செவ்வாய், 1 ஜூலை, 2014

அறிவியலின் நெற்றியடி! பைபிளின் மோசடி!!


அறிவியலின் நெற்றியடி! பைபிளின் மோசடி!!
டார்வின்
கி.பி. 1860-ஆம் வருடம், ஜூன் மாதம். இங்கிலாந்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வளாகம் மக்கள் வெள்ளத்தால் ததும்புகிறது; பற்பல நாடுகளிலிருந்து வருகை தந்திருக்கும் அறிஞர் பெருமக்கள், என்னதான் நடக்கும் என்று கிசுகிசுத்தவாறு அமர்ந்திருக்கும் பிரபு குலத்தவர்கள். நடைபெற இருந்த மாபெரும் விவாதப் போரைப் பற்றி ஆரவாரத்துடன் பேசிக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டம் என ஆக்ஸ்போர்டு வளாகம் அதிர்ந்து கொண்டிருந்தது.
ஆக்ஸ்போர்டின் கலகலப்பிற்கு காரணம் உண்டு, ‘இயற்கைத் தேர்வின் மூலம் உயிரினங்களின் தோற்றம்’ என்ற புத்தகத்தை வெளியிட்டு அன்றைய இங்கிலாந்தில் ஒரு சூறாவளியைக் கிளப்பியவர் சார்லஸ் டார்வின். பரிணாமத் தத்துவத்தை 230 பக்கங்களில் விவரிக்கும் இச்சிறுநூல் ஏற்படுத்திய புயலில் விவிலியமும் பறந்து சென்றது.
இறைவனின் மறைவாக்கு கேள்விக்குள்ளாக்கப்படுவதை கிறித்தவ பாதிரிகள் கடுமையாக எதிர்த்தார்கள். பொதுமேடையில் விவாதத்திற்குத் தயாரா என்று டார்வினின் ஆதரவாளர்களுக்கு சவால் விட்டனர்.
மதத்தின் பிடியிலிருந்து அறிவியலை மீட்கும் கடமையுணர்வுடன் ஆக்ஸ்போர்டு விவாதத்திற்கு வருகை தந்தனர் டார்வினின் ஆதரவாளர்களான ஹக்ஸ்லியும், ஹூக்கரும். அறிவின் அடக்கத்துடன் அமர்ந்திருந்த இவ்வறிஞர்களின் எதிரில் ஆக்ஸ்போர்டு மதத்துறையின் பிரபலமான மதகுரு பிஷப் வில்பர் போர்ஸ் கம்பீரமாகத் தலை நிமிர்ந்து வீற்றிருந்தார். அவரைச் சுற்றி வெண் தூண்களாய் ஆண்டவனடியார்கள் மூளையைச் சாணை பிடித்துக் கொண்டு (!) அமர்ந்திருந்தனர்.
விவாதம் தொடங்கிற்று. வேத நூலை முத்தமிட்டு, சிலுவை ஏந்திய கரங்களுடன் தொண்டையைக் கனைத்துவிட்டு பேச ஆரம்பித்தார் பிஷப், ”மக்களே! பரமபிதாவின் பெயரால் உங்களை வேண்டுகிறேன். சாத்தானின் அவதாரமான சார்லஸ் டார்வின், நீங்களெல்லாம் குரங்கிலிருந்து தோன்றியவர்கள் என கூசாமல் கூறியிருக்கிறான். பாலூட்டி சீராட்டி வளர்த்த உங்கள் பாட்டன்மார்களும், முப்பாட்டன்மார்களும் குரங்குகளா? இதை ஏற்கப் போகிறீர்களா? எனது கேள்விக்கு இங்கு அமர்ந்திருக்கும் குரங்கின் சீடர்கள் என்ன பதில் தருவார்கள். இவர்கள் குரங்கிலிருந்து உதித்ததாகச் சொல்வது தன் பாட்டன் வழியாகவா, பாட்டி வழியாகவா” என்று கேலி செய்த திருப்தியுடன் இறுதியில் ‘டார்வினின் ஆராய்ச்சி சத்தியமறையின் புனிதக் கொள்கைக்கு எதிராக இருப்பதாகக் கூறி இருக்கையில் அமர்ந்தார்.
‘புனித’க் கொள்கையால் உணர்வூட்டப்பட்ட மக்களின் கரவொலியின் நடுவில் பேச வந்தார் டார்வினின் சீடர் ஹக்ஸ்லி.
வெறியுட்டப்பட்ட மத உணர்வுகளின் மத்தியில் உண்மையைப் பேசுவதற்கு ஒரு மனிதனுக்கு எத்தனை தைரியம் வேண்டும். மதமெனும் குகையிலிருந்த மக்களை விஞ்ஞான உண்மையெனும் ஒளியை நோக்கி ஈர்ப்பதற்கு அனைத்து அவலங்களையும் சகித்துக்கொண்டார் ஹக்ஸ்லி. டார்வினின் ஆராய்ச்சியை விரிவாக பேசினார். ஒரு பாதி மக்களையாவது உண்மையினை ஏற்கவைத்தார். பொது விவாதம் முடிந்தது.
ஆனால் டார்வின் எழுப்பிய புயல் ஓயவில்லை. குரங்குகளை கண்ட இடமெல்லாம் கல்லாலடித்து துரத்தினார்கள் மறை உணர்வு கொண்ட மக்கள்.
இங்கிலாந்தின் தேவாலயங்களில்,கருப்பு உடை தரித்த பக்த கோடிகள், கால்களின் கீழ் டார்வினின் புத்தகத்தை மிதித்தவாறு இறைவனின் புனிதக் கொள்கையை சாத்தானாகிய டார்வினிடமிருந்து காப்பதாக உறுதி பூண்டார்கள்.
கி. பி. 1950 – ‘பொதுவுடைமைப் பூதம்’ ஐரோப்பிய நாடுகளைப் பற்றிப் பரவும் காலம், கம்யூனிஸ்ட் சாத்தான்களிடமிருந்து புனிதக் கொள்கையை காப்பதற்க்கு போப்பாயஸ் XII எச்சரிக்கிறார், ”பரிணம வாதத்தை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் இதைக்கொண்டு பொருள் முதல்வாதிகளும், நாத்திகர்களும் உலகை உருவாக்கிய தேவனின் பங்கை மறைக்கிறார்கள். எந்த உயிரின மூலப்பொருளில் இருந்து மனிதன் தோன்றினானோ, அதைப் படைத்தவன் தேவனே” என்று அருள்மொழிந்து பரலோகம் சென்றார்.
கி.பி. 1996 – வாடிகன் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு போப் ஜான் பால் II சொல்வதாவது. ‘மனிதன் ஒற்றை அடியில் உருவாக்கப்பட்டவன் என்பதில்லை. தேவனால் படிப்படியாக பரிணாம வளர்ச்சியின் மூலம் உருவானவன் என்பதை ஏற்கலாம்’ சென்ற நூற்றாண்டில் (டார்வினால்) வெளியிடப்பட்ட பரிணாம வளர்ச்சி பற்றிய தத்துவம், ஆய்வுசெய்யும் அறிஞர்களுக்கும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும் குறிப்பிடதக்க பங்காற்றியிருக்கிறது. ஆனால் அனைத்திற்க்கும் மூலகர்த்தா தேவன்தான் என்று ஏற்கனவே போப் பயஸ் XII அருளியிருப்பது முக்கியமான ஒன்றாகும்”.
போப் அவர்களே! காலில் போட்டு மிதித்த சாத்தானின் கருத்தை 137 ஆண்டுகள் கழித்து சிறிது ஏற்கிறோம் என்று ஏன் நடிக்க வேண்டும்? உலகத் தோற்றம் குறித்து பைபிள் கூறுவது நீங்கள் அறியாததல்ல.’
அறிவியலின் நெற்றியடி! பைபிளின் மோசடி!!
கலீலியோ
‘ஐந்து நாட்களில் அண்ட _ பிண்ட சராசரங்களைப் படைத்த பரமபிதா, ஆறாவது நாள் களிமண்ணை உருட்டி ஆதாமையும், அவன் விலா எலும்பிலிருந்து ஏவாளையும் படைத்து விட்டு ஏழாவது நாள் ஓய்வெடுக்கச் சென்றார்.”
ஆறு நாட்கள் வேலை, ஏழாவது நாள் விடுமுறை என்பது தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமையை உங்கள் பரமபிதாவுக்கு வழங்குவதில் எமக்கு ஆட்சேபணையில்லை.
ஆனால் டார்வினின் பரிணாமத் தத்துவத்தை சிறிது ஏற்றுக் கொண்டாலும் பைபிளின் முதல் அத்தியாயம் தவறாகுமே! மாற்ற வேண்டுமே!
இல்லை. எதுவும் மாற்ற வேண்டியதில்லை. போப்பின் அறிக்கைகளுக்கு பொழிப்புரை தருகிறார் கத்தோலிக்க திருச்சபையின் தகவல் தொடர்பாளர் பிரான்சிஸ் மானிஸ்கால்கோ. அதாவது போப்பின் பரிணாமத் தத்துவம் பற்றிய கருத்தை, அவர் மதத் தலைவர் என்ற முறையில் கூறியதாகவோ, கத்தோலிக்கர்களுக்கு வழிகாட்டும் கோட்பாடு என்ற முறையில் சொல்வதாகவோ தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாதாம்.
எங்களுக்குப் புரிகிறது. ஏன் இந்த இரட்டை வேடம்?
விஞ்ஞானிகள் தாங்கள் கண்ட உண்மைகளுக்கு உங்களின் அங்கீகாரத்தை வேண்டி நின்ற காலத்தில் அதை மறுத்தீர்கள். இன்று சந்திரனுக்கு விண்கலம் அனுப்புவது முதல், கணிப்பொறியின் இண்டர்நெட் வரை எந்த விஞ்ஞானியும் உங்களது அக்மார்க் முத்திரைக்கு ஏங்கவில்லை.
