பது தானே பிரச்சனை. குரான் இது குறித்து என்ன கூறுகிறது? குரான் குறிப்பிடும் அந்தக் கதையில் ஏடுடையவர்கள் என்ற ஒற்றை வார்த்தையைத் தவிர வேறு ஒன்றுமில்லை. அந்த வசனங்களில் இது குரானை மெய்ப்படுத்துவதற்கான அத்தாட்சி என்று பொருள் படும் எந்த வசனமும் அதில் இல்லை. மாறாக அந்தக் கதை விவரிப்பதெல்லாம் அவர்கள் அங்கு தங்கி மறைந்து வாழ்ந்தார்களா இல்லையா என்பதைத்தான் மையமாக எடுத்துக் கொண்டு கதை சொல்லியிருக்கிறதேயன்றி வேறொன்றுமில்லை.தெளிவாகச் சொன்னால் தங்கள் மன்னனை எதிர்த்து தங்கள் மதக்கொள்கையை சமரசமின்றி எடுத்துவைத்து அதனால் தொடர்ந்து வாழ முடியாமல் போகவே நாடுகடந்து பாலைவன மலைக்குகையில் வந்து தங்கியிருக்கிறார்கள். இது தான் அந்தக் கதையில் முக்கியத்துவம் வாய்ந்ததாய் குறிப்பிடப்பட்டிருக்கிறதே தவிர ஏடு குறித்த கதையல்ல. ஏடுடையோர்கள் என்று ஏன் குறிப்பிட வேண்டும் என்று கேட்கிறார்கள். அது மட்டுமா குறிப்பிடப்பட்டிருக்கிறது ஏட்டைவிட அதிகமாய் அவர்களின் நாய் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. என்றால் அந்த நாய்க்கு ஏதேனும் கதை வைத்திருக்கிறார்களா??

ஒருவேளை சாக்கடல் சாசனங்கள் என்று எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் இது போல் எந்தவிதமான புளகமடைதல்களும் வந்திருக்காது. கண்டுபிடித்து அவர்கள் அது பழைய ஏற்பாடு என்கிறார்கள். இவர்களோ குரான் என்கிறார்கள். இரண்டு குப்பைகளையிம் ஒதுக்கிவிட்டு வர்லாற்றின் ஒளியிலிருந்து பார்த்தால் தான் உண்மை புரியும். இதைத்தவிர வேறு வழியில்லை.