ஆனால் மதம் உயிர் வாழ்வதற்கும், காலத்திற்கேற்றவாறு புனரமைப்பதற்கும் அறிவியல் தேவைப்படுகிறது உங்களுக்கு. அதிலும் கடுகளவாவது நேர்மை இருக்கிறதா? இவ்வளவு காலம் திருச்சபை அறிவியல் அறிஞர்களைத் தவறாக நடத்தியது _ இனி அப்படிச் செய்யமாட்டோம் என்று குற்றம் புரிந்த உணர்வுடன் பாவமன்னிப்பு பெறுவதுதானே நியாயம்!
அறிவியலின் அற்புதங்களை அனுபவித்துக்கொண்டு தேவனின் ‘அற்புதங்களை’ப் பிரச்சாரம் செய்வது; பிறகு தேவனின் மகிமை காப்பதற்கு அறிவியலை அவமதிப்பது என்ற திருச்சபையின் திமிருக்கும், இரட்டை வேடத்திற்கும் நீண்ட வரலாறு உண்டு.
மனிதனின் இன்பம் ததும்பும் வாழ்க்கை பரலோகத்தில் மட்டும்தான் என்று மாயை காட்டிய மதவெறியர்களின் கூற்றை பொய்யாக்கி பூமியில் அந்தகைய அற்புதங்களைச் சாதித்திருக்கிறது அறிவியல். நேற்றைய வானொலி முதல் இன்றைய கணிப்பொறி வரை அதன் சாதனைகள் தொடருகிறது. மனித குலத்தின் இத்தகைய பிரம்மாண்டமான அறிவியல் – தொழில் நுட்ப புரட்சிக்கு அடிப்படையான விஞ்ஞான உண்மைகளைக் கண்டவர்கள் மத்திய கால விஞ்ஞானிகள்.
இயற்கையின் புதிரை விடுவிக்க காட்டிலும், களத்திலும், கடலிலும் திரிந்தார்கள். ஊனையும் – உயிரையும் வருத்தி தான் கண்ட உண்மையை நிருபிக்க தளராமல் போராடினார்கள். மதத்தின் பிடியிலிருந்து மனித சிந்தனையை விடுவிக்க திருச்சபையின் கழுவாய்களுக்கு தங்களது உயிரைக் கொடுத்தார்கள்.
பேராற்றல் மிக்க சிந்தனையும், போராட்டமும் கொண்ட இவர்களைத்தான் மாபெரும் மனிதர்கள் என்று குறிப்பிடுகிறார் ஏங்கெல்ஸ். இவர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தமும் அறிவியல் உலகம் அசுர வேகத்துடன் வளரக் காரணமாயிருந்தது. இவர்களது இழந்து போன வாழ்க்கையில்தான் இருபதாம் நூற்றாண்டின் மனித குல வாழ்க்கை உயிர் வாழுகிறது.
இத்தகைய ‘மாபெரும் மனிதர்களுக்கு’ எதிராக போப்பும், திருச்சபையும், ஏனைய பாதிரிகளும் நடத்திய பயங்கரவாத நடவடிக்கைகளை அறியும் நாகரீக உலகின் மனிதர்கள் எவரும் வெட்கப்படவேண்டும்; கோபம்கொள்ள வேண்டும்.
அறிவியலின் நெற்றியடி! பைபிளின் மோசடி!!
கோபர்நிகஸ்
அறுவை சிகிச்சையின் போதும், பிரசவத்தின் போதும் வலிதெரியாமல் இருப்பதற்காக பயன்படும் குளோராஃபார்ம் எனும் மயக்க மருந்தை இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் யங் சிம்ஸன் சென்ற நூற்றாண்டில் கண்டுபிடித்தார். இதற்கு திருமறையில் ஆதாரமிலையே என்று கடுமையாக எதிர்த்தார்கள் பாதிரிமார்கள். ‘கஷ்டத்தில் நீ குழந்தை பெறுவாய்’ எனும் பைபிளின் வாக்கியத்தைக் கொண்டு தாய்மார்கள் பிரசவத்தின் போது மயக்க மருந்து பயன்படுத்தக் கூடாது அப்போதுதான் தாய்ப்பாசம் இருக்க முடியும் என் வற்புறுத்தினார்கள்.
இரத்தத்தை வகைபிரித்து, இரத்த வங்கியில் சேமிக்கப்படும் முறையினால் உலகமெங்கும் பலகோடி மனித உயிர்கள் காப்பாற்றப்படுகின்றது. மனித ரத்தம் பற்றிய ஆய்வை நடத்திய ‘குற்றத்திற்காக’ செர்வெட்டஸ் எனும் விஞ்ஞானி கழுமரத்தில் ஏற்றி உயிருடன் கொளுத்தப்பட்டார். பரமபிதாவின் புனிதம் காக்க இந்த தண்டனை வழங்கியவர் கால்வின் என்ற புராட்டஸ்டன்ட் பாதிரியார்.
தேவனின் மகிமை கூறி ஆவியெழுப்ப, விமானமேறி உலகைச் சுற்றி சுற்றி வருகிறார்கள் சுவிசேசத்தின் ஊழியர்கள். தேவனின் செய்தியை திருச்சபையின் விண்கோள்கள் பூமி உருண்டையின் மீது பொழிந்த வண்ணம் உள்ளன. ஆனால் உலகம்  உருண்டையானது, தட்டையானதல்ல, பூமி சூரியனைச் சுற்றிவருகிறது என்று சொன்ன கியார்டனே புருனோவை உயிரோடு கொளுத்தினார்கள் கத்தோலிக்க மத குருமார்கள்.
‘வானுலகக் கோள்களின் சுழற்சிபற்றிய’ தனது கண்டுபிடிப்பை 36 ஆண்டுகளுக்கு முன்பே நூலாக எழுதியும், திருச்சபையின் கொலை வெறிக்குப் பயந்துபோன கோப்பர்நிகஸ் இறுதியில் தனது மரணப்படுக்கையில் இருந்து வெளியிட்டார்.
பூமியின் இயக்கத்தையும், சூரியனைச் சுற்றி வருவதையும் கண்டு சொன்ன கலிலீயோ திருச்சபையினால் சித்ரவதை செய்யப்பட்டார். அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் கலிலீயோ விவிலியத்தின் ‘உலகம் பற்றி உண்மைகளை’ ஏற்று தன் கண்டுபிடிப்புகளை மறுக்க வேண்டியிருந்தது. கலிலீயோவின் தொலைநோக்கியை சாத்தானின் கருவி என்றார்கள் கிறித்தவ பாதிரிகள்.
கி.பி. 370-இல் அலெக்சாண்டிரியாவில் (இன்றைய கெய்ரோ நகரம்) அரும்பாடுபட்டு சேர்த்துவைத்த நூலகத்தையும், அருங்காட்சியகத்தையும் ஆர்ச் பிஷப் சிரில் தலைமையிலான பாதிரிப்படை சூறையாடிக் கொளுத்தியது. நூலகத் தலைவரும் பெண் விஞ்ஞானியுமான ஹைப்பேஷியாவை சித்திரவதை செய்து கொளுத்தினார்கள்.
விஞ்ஞானிகளை வேட்டையாடிய திருச்சபையின் ரத்தக்கறை படிந்த வரலாற்றின் ஒரு சில துளிகள்தான் இவை. அனைத்துலக பாதிரிகளின் எண்ணிக்கையை விட அவர்கள் இழைத்த குற்றங்களின் எண்ணிக்கை அதிகமானதாகும்.
இன்று மதிப்பிட முடியாத அளவுக்கு சொத்துக்களைக் குவித்து வைத்துக்கொண்டு திருச்சபையின் பாதிரிகள் வாழும் உல்லாச வாழ்க்கைக்கு வசதிக்ள செய்தது அறிவியல்தான். விவிலியம் அல்ல.
கூன் விழுந்த முதுகுடன், மண்புழுவை மட்டும் மணிக்கணக்காகப் பார்த்துக்கொண்டிருப்பார் டார்வின். தான் கண்ட மயக்க மருந்தை சோதனை செய்ய தன்னுடம்பையே கருவியாக்கி பல தடவை மயக்கமடைந்தார் சிம்ஸன். எந்த உண்மையையும் சோதித்தறிய அலைந்து திரியும் கலிலீயோ தன் சொந்த வாழ்வின் எழிலைத் துறந்தார். மரணப்படுக்கையிலும் கூட கோள்களின் அமைப்பு பற்றி ‘பிதற்றிக்’ கொண்டிருந்தார் கோப்பர்நிகஸ். உயிரோடு கொளுத்தப்பட்ட போதும் விவிலியத்தின் முட்டாள் தனத்தை ஏற்க மறுத்தார் புருணே.
எதிர்காலத்தில் திருச்சபை தமக்கு அங்கீகாரம் வழங்கும் என்ற நம்பிக்கையிலா இவர்கள் தங்களை வருத்திக்கொண்டார்கள்?
தேவனின் ஊழியர்களே சொல்லுங்கள். யார் பாவிகள், யார் சத்தான்கள்.
குளிரூட்டப்பட்ட அறையில் நித்திரை கொண்டு, காலை எழுந்து உயர்தர ஒயினைக் குடித்து, வறுத்த முழுக்கோழியை முழுங்கி, பளபளக்கும் வெண்பட்டு அங்கியை உடுத்தி, மாருதி காரில் பவனி வந்து, தேவாலயத்தில் கூடியிருக்கும் மந்தைகள் முன்னால், புளித்த ஏப்பத்துடன், பாதிரி திருவாய் மலர்வார், ”கஷ்டத்தில் ஜீவிக்கின்ற கர்த்தரின் குழந்தைகளே சாத்தான்களிடமிருந்து விலகியிருங்கள்.”
எங்கள் விஞ்ஞானிகளின் கால் தூசிகூடப் பெறாத பாதிரிகளே இரண்டாயிரம் ஆண்டுகளாக நீங்கள் செய்துவரும் தேவ ஊழியம் இதுதானே!
‘திருமறையில் ஆதாரமில்லையே’ என்ற எந்த அறிவியல் உண்மைகளை மறுத்து விஞ்ஞானிகளை அழித்தீர்களோ அதே அறிவியலை உங்களுடைய வாழ்க்கையில் வெட்கமில்லாமல் பயன்படுத்தி வருகிறீர்களே. சுவிசேசப் பிரசங்கிகளே பதில் சொல்லுங்கள்.
அறிவியலின் நெற்றியடி! பைபிளின் மோசடி!!
புருணோ
போயிங் 707 விமானத்தில் அனைத்துப் பாதிரிகளையும் அள்ளிப்போட்டு இமயமலையின் உச்சியில் கொண்டுபோய், பாராசூட்  இல்லாமல் தள்ளிவிட்டால் நாங்கள் குற்றவாளிகளல்ல; ஏனென்றால் புவி ஈர்ப்புவிசையை கண்டுபிடித்த நியூட்டன் பைத்தியம் என்று பட்டம் கட்டியது திருச்சபைதான்.
குடல்வால் அறுவை சிகிச்சைக்காக வாடிகனில் 3 ஆண்டுகள் தலைமறைவாயிருந்த போதுதான் போப் முன்னர் கண்ட அறிக்கையை வெளியிட்டார். சிம்ஸனின் ஆவியும், செர்வெட்டஸின் ஆவியும் போப்பிடம் வந்து நியாயம் கேட்டதோ! குளோரோஃபாமும், ரத்தமும் கிடையாது என மறுத்திருந்தால் போப்பின் கதி என்ன? அறிவியலின் ஒழுக்கம் அவ்வாறு செய்ய அனுமதிக்கவில்லை. ஆனால் கருணையே உருவான கடவுளின் ஒழுக்கம்தான் அதை அனுமதிக்கிறது.
இப்படி கொலை பாதக வரலாற்றைத் தெரிந்து கொண்டும் கல்லுளி மங்கன் போல சாந்த சொருபீயாகக் காட்சியளிப்பதற்குத்தான் கிறித்தவப் பாதிரிகளுக்கு பத்தாணாடு கால பயிற்சி கொடுக்கிறார்கள் போலும்.
‘கிறித்தவத்தின் மாபெரும் ஞானி (ஏசு கிறிஸ்து) மக்களின் ஆத்மாக்களுக்கு விடுதலை கோரி, தமது உடம்பைத் தியாகம் செய்தார்; நவீனமான, கல்வியறிவு மிகுந்த ஞானியோ (பாதிரி) தனது சொந்த ஆத்மாவின் விடுதலைக்காக மக்களின் உடம்புகளைத் தியாகம் செய்கிறார்’ என்று காரல்மார்க்ஸ் சொன்னதை நிரூபிக்கிறது 2000-ம் ஆண்டு கால திருச்சபையின் வரலாறு.
மனித குலத்தின் ஊழியர்களான விஞ்ஞானிகள் உயிர் காக்கும் முறைகளைக் கண்ட போது தேவனின் ஊழியர்களான பாதிரிகளோ கழுமரத்தைக் கண்டுபிடித்தார்கள்.
எனவேதான் தேவகுமாரனைச் சிலுவையில் ஏற்றியவன் பிலாத்தா, திருச்சபையின் முன்னோர்களா என்ற சந்தேகம் வருகிறது.
ஞாயிற்றுக் கிழமைதோறும் கோடிக்கணக்கான மக்களுக்குப் பாவ மன்னிப்பு அள்ளி வீசும் பாதிரி வகையறாக்கள் 2000 ஆண்டுகளாகச் செய்து வரும் குற்றங்களுக்கு யாரிடம் மன்னிப்பு பெறுவார்கள்? ஒருவருக்கொருவர் பாவத்தையும் மன்னிப்பையும், பரிமாறிக்கொள்வார்களா? விவிலியம் இதற்கு என்ன தீர்ப்பு சொல்கிறது?
விஞ்ஞானம் வளர்ந்து விட்டதால் பூவுலகின் ஒழுக்கம் கெட்டுப்போய்விட்டது என்று இறுதி அஸ்திரம் ஒன்றை ஏவுகிறார்கள் பைபிளின் ஒழுக்கசீலர்கள். அதாவது களிமண்ணிலிருந்து ஆதாம் தோன்றினான் என்றால் ஒழுக்கம். பரிணாம வளர்ச்சி என்றால் ஒழுக்கக் கேடு. பூமி தட்டை என்றால் ஒழுக்கம். உருண்டை என்றால் ஒழுக்கக்கேடு. அதாவது பொய்யும், முட்டாள்தனமும் ஒழுக்கம். உண்மையும், பகுத்தறிவும் ஒழுக்கக் கேடு.
இந்த ‘ஒழுக்கத்தை’ப் பிரச்சாரம் செய்ய அனுமதிக்காததால் முன்னாள் சோசலிச நாடுகளில் கம்யூனிஸ்ட்டுகள் கிறித்துவ மதத்தைக் ‘கொடூரமாக’ ஒடுக்கினார்கள் எனக் கூப்பாடு போடுகிறார்கள். ‘புதிய ஏற்பாட்டின்’ காவலர்கள். ரசியாவிலும், சீனாவிலும் இந்த ‘ஒழுக்கத்திற்கு’க் கிடைத்த வெற்றியைத் தான் திருச்சபையும், தேவனாகிய அமெரிக்காவும் கைகோர்த்துக் கொண்டாடுகிறார்கள்.
இரத்தக் கறை படிந்த வரலாறு திருச்சபைக்கு மட்டும் சொந்தமானதல்ல; பார்ப்பன இந்து மதமும், இசுலாமும் தனித்தனியே வேத புத்தகங்கள் வைத்திருந்தது போலவே, தங்கள் சொந்தக் கழுமரங்களையும் நிறுவியிருந்தார்கள்.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹவின் திருநாமத்தால் ஆரம்பிக்கும் திருக்குர்-ஆனுக்கு 35 சிறப்புப் பெயர்கள் உண்டு. அதில் ஒன்று அந்நதீர்-அச்சுறுத்தி எச்சரிப்பது. பைபிளில் பரம்பிதா உலகை ஆறுநாட்களில் படைத்தார். குர்-ஆனில் அல்லா உலகை ஆறு கட்டங்களாகப் படைத்தார். பரமபிதா களிமண்ணில் இருந்து ஆதாமைப் படைத்தார். அல்லாஹ் சுட்ட களிமண்ணிலிருந்து ஆதாமைப் படைத்தார். பைபிளுக்கம் குர்-ஆனுக்கும் இடைவெளி 557 ஆண்டுகள்.
அறிவியலின் நெற்றியடி! பைபிளின் மோசடி!!
சிம்சன்
ஆனால் கடவுள் தங்களை எப்படிப் படைத்தார் என்ற உண்மையைத் திருக்குர் ஆன் விளக்கத்திலிருந்து தெரிந்து கொள்வதற்கு முன்னரே 6 நூற்றாண்டுகளுக்கு முன் இருந்த சிந்து சமவெளித் திராவிடர்கள் கடவுளைப் படைத்து விட்டார்கள் –சுட்ட களிமண்ணைக் கொண்டு.
தசாவதார தத்துவத்தை கைவசம் வைத்திருக்கின்ற பார்ப்பனர்களுக்கு படைப்புத் தத்துவம் பற்றி கவலை இல்லை. அப்படி என்றால் டார்வினின் பரிணாம தத்துவம்? தஞ்சை சரபோஜி நூலகத்தில் உள்ள ஓலைச் சுவடிகளிலிருந்து திருடப்பட்டதாக இருக்கலாம்.
இந்தக் கூற்றை திட்டவட்டமாக சைவர்கள் மறுக்கிறார்கள். தசாவதார நாயகன் விஷ்ணுவைப் படைத்தவன் சிவன் தான் என்கிறார்கள்.
ஆனால் கோஷ்டிப் பூசலின்றி அவர்கள் ஏற்கும் படைப்புத் தத்துவம் ஒன்று வேதத்தின் புருஷ சூக்தத்தில் இருக்கிறது. விராட் புருஷனின் தலையிலிருந்து பிராமணர்களும், தோளிலிருந்து சத்திரியர்களும், தொடையிலிருந்து வைசியர்களும், பாதத்தில் இருந்து சூத்திரர்களும் தோன்றினார்கள் என்ற ‘உயரிய’ படைப்புத் தத்துவம்தான் அது.
ஒரு வேளை டார்வின் தத்துவத்தை அவர்கள் ஏற்றுக் கொள்வதாக இருந்தாலும், தரத்தால் பிரிக்கப்பட்ட நான்கு வகைக் குரங்குகள் அவர்களுக்கு தேவை.
ஈரேழு பதினாலு உலகங்களிலிருந்தும் கடவுளைத் துரத்தும் பணியை விஞ்ஞானிகள் செய்து விடுவார்கள். அதில் ஐயமில்லை.
ஆனால் கடவுளைத் துரத்துவதைவிடக் கடினமான பணி கடவுளின் ஏஜெண்டுகளைத் துரத்துவதுதான். அதை விஞ்ஞானிகள் செய்ய முடியாது. அதற்குச் சமூக விஞ்ஞானிகள் வேண்டும். ஆம். கம்யூனிஸ்டுகள் வேண்டும்.

கடவுளை நொறுக்கிய துகள்!


கடவுள்-துகள்
“கடவுள் துகள்” என்ற பெயரில் ஹிக்ஸ் போசோன் அழைக்கப்படும் காரணத்திற்காகவே, “அறிவியலால் கடவுளை வரையறுக்க முடியுமா?” என்ற தலைப்பில் என்.டி.டி.வி ஆங்கிலத் தொலைக்காட்சி ஒரு விவாதத்தை ஒளிபரப்பியது. கடவுள் இருப்பது அங்கீகரிக்கப்பட்ட உண்மை போலவும், அதனை வரையறுக்கும் ஆற்றல் அறிவியலுக்கு இருக்கிறதா இல்லையா என்பது மட்டுமே பிரச்சினை போலவும் காட்டுகின்ற ஒரு பித்தலாட்டத் தலைப்பு!
ஜக்கி வாசுதேவ், டில்லி கத்தோலிக்க திருச்சபையின் டொமினிக் இமானுவேல், விவேகானந்தா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆத்ம பிரியானந்தா – இவர்கள் ஆன்மீகத்தரப்பு. புஷ் பார்கவ், மாலிகுலார் பயாலஜிஸ்ட் மற்றும் பேரா. ராஜாராமன், இயற்பியல் பேராசிரியர் இருவரும் அறிவியல் தரப்பு.
முகத்தில் முட்டாள் திமிரும், அசட்டுத் தற்பெருமையும் பளிச்சிட, மிகை நடிப்புத் தோரணையில், “அறிவியலும் தேடுகிறது, ஆன்மீகமும் தேடுகிறது” என்று கார்ப்பரேட் ஆன்மீக வியாபாரிகளுக்கே உரிய சொல்விளையாட்டை தொடங்கினார் ஜக்கி. “நீ தேடுவது வேறு அறிவியல் தேடுவது வேறு, அறிவியல் தேடுகின்ற முறையும் வேறு” என்று நாகரிகமான மொழியில் அதைக் கத்தரித்தார் பார்கவ்.
“பிரபஞ்சத்தின் 4% மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாக அறிவியலாளர்களே கூறியிருக்கிறார்கள். மிச்சமுள்ள 96 விழுக்காடு பிரபஞ்சம் பொருளால் ஆனது அல்ல, அதைத்தான் ஆன்மீகம் என்கிறோம்”
என்றார் ஜக்கி. “பட்டா இல்லாதவன் சொத்தெல்லாம் என் சொத்து. கண்டுபிடித்தது அறிவியலுக்கு, கண்டுபிடிக்காததெல்லாம் கடவுளுக்கு” என்று விளக்கும் இந்த தில்லுமுல்லு வாதத்தின் மீது ராஜாராம் காறி உமிழ்ந்த பிறகும் ஜக்கி சளைக்கவில்லை.
“அறிவியல் எல்லாவற்றையும் அறுத்து உண்மையைத் தேடுகிறது. அணுவைப் பிளந்து பார்க்கிறது. உங்களை அறுத்துப் பார்த்து நீங்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள முடியுமா?”
என்று பொளந்து கட்டவே, ‘முடியல‘ என்று சரிந்து விட்டனர் அறிவியலாளர்கள். “பிரபஞ்சம் மலை, சிற்றெறும்பாகிய நாம் மலையை எப்படி அறிய முடியும்?” என்றார் துணைவேந்தரான சாமியார். தன் முன் இருப்பது மலை என்பதை தெரிந்து கொள்ள முடிந்த எறும்பால், மலையின் இரகசியத்தை ஏன் தெரிந்து கொள்ள முடியாது என்று அந்த துணைவேந்தருக்கு உரைக்கவில்லை.
“அறிவியல் ஒரு துகளோடுதான் போராடிக் கொண்டிருக்கிறது. இன்னும் அது பொருளையே என்னவென்று அறியவில்லை. ஆன்மாவை ஆராய்ந்து பார்ப்பதற்கு அது இன்னும் வெகுதூரம் போகவேண்டும்”
என்று மீசையில் மண் ஒட்டாத தோரணையில் பேசினார் இமானுவேல்.
“அதிருக்கட்டும். பைபிள் கூறும் படைப்புக் கோட்பாடு இனியும் செல்லுபடியாகுமா?” என்று அவரைக் கேட்டதற்கு,
“ஆதி ஆகமத்தில் சொன்னபடி 6 நாளில் கடவுள் உலகத்தைப் படைத்திருக்க வேண்டும் என்றில்லை. இப்போது அறிவியல் சொல்வது போல பெருவெடிப்பாக இருக்கலாம். இதுவும் கடவுளின் படைப்புதான்”,
கோட்டையில்லே கொடியும் இல்லே, அப்பவும் நான் ராஜா என்றார் கூச்சமே இல்லாமல்.
புலன்களால் அறிய முடியாதது, கலையைப் போல ஒரு மாறுபட்ட அறிதல் முறை, காதல் போன்றதொரு உள்ளுணர்வு என்று கடவுளுக்கு பலவிதமாக முட்டுக்கொடுத்தார்கள் இந்த ஆன்மீக வல்லுநர்கள் – இது என்.டி.டி.வி விவாதம்.
இன்னொரு புறம் வாழும்கலை ஸ்ரீஸ்ரீரவிசங்கர்ஜி, அவரது வெள்ளைக்கார பக்தர்கள் மற்றும் ஜீன்ஸ் அணிந்த மாமிகளிடம், பெருவெடிப்பு பற்றி ரிக் வேதத்திலேயே எழுதப்பட்டிருக்கிறதாகவும்,  தற்போது ஹிக்ஸ் போசோன் பற்றி விஞ்ஞானிகள் விளக்கிய பின்னர்தான், ரிக் வேதத்தின் ஆழமான உட்பொருளை மேலும் தெளிவாகப் புரிந்து கொள்வதாகவும் அரைக்கண்ணை மூடியபடி, அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தார். அதாவது ரிக் வேதம் ஏற்கெனவே கண்டுபிடித்துக் கூறியிருப்பதைத்தான், செர்ன் ஆய்வுமையம் தற்போது கண்டுபிடித்திருக்கிறது என்ற உண்மையை, தான் இப்போதுதான் கண்டுபிடித்திருப்பதாக கூறிக்கொண்டிருந்தார் ரவிசங்கர்ஜி.
அதிகம் சொல்வானேன். மதம், ஆன்மீகம், தேடல் என்ற பெயர்களில் தமது வணிகத்தை நடத்திவரும் இந்த வல்லுநர்கள் அனைவர்க்குமான ஒரு பொதுத்தன்மை என்னவென்றால், முடிந்தவரை இவர்கள் அறிவியல் பார்வையை ஆதரிப்பவர்கள் போலப் பேசுகிறார்கள். இவர்களுடைய ஆன்மீகத்தை ஆய்வுக்கு உட்படுத்த முயன்றால், அறிவியலின் அளவுகோலால் எங்களை அளக்க முடியாது என்று சீறுகிறார்கள். அறிவியலின் வரம்பு பற்றி எச்சரிக்கிறார்கள். பிரபஞ்ச ரகசியத்தை கண்டுபிடித்துவிட முடியுமா என்று அச்சுறுத்துகிறார்கள்.
அறிவியலோ, இயற்கையின் ரகசியத்தை கண்டுபிடித்துவிட்டோம் என்று மார்தட்டுவதுமில்லை. பொருத்தமானதொரு விடை கிடைத்து விட்டதென்று, தனது ஆய்வினை நிறுத்துவதுமில்லை.

 ♠ ♠

பீட்டர்-ஹிக்ஸ்
பீட்டர் ஹிக்ஸ்
ஹிக்ஸ் போசோனுடன் கடவுளை இணைத்து முடிச்சு போடுவதற்கு ஆன்மீகவாதிகளின் கையில் அகப்பட்ட நூல், கடவுள் துகள் என்று பெயரிடப்பட்ட லேடர்மேனின் புத்தகம். ‘விடை இந்தப் பிரபஞ்சம் என்றால், கேள்வி என்ன?‘ என்று அட்டையிலேயே கேட்கிறார் லேடர்மேன். 1993 இல் இயற்கை விஞ்ஞானத்தில் அவர் எழுப்பிய இதே கேள்வியை சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் தத்துவஞானத் துறையில் இந்தியாவில் எழுப்பினார்கள், நமது மரபின் ஆதி முதல் பொருள் முதல்வாதிகளான சாருவாகர்கள்.
“கடவுள்தான் இந்த உலகத்தைப் படைத்தான் என்போரே, வறுமையும் பசியும் பிணியும் நிறைந்த இந்த உலகத்தை கடவுள் எதற்காகப் படைத்தான்? எதற்காகப் பிறப்பு, எதற்காக இறப்பு? இவையெல்லாம் இறைவனின் லீலையென்போரே, உங்கள் இறைவன் எத்தனை வக்கிரமானவன்?”
என்று கேட்டார்கள் சாருவாகர்கள்.
அறிவியல் கண்ணோட்டத்தின் ஊற்று விடையல்ல, கேள்வி. ஒரு கேள்விக்கு விடையாக பல ஊகங்கள் முன்வைக்கப்படலாம். சோதனையில் எந்த ஊகம் நிரூபிக்கப்படுகிறதோ அது மட்டுமே விடையாகிறது. எல்லா ஊகங்களும் பொய்ப்பிக்கப்பட்டு புதியதோர் விடையும் சோதனையில் கிடைக்கலாம். ஒருவேளை செர்ன் ஆய்வகத்தில் நடைபெற்ற சோதனையில் ஹிக்ஸ் போசோன் என்ற துகள் கிடைத்திருக்கவில்லையானாலும், அதனை தோல்வி என்று அறிவியல் கருதுவதில்லை. பருப்பொருளின் தோற்றம் குறித்த தனது ஆய்வு முயற்சியையும் அறிவியல் கைவிடப்போவதில்லை.
அறிவியல் என்பது அறிவியலின் வரலாறாகவும் இருக்கிறது என்பார் வரலாற்றறிஞர் டி.டி.கோசாம்பி.கலீலியோநியூட்டன்ஐன்ஸ்டீன்போஸ்ஹிக்ஸ்அப்துல்சலாம் என்று வெவ்வேறு நாடுகளையும் கண்டங்களையும் சேர்ந்த அறிவியலாளர்களின் கண்டுபிடிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக ஒரு பொது இழையில் சேர்ந்து மனித குலத்தின் பொதுவான அறிவாக மாறுகின்றன. அவை தொழில்நுட்பங்களாக உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும்போது, பிரம்மாண்டமான சமூக ஆற்றலாகின்றன.
ஆன்மீகம் என்ற பெயரில் தத்துவஞானத் தளத்தில் ஒன்று சேர்ந்து கொள்ளும் மதவாதிகள், உலகம் தோன்றியதெப்படி என்று வேதங்களும், பைபிளும், குர் ஆனும் கூறுவதை நிரூபிப்பதற்கோ, ‘கடவுளுக்குப் பொதுவாக‘ தமக்குள் ஒரு முடிவுக்கு வருவதற்கோ என்றுமே முயன்றதில்லை. ஞாயிறுதோறும் பைபிளை ஜெபித்தாலும் அதிலிருந்து படைப்பின் கோட்பாட்டை யாரும் புரிந்து கொள்வதில்லை. அதே நேரத்தில் நியூட்டனின் மூல நூலைப் படிக்காத ஒரு பள்ளி மாணவனுக்குக் கூட புவி ஈர்ப்பு விசைக் கோட்பாடு புரியாமல் இருப்பதில்லை.
இயற்கையின் இயக்கம் குறித்த விஞ்ஞானிகளுடைய கண்டுபிடிப்புகள் அவர்களுடைய தனிநபர் அனுபவங்கள் அல்ல. அவை யார் வேண்டுமானாலும் சோதித்துப் பார்க்கத்தக்க பொது அனுபவங்கள் அல்லது முடிவுகள். இதன் காரணமாகத்தான் ஒரு விஞ்ஞானியின் அறிதல் சமூகத்தின் பொது அறிவாக மாற முடிகிறது. அறிவியலுக்குள் ஒரு வரலாற்று தொடர்ச்சி வந்துவிடுகிறது. நியூட்டனின் ஆப்பிள் நம்முடைய ஆப்பிளாகிவிடுகிறது.
தங்களுடைய அறிதல் முறை புலன்சாராத அறிதல் என்று கூறும், மதவாதிகள், ஜக்கி, நித்தி, ரவிசங்கர்ஜிக்களின் அறிதல்கள், கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் ரகத்தை சேர்ந்தவை. புலனறிவுக்கும், பகுத்தறிவுக்கும் மொழியின் சாத்தியத்துக்கும் அப்பாற்பட்டவையாக அவர்களால் சித்தரிக்கப்படுபவை. எனவே அவை நம்முடைய ஆப்பிளாக முடியாதவை.
சமஸ்கிருதத்தில் மர்மமான சொற்களில் முனிவர்கள் எழுதிச் சென்றவைகளுக்கு கவர்ச்சிகரமான ஆங்கிலத்தில் வியாக்கியானம் கூறி, மேற்குலகின் மீது இந்தியாவின் ஆன்மீக மேன்மையை நிலைநாட்டுவதும், காசு பார்ப்பதும் எளிது, என்று இந்தக் கும்பலைத் தோலுரிக்கிறார் கோசாம்பி.
இயற்கை விஞ்ஞானம் கடவுளை விண்ணுலகின் கோள்களிலிருந்து விரட்டி விரட்டி அகற்றி வருகிறது. ஆறு நாட்களில் கடவுள் உலகத்தைப் படைத்ததாகக் கூறும் ஆதியாகமத்தை மறுப்பதற்கு ஒருவன் அவிசுவாசியாக இருக்கத் தேவையில்லை. அந்த விடயத்தில் ஆர்ச் பிஷப்புகளே தேவனைக் கைவிட்டு விட்டார்கள். இருப்பினும் கடவுள் ஒழிந்து விடவில்லை.

  ♠ ♠

கேலக்சிகாரா பாலைவனத்தின் பெரு மணற்பரப்புதான் இந்தப் பிரபஞ்சமென்றால், அதில் ஒரு மணற்துகளே இப்பூமி என்று அறிவியல் அறுதியிட்டுக் கூறிவிட்டது. ஆயினும் என்ன? இந்த மணற்துகளில் பிறந்து வளரும் நுண்ணுயிர்கள் முதல் விலங்குகள் மனிதர்கள் வரையிலான அனைத்து உயிரினங்களின் ஆயுட்காலத்தையும், பெங்களூரு நீதிபதியுடைய பதவிக்காலத்தையும், சொத்துக்குவிப்பு வழக்கின் வாய்தா தேதிகளையும் முன் கூட்டியே தீர்மானித்து இயக்குகின்ற பேரறிவு ஒன்று இருப்பதாகவும், ஒரு ஐயரை வைத்து அந்தப் பேரறிவை சரிக்கட்டுவதன் மூலம் வாய்தா தேதியைத் தள்ளிப்போடமுடியும் என்றும் ஜெயலலிதா நம்புகிறார். அரசன் முதல் ஆண்டி வரை பலரும் பலவிதமாக நம்புகிறார்கள்.
கடவுள் தகர்க்கப்பட்டு விட்டார். நம்பிக்கையைத் தகர்க்க முடியவில்லை. எனவே நம்பிக்கைக்குள் ஒளிந்து கொள்கிறார் கடவுள். முதலாளித்துவ சமூகம் தோற்றுவிக்கின்ற அனுமானிக்க முடியாத நிச்சயமின்மையும், இச்சமூக உறவுகள் தோற்றுவிக்கும் சிக்கல்களும், கடவுள் என்ற அனுமானத்தை வாழ வைக்கின்றன. வானத்தில் கிடைக்காத இடுக்குகளை கடவுளுக்கு பூமியில் வழங்குகின்றன. இதே இடுக்குகளுக்குள் பாதுகாப்பாகப் பதுங்கியிருக்கும் பழைய புதிய மதவாதிகளும் அறிவியலுக்கு எதிராக ஆர்ப்பரிக்கிறார்கள்.
“நவீன அறிவியலால் வெளிக்கொணரப்படும் புதிர்களும், பிரபஞ்சத்தின் விதிகளும், கடவுளின் ஆளுமையைத்தான் காட்டுகின்றன”
என்கிறார் வாடிகனின் வானவியல் வல்லுநர் கய் கன்சால்மேக்னோ.
அவரது கருத்துப்படி கடவுள் எல்லாமறிந்த ஆளுமையாகவே இருக்கட்டும். குவான்டம் இயற்பியல், துகள் இயற்பியல், உயிர் வேதியல் உள்ளிட்ட பல்துறை அறிவு கடவுளுக்கு உண்டு என்பதை, அதாவது விவிலியம் அறிந்திராத தேவனின் மகிமைகளை, நவீன அறிவியல்தானே போப்பாண்டவருக்கு கண்டு பிடித்துச் சொல்ல வேண்டியிருக்கிறது! அறிவியலின் ‘ஆளுமை‘ எவ்வளவு அதிகரிக்கிறதோ, அந்த அளவுக்குத்தானே கடவுளின் ஆளுமை குறித்த திருச்சபையின் புரிதலும் அதிகரிக்கிறது!
‘காட் டெலூஷன்‘ (இறை மயக்கம்) நூலின் ஆசிரியரும் பிரிட்டனின் பிரபல இறை மறுப்பாளருமான பேரா. ரிச்சர்டு டாகின்ஸின் கூற்று, அறியாமையின் செருக்கு நிறைந்த அந்தப் பிதற்றலுக்குப் பொருத்தமான பதிலாக அமைகிறது.
“அறிவியல் நமக்கு அளிக்கின்ற பிரமிப்பூட்டும் ஆச்சரிய உணர்ச்சி என்பது, மனித மனம் எட்டிப் பிடிக்கக் கூடிய மிக உன்னதமான உணர்ச்சிகளில் ஒன்று. அற்புதமானதொரு இசையும் கவிதையும் அளிக்கின்ற ஆழ்ந்த அழகியல் உணர்ச்சிக்கு இணையானது அது. இந்த உலகமும், பிரபஞ்சமும் அழகானவை, அற்புதமானவை – அவற்றை எந்த அளவுக்கு நாம் புரிந்து கொள்கிறோமோ அந்த அளவுக்கு! -… அறிவியல் என்பது எதார்த்தத்தின் கவிதை.”
அறிவியலையும் பகுத்தறிவையும், வெறுமனே அறுத்துப் பார்க்கும் ஆய்வு முறையாகவும், அழகியல் உணர்ச்சியற்றவையாகவும், இதயமற்றவையாகவும் காட்டும் ஆன்மீகப் பித்தலாட்டத்தின் மீது டாகின்ஸின் கூற்றில் உள்ள உண்மை ஒளிவெள்ளம் பாய்ச்சுகிறது.
“தன்னையே தான் அறிதல் என்று கூறிக்கொண்டு, இந்திய முனிவர்கள் மர்மமான மொழியில் சூக்குமமாக எதையோ எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். லூயி பாஸ்டர் போன்ற விஞ்ஞானிகளோ தம் உயிரையும் பணயம் வைத்து நுண்ணுயிர் குறித்த புரிதலையும் தடுப்பு மருந்துக் கோட்பாட்டையும் மருத்துவ உலகிற்கு அளித்திருக்கிறார்கள். இதுதான் தவம், இவர்கள்தான் நவீன உலகின் போதி சத்துவர்கள்” என்று அறிவியலின் இதயத்தையும் ஆன்மீகத்தின் இதயமின்மையையும் வேறு விதமாக எடுத்துச் சொல்கிறார் கோசாம்பி.
பிரம்மம், ஞானம், அவித்யை என்ற சில சொற்களையே சோழிகளாக உருட்டிப் போட்டு, அதைக்கண்டு வாய்பிளந்து நிற்கும் புளித்த ஏப்ப வர்க்கத்தினரின் மூளைகள் மீது கீழைத்தேயத்தின் ஆன்மீக மேன்மையை நிலைநாட்டி பணம் பண்ணிக் கொண்டிருக்கும் நித்தி, ஜக்கி, ரவிசங்கர்ஜி முதலான ஆன்மீக கழைக்கூத்தாடிகள், அறிவியலுக்கு அடக்கம் வேண்டுமென்று அறிவுரை சொல்கிறார்கள்.
அறிவியல் ஆணவம் கொண்டு ஆடுவதைப் போலவும், ஆன்மீகத்தை அடக்கத்தின் திருவுருவாகவும் சித்தரிக்கும் ஜக்கி வாசுதேவ், அறியாமையின் தீவிரத்தை உணரவேண்டுமென உபதேசிக்கிறார். அறிவைத் தேடுபவன் மட்டும்தான், தனது அறியாமையின் தீவிரத்தையோ, ஆழத்தையோ புரிந்து கொள்ள முடியும். அறியாமையையே வரப்பிரசாதமாக கருதி வழிபடும் ஆன்மீகம், அறியாமையின் தீவிரத்தை எந்தக்காலத்திலும் உணரமுடியாது.
பருப்பொருளின் தோற்றத்தைக் கண்டறியும் முயற்சியில் அறிவியல் ஈடுபட்டிருக்கும் இந்தக் காலத்தில், பெருவெடிப்பையே சிறிய அளவில் நிகழ்த்திப் பார்க்குமளவுக்கு அறிவியல் முன்னேறியிருக்கும் இக்காலத்தில்,அபத்தமானவையும் அருவெறுக்கத் தக்கவையுமான இத்தகைய கருத்துகளை ஆன்மீகம் என்ற பெயரில் எங்ஙனம் கடைவிரிக்க முடிகிறது? ஹிக்ஸூம் ரவிசங்கர்ஜியும் அக்கம்பக்கமாக நிலவுவது எப்படி சாத்தியமாகிறது?

   ♠ ♠

றுதியான தத்துவஞான அடித்தளத்தின் மீது நிற்காத வரை, முதலாளித்துவக் கருத்துகளின் தாக்கத்திலிருந்தும் முதலாளித்துவ உலக கண்ணோட்டத்தின் மீட்டுருவாக்கத்திலிருந்தும், இயற்கை விஞ்ஞானமோ, பொருள்முதல்வாதமோ தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியாது. தன்னுடைய போராட்டத்தில் சொந்தக் காலில் தாக்குப் பிடித்து நிற்பதற்கும், வெற்றியை சாதிப்பதற்கும், ஒரு இயற்கை விஞ்ஞானி”. இயங்கியல் பொருள்முதல்வாதியாக இருக்கவேண்டும்‘என்பார் லெனின். (தொகுதி-38, பக்கம் 146-47)
“இயற்கை விஞ்ஞானம் அதிவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதன் அனைத்து துறைகளும் தீவிரமான கொந்தளிப்பான மாற்றங்களுக்கு உள்ளாகி வரும் இந்தச் சூழலில் அது தத்துவஞான முடிபுகளைத் தவிர்த்து நிற்கமுடியாது.”  (லெனின், தொகுதி-33, பக்கம் 232-34)
லெனின்இயற்பியல் துறையில் பெரு முன்னேற்றம் கண்ட இருபதாம் நூற்றாண்டின் துவக்க காலத்தில்தான் பருப்பொருளின் மறைவு குறித்துப் பேசிய புறவய கருத்து முதல்வாதமான மாக்கிசம் எனும் கருத்துமுதல்வாத தத்துவப் போக்கு ஐரோப்பாவில் எழுந்தது. இதனை எதிர்த்து மார்க்சியமும் அனுபவ வாத விமரிசனமும் என்ற நூலை எழுதிய லெனின், இயற்பியலின் புதிய கண்டுபிடிப்புகள் பொருளுக்கும் இயக்கத்துக்கும் இடையிலான ஒற்றுமை குறித்த மார்க்சியக் கோட்பாட்டை உறுதி செய்வதை எடுத்துக் காட்டினார்.
இயற்கையின் இயக்கம் குறித்த விதிகளைக் கண்டறிகிறது நவீன அறிவியல். எனினும் அறிவியலின் இந்தக் கண்டுபிடிப்புகளுக்கும், பழைய வகையிலான சிந்தனை முறைகளுக்கும் இடையில் ஒரு முரண்பாடு இருக்கத்தான் செய்கிறது. முதலாளித்துவ சமூகத்தின் சிந்தனை மரபில் வேரோடியிருக்கும் கருத்துமுதல்வாதமும், இயக்க மறுப்பியல் கண்ணோட்டமும் அறிவியலாளனின் சிந்தனைக்கு உள்ளேயும் கூட ஆழமாக வேரோடியிருக்கிறது.
அதனால்தான், முதலாளித்துவ உலகில் அறிவியலின் முன்னேற்றம் என்பது உணர்வு பூர்வமானதாக இருப்பதில்லை என்றும், அது உண்மையை நோக்கி சரியான திசையில் முன்னேறும் சந்தர்ப்பங்களிலும் கூட உண்மைக்கு முதுகைக் காட்டியபடிதான் நகர்ந்து செல்கிறது என்றும் கூறுகிறார் லெனின். (தொகுதி-14, பக்கம்-313)
இன்று முதலாளித்துவம் பிரம்மாண்டமாக வளர்ந்து உலகு தழுவியதாக மாறியிருக்கிறது. அறிவியல் ஆய்வை ஒரு அறிவியலாளன் தனித்துச் செய்து பார்த்த காலம் மலையேறி விட்டது. கார்ப்பரேட் நிறுவனங்களின் பணபலமும், பிரம்மாண்டமான ஆய்வகங்களும், பல்துறை ஆய்வாளர்களின் ஒத்திசைவும் இல்லாமல் ஒரு அறிவியல் சோதனை என்பது இன்று சாத்தியமற்றது. 60 களிலேயே ஹிக்ஸ் தனது கண்டுபிடிப்பை காகிதத்தில் வெளியிட்டு விட்டார். செர்ன் ஆய்வு மையத்தைப் போன்றதொரு நிலத்தடி ஆய்வு மையத்தை அமைப்பதற்கான பணிகளையும் 90 களிலேயே தொடங்கியது அமெரிக்கா.
உலகத்தை தனது மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவருவதற்காக ஆண்டுக்கு 600 பில்லியன் டாலர் ராணுவத்துக்கு செலவு செய்யும் அமெரிக்க அரசு, பிரபஞ்சம் தோன்றியது எப்படி என்று அறிந்து கொள்வதற்கு 10 பில்லியன் டாலர் செலவு செய்வதை வீண் என்று கருதி, தோண்டிய சுரங்கத்தை மூடியது. பின்னர் ஐரோப்பிய நாடுகளின் கூட்டு முயற்சியாகத்தான் செர்ன் ஆய்வு மையம் உருவாக்கப்பட்டது.
ஏகாதிபத்திய முதலாளித்துவம், மனிதனுக்கேயுரிய அறிவுத்தாகத்தால் உந்தப்பட்டோ, இயற்கையைப் பேணும் பொருட்டோ, அல்லது இயற்கை இடர்களிலிருந்து மனிதகுலத்தைக் காக்கும் பொருட்டோ அறிவியல் ஆய்வைத் தொடங்குவதில்லை. போர் அல்லது இலாபம் – இவைதான் முதலாளித்துவத்தின் கீழ் அறிவியலை உந்தித் தள்ளுகின்றன.
அந்த வகையில், கண்காணிப்பதற்கும், வேவு பார்ப்பதற்கும், அழிப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள்தான், நவீன மருத்துவக் கருவிகளைப் பிரசவித்திருக்கின்றன. இது போன்றவை முதுகைக் காட்டியபடி நடந்ததில் கிடைத்த முன்னேற்றங்கள்.
இயற்பியல், வேதியல், வானவியல் உள்ளிட்ட எந்த துறையின் ஆய்வும் தனித்து மேற்கொள்ளப்பட இயலாத அளவிற்கு இன்று அறிவியல் முன்னேறிவிட்டது. எந்த ஒரு ஆய்விலும் ஈடுபடுகின்ற தனித்துறைகளுக்கு இடையே ஒருங்கிணைவும் ஒத்திசைவும் தேவைப்படுகிறது. அந்த ஒத்திசைவு முதலாளித்துவ சமூக அமைப்புடனும், அதன் உலக கண்ணோட்டத்துடனும் நேரடியாக முரண்படுகின்றது. முதலாளித்துவத்திற்கு கடவுள் தேவைப்படுகிறார்.
‘ஆன்மீகத் தீர்வுகள்’ என்ற நூலின் ஆசிரியரும், அமெரிக்காவில் வாழும் மருத்துவருமான தீபக் சோப்ரா, அத்வைதத்தை ரீ மிக்ஸ் செய்து தருவதன் மூலம் பொருள்முதல்வாத தத்துவத்திலிருந்து முதலாளித்துவ உலகைக் காப்பாற்றுகிறார்:
“இந்தப் பிரபஞ்சம் ஏன் என்ற கேள்வி அறிவியலாளர்களால் மட்டுமே பதிலளிக்க முடிந்தது அல்ல. மாற்று விளக்கத்தின் படி இப்பிரபஞ்சமே உணர்வு (பிரக்ஞை) பூர்வமானது. நம்முடைய பிரக்ஞையின் மூலமும் அதுதான். நாம் வருகிறோம் என்பது இந்தப் பிரபஞ்சத்துக்குத் தெரியும். நாம் கடவுளுடைய பேரறிவின் ஒரு பகுதியே. எனில் கடவுள்தான் இப்போது கடவுள் துகளையும் கண்டுபிடித்திருக்கிறார்.”
இதற்கு நேர் எதிராக பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்குமான உறவை பொருள்முதல் வாத நோக்கில் விளக்குகிறார், பிரபல அமெரிக்க விண்வெளி விஞ்ஞானியும் நாத்திகருமான கார்ல் சாகனின் மாணாக்கரும், வானவியல் இயற்பியல் வல்லுநருமான நீல் டிகிராஸ் டைசன்:
‘நாம் ஒருவரோடு ஒருவர் உயிரியில் ரீதியாகப் பிணைக்கப்பட்டிருக்கிறோம், இப்பூமியுடன் வேதியல் ரீதியாகப் பிணைக்கப்பட்டிருக்கிறோம், பிரபஞ்சத்துடன் அணுவால் பிணைக்கப் பட்டிருக்கிறோம். இதை எண்ணும்போதே நான் முறுவலிக்கிறேன். அகண்டமானவனாக உணர்கிறேன். நாம் பிரபஞ்சத்தினும் மேலானவர்கள் அல்ல, அதன் அங்கமானவர்கள். நாம் பிரபஞ்சத்தில் இருக்கிறோம், பிரபஞ்சம் நம்முள் இருக்கிறது”
நவீன விஞ்ஞானம்பெரும் பாய்ச்சலில் முன்னேறத் தொடங்கியிருந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவு பற்றி எங்கெல்ஸ் இவ்வாறு எழுதினார்:
“இயற்கைக்குப் புறத்தில் நிற்கும் ஒருவனைப் போல இயற்கையின் மீது நாம் எவ்விதத்திலும் ஆளுகை புரியவில்லை என்பதும், அதற்குப் பதிலாக, நமது ரத்தம், சதை, மூளை இவற்றுடன் இயற்கையோடு சேர்ந்தவர்கள் நாம். அதன் நடுவில் நிலைவாழ்கிறோம் என்பதும், இயற்கையின் நியதிகளைக் கற்றுக் கொண்டு அவற்றைப் பொருந்தியவாறு கடைப்படிப்பதில் இதர எல்லாப் பிராணிகளைக் காட்டிலும் நமக்கு அனுகூலம் உள்ளது என்பதிலேயே அதன் மீது நமது ஆளுகை அடங்கியுள்ளது.”
இயற்கையின் இயக்கத்தை அறிவியல் பூர்வமாகப் புரிந்து கொள்வது மட்டுமல்ல, தானே உருவாக்கிக் கொண்ட சமூகத்தின் இயக்கத்தையும் அறிவியல் பூர்வமாகப் புரிந்து கொண்டு வினையாற்றும்போதுதான், மனிதன் தானே உருவாக்கிய கடவுளையும் அகற்ற முடியும். அந்த சோதனையில் மோதவிடுவதற்கு புரோட்டான்களோ, ஹாட்ரான் கொலைடரோ தேவையில்லை.
_______________________________________________

உலகம் தோன்றியது எப்படி – விண்வெளி பயணம் போகலாமா ?


முன்னுரை 
அறிவியலை ஆய்ந்தும், சோசலிசத்தை விரும்பியும் பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு காரணமான புகழ் பெற்ற அறிவியலாளர் ஐன்ஸ்டீன் பிறந்த தினமன்று இந்த அறிவியல் அறிமுக கட்டுரை மற்றும் வீடியோவை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
ஐன்ஸ்டீன்
ஐன்ஸ்டீன்
மனித சமூகம், பண்பாட்டையும், நாகரீகத்தையும் தனது கூட்டுழைப்பால் அடைந்திருந்த காலம் தொட்டு இன்று வரையிலும் உள்ள தலையாய கேள்வி இந்த உலகம், எப்படி ஏன் யாரால் தோன்றியது? இக்கேள்விகளுக்கான விடையை பிரமிப்பூட்டும் விதத்தில் இன்று அறிவியல் விளக்கி நிரூபித்திருந்தாலும் இங்கே மதங்கள் அழிந்து விடவில்லை. மக்களை ஏற்றத் தாழ்வாக பிரித்திருக்கும் வர்க்க சமூகம் இருக்கும் வரையிலும் மதங்கள் அறிவியிலின் ஒளியை தடை செய்து கொண்டுதான் இருக்கும்.
மதங்கள் அனைத்தும் அறியாமையையும், கேள்விக்கிடமற்ற அடிமைத்தனத்தையும் வைத்து மக்களின் அறிவுத் தேடலை தடை செய்கின்றன. இதன் பொருட்டே இம்மதவாதிகள் பல நூறு குதர்க்கங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இணையம் வந்த பிறகு டார்வின் பொய், ஐன்ஸ்டீன் தோல்வி என்று தமது முட்டாள்தனங்களுக்கு தைரியமாக பெருமை கொள்கிறார்கள்.
உழைக்கும் மக்களை மத ரீதியாக பிரித்து வைப்பதன் மூலம் ஆதாயத்தை அடையும்  முதலாளித்துவம், தன் பிடியிலிருக்கும் அறிவியலை வைத்துக் கொண்டு மதங்களின் முட்டாள்தனத்தை அகற்றுவதற்கு முயல்வதில்லை. இதைத் தாண்டி ஒரு சாதாரண மனிதனுக்கு நமது பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பதை புரிய வைப்பதும், மனித சமூகமும் அது வாழும் பூமியும் முதலாளிகளுக்கு சொந்தமல்ல, மக்களுக்கு சொந்தமானது என்று தெளிய வைப்பதும் வேறு வேறு அல்ல.
இந்த ஆவணப்படம் நமது பூமி, சூரியக் குடும்பம், பால்வெளி மண்டலம், பேரண்டம் அனைத்தும் எப்படி தோன்றின, எந்த நிகழ்ச்சிப் போக்கிலிருந்து இந்த மாற்றங்கள் நடக்கின்றன, இவற்றின் முரண்பாடுகள் என்ன, இவற்றுக்கு தோற்றம்-அழிவு உண்டா, அற்பமான துகள்களும், தூசுகளும், வாயுக்களும் ஒரு வரலாற்றுக் காலத்தை படைக்கும் மேன்மையை எப்படி பெற்றன, நமது உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவும் விண்மீன்களில் நடைபெற்ற அணுக்கரு கூட்டிணைவால் உருவாக்கப்பட்டவை என்பது உண்மையா, இந்த பிரபஞ்சத்தை படைத்த மூலப்பொருட்கள் என்ன, நமது பூமி, சூரியக் குடும்பத்தின் தோற்றம், பெருவெடிப்பு குறித்து ஆதாரங்களுடன் அறிய முடியுமா என் ஏராளமான கேள்விகளுக்கு விடையளிக்கின்றது.
எனினும் மார்க்சியத்தின் இயக்கவியல் வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தை கற்றுத் தேர்ந்தவர்களுக்கு இந்தப் படம் மற்றவர்களை விட நன்கு பயன்படும். இயற்கையின் இயக்கவியல் இந்த உலகத்தின் தோற்றத்தில் எப்படி இயங்கியிருக்கிறது என்பதை காட்சி ரீதியாகவும், கருத்து ரீதியாகவும் புரிந்து கொள்வதற்கு இது உதவும்.
இயக்கம்தான், இயற்கையை சுருள் வட்டப் பாதை முன்னேற்றத்தில் இயங்க வைக்கிறது என்பதும் போராட்டமே, மனித குல நாகரீகத்தை மேம்படுத்தும் அச்சாணியாக இருக்கிறது என்பதும் தொடர்பற்றவை அல்ல. இதைத்தான் இந்தப் படத்திலிருந்து அறிவியலோடு சேர்ந்து நாம் அறிய வேண்டிய சமூகப் பார்வை.
இந்தப் படத்தை இத்தகைய தத்துவப் பார்வை விளக்கங்களுடன்தான் எழுத வேண்டும் என்று திட்டமிட்டாலும் நேரப் பிரச்சினை காரணமாக நடக்கவில்லை. என்றாலும் படத்தினை பார்த்து புரிந்து கொள்ளும் அளவுக்கு உரையாடலின் சாரத்தை தமிழில் கொண்டு வந்திருக்கிறோம். தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்கும், தமிழோ, ஆங்கிலமோ தெரிந்தாலும் அறிவியல் தெரியாதவர்களுக்கும் இந்த கட்டுரை பயன்படும். கட்டுரையைப் படித்து விட்டு படத்தை பாருங்கள்!
பிரபஞ்ச ரகசியத்தை தெரிந்து கொண்ட மகிழ்ச்சியை அடையுங்கள்!
-    வினவு
நாம் ஒவ்வொரு முறை வானை நோக்கும் போதும், நமது பூமி, சூரியன் மற்றும் இந்த பிரபஞ்சம் எப்படி தோன்றியது, தோன்றியதிலிருந்து எப்போதும் இதே நிலையில் இருந்து கொண்டிருக்கிறதா, எப்படி இயங்குகிறது என்ற கேள்விகளுடன் வியப்புடனே நோக்குகிறோம். இக்கேள்விகளுக்கு விடைதர முயற்சிக்கிறது, நேசனல் ஜியாக்ரபியின் “பிரபஞ்சத்தின் விளிம்பை நோக்கிய பயணம்” என்ற ஆவணப்படம்.
ஒளியை விட அதிகமான வேகத்தில் செல்லும் இப்பயணம் கற்பனை தான் எனினும் அறிவியலில் இது வரை அறியப்பட்ட உண்மைகள், ஏற்றுக் கொள்ளப்பட்ட கோட்பாடுகள், சோதனைகளால் உறுதி செய்யப்பட்ட விதிகளினடிப்படையில், ஹப்பிள் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட படங்களுடன், கணினியின் வரைகலை தொழில்நுட்பமும் கைகோர்த்ததில் இப்பயணம் சாத்தியமாகியிருக்கிறது.
இப்பயணத்தின் முதலடி சுமார் 4 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நீல் ஆம்ஸ்ட்ராங் தனது காலடித்தடங்களை வைத்த நிலவில் ஆரம்பமாகிறது. நிலவில் வளிமண்டலம் இல்லாததால் பல பத்தாண்டுகளாக அழியாதிருக்கும் ஆம்ஸ்ட்ராங்கின் காலடித்தடங்களை கடந்து பாய்ச்சலில் செல்லும் பயணம் 4.2 கோடி கிலோமீட்டர்களில் பண்டைய கிரேக்கர்களின் காதல் தேவதையான வீனஸை (வெள்ளி நட்சத்திரம்) அடைகிறது.
நிலவு
பயணத்தின் முதலடி சுமார் 4 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நீல் ஆம்ஸ்ட்ராங் தனது காலடித்தடங்களை வைத்த நிலவில் ஆரம்பமாகிறது
தினமும் நமது நாட்களை காலை வரவேற்று, மாலையில் விடை கொடுக்கும் வெள்ளி கோளானது மனிதர்கள் வாழ தகுதியற்றதாக, வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடு மிகுந்ததாக, அதாவது சீற்றம் மிகுந்ததாக காணப்படுகிறது. அதைக் கடந்தால் 9.1 கோடி கிலோமீட்டர்களில் முற்றிலும் இரும்பினாலான சிறிய கோளான புதனையும் (மெர்க்குரி) அதை சுற்றி வந்து கொண்டிருக்கும் மெசஞ்சர் (messenger) விண்கலத்தையும் நாம் காண்கிறோம்.
பின்னர் பயணத்தில் 15 கோடி கிலோமீட்டர்களில் நமது நட்சத்திரமான சூரியனை அடைகிறோம். சூரியன் நமது புவியைப் போலவோ மற்ற கோள்களைப் போலவோ திடநிலையில் இல்லை. அது ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்கள் மைய ஈர்ப்புவிசையால் ஒன்றிணைந்து பதிமூன்று லட்சம் பூமிகளை உள்ளடக்கி விடுமளவு பெரிதாக பிரமாண்டமான பந்தாக இருக்கிறது. ஈர்ப்புவிசை கொடுக்கும் அழுத்தம் காரணமாக மையக்கருவில் இருக்கும் ஹைட்ரஜன் வாயு மிக அதிக அழுத்தமும் அதனால் அதிக வெப்பமும் அடைவதால் அங்கு பூமியிலிருக்கும் மொத்த அணு உலைகளையும், அணு ஆயுதங்களையும் ஒரே நேரத்தில் வெடிக்க செய்வதை விட ஆயிரக்கணக்கான மடங்கு அதிகமான ஆற்றலுடன் அணுக்கரு பிணைப்பு நடைபெறுகிறது. அணு வினை ஒளியையும் வெப்ப ஆற்றலையும்  வெளியிடுவதுடன் வாயுக்களை வெளிநோக்கித் தள்ளுகிறது. அதே வேளை மைய ஈர்ப்புவிசை வாயுக்களை உள்ளிழுக்கிறது. இவ்விரு எதிர் விசைகளின் சமநிலையில் சூரியன் மாபெரும் எரியும் வாயுக்கோளமாக இருக்கிறது. இந்த கணத்தில் சூரியன் தனது இயக்கத்‌தை நிறுத்திக்கொண்டால் அதை நாம் அறிய 8 நிமிடங்கள் ஆகும்.
மையக்கருவின் வெப்பநிலை 1.5 கோடி டிகிரி செல்சியசும், மேற்பரப்பின் வெப்பநிலை சுமார் 5,700 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் இந்நட்சத்திரம் புவியில் உயிர்களின், ஆற்றலின், ஒளியின் மூலாதாரமாக இருக்கிற அதே வேளை நமது பூமியிலிருக்கும் அனைத்து உயிர்களையும் அழித்துவிடுமளவு அதிக ஆற்றலுள்ள, அயனியாக்கப்பட்ட வாயுக்கள்(பிளாஸ்மா) அடங்கிய மிகப்பரந்த சூரியக்கதிர் அலைகளை வெளியிடுகிறது. ஆனால் நமது பூமியின் காந்தப்புலம் நம்மை இப்பேரழிவிலிருந்து தடுத்துக் காப்பாற்றுகிறது.
அடுத்து நாம் ஒரு வால் நட்சத்திரத்தை பார்க்கிறோம். வால் நட்சத்திரங்கள், உறைந்த வாயுக்கள், பாறை மற்றும் தூசியை உள்ளடக்கிய அண்ட பனிக்கட்டிகளாகும். இவற்றில்உயிர் வாழ்வதற்கு தகுந்த சூழ்நிலை இல்லையெனினும், இவை தன்னகத்தே நம் பூமியில் உயிர்கள் உருவாவதற்கு அடிப்படை தேவையான தண்ணீர் மற்றும் கரிம சேர்மங்களை கொண்டிருக்கின்றன. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இதைப் போல் ஒரு வால் நட்சத்திரம் பூமியில் மோதி அங்கு தண்ணீர் மற்றும் கரிம சேர்மங்களை விட்டு சென்ற நிகழ்வு இங்கு உயிர்கள் உருவாக காரணமாக இருந்திருக்கலாம். அதே போல முன்னர் பூமியில் ஒரு வால் நட்சத்திரம் மோதியதால் தான் டைனோசர் இனமே அழிந்து போனது. அவ்வகையில் இவை படைக்கும் சக்தியாகவும், மீப்பெரும் அழிவு சக்தியாகவும் இருக்கின்றன.
இவ்வாறாக ஒவ்வொரு பொருளுக்குள்ளும் நிகழ்ச்சிப் போக்குக்குள்ளும் இடையறாமல் நடக்கும் எதிர்மறைகளின் போராட்டம், ஒற்றுமையால் தான் இப்பிரபஞ்சம் முழுவதுமே இயங்குகிறது.
செவ்வாய்
செவ்வாய் கிரகம் சற்றேறக்குறைய பூமியை ஒத்திருந்தாலும், அதன் பிரமாண்டமான புழுதிப்படலம், எரிமலைகள், பள்ளத்தாக்குகள் நாம் புவியில் கண்டது எதையும் ஒத்திராதது.
சூரியக் குடும்பத்தின் மையமான சூரியனிலிருந்து திரும்பி பயணித்தால் 22.7 கோடி கிலோ மீட்டர்களில், (அதாவது பூமியிலிருந்து சுமார் 7.5 கோடி கிலோமீட்டர்கள்) நாம் பார்க்கும் செவ்வாய் கிரகம் சற்றேறக்குறைய பூமியை ஒத்திருந்தாலும், அதன் பிரமாண்டமான புழுதிப்படலம், எரிமலைகள், பள்ளத்தாக்குகள் நாம் புவியில் கண்டது எதையும் ஒத்திராதது.
செவ்வாயை கடந்து சென்றால் எரிகற்கள் எனப்படும் சிறு விண்கற்கள் மண்டலத்தை கடக்கிறோம். இவற்றில் சில நூற்றுகணக்கான மைல்கள் நீள-அகலம் கொண்டவையாகும். சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இதே மாதிரியான விண்கற்கள் ஈர்ப்புவிசையால் ஒன்றிணைந்து தான் பூமியை, நிலவை போல் கோள்களாகியிருக்கக் கூடும். எனில் இப்போது இவை தமக்கிடையிலான ஈர்ப்பு விசையால் ஒன்றிணையாமல் தடுத்து வைத்திருப்பது எது?
அது நமது சூரியக் குடும்பத்தில் மிகப் பெரிய கோளும் சூரியனிலிருந்து 77.8 கோடி கிலோமீட்டர் தொலைவிலிருப்பதுமான வியாழனாகும். இதில் 1,321 பூமிகளை உள்ளடக்கி விடலாம். பூமியின் அளவை விட மூன்று மடங்கும் பல நூற்றாண்டுகளாக நீடித்திருப்பதுமான செம்புயலில் ஏற்படும் இடி-மின்னல்கள் நம் பூமியில் ஏற்படுவதை விட 10,000 மடங்கிற்கும், அதிக சக்தியுடையதாகும். சற்று திரும்பினால் வியாழனின் நிலவுகளை- அதில் பனிபடர்ந்த யுரோபாவையும் – நாம் காண்கிறோம்.
அங்கிருந்து பாய்ச்சலில் முன்னேறினால் 142 கோடி கிலோமீட்டர்களில் சனிக்கோளை அடைந்து அதன் அற்புதமான வளையங்களை அவை எப்படி உருவாகின என நாம் வியந்து கொண்டிருக்கும் போது சனியின் துணைக்கோளான (நிலவான) டைட்டனை நோக்கி நம் பார்வை தொடர்கிறது. டைட்டனில் நமது புவியிலுள்ள பருவநிலை போலவே மழை, மின்னல் ஏற்படுவதுடன் நமக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் தேவைப்படும் பெட்ரோலியம், மீத்தேன் படலம் இருக்கிறது.
அதன் பின் 287 கோடி கிலோமீட்டர்களில் நமது சூரியக் குடும்பத்திலேயே அதிகமான அச்சு சாய்வுடன் இருக்கும் பெரிய வாயுக் கோளமான யுரேனசை கடந்து செல்கிறோம். தொடர்ச்சியாக யுரேனசைப் போலவே இருக்கும் நெப்டியூனையும் அதன் நிலவான டிரைட்டனையும் கடக்கிறோம்.
விண்கற்கள்
எரிகற்கள் எனப்படும் சிறு விண்கற்கள் மண்டலத்தை கடக்கிறோம்
பின்னர் 590 கோடி கிலோமீட்டர்களில் தொலைதூர பனிக்கோள் (இப்போது கோள் இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது) புளூட்டோவைக் காண்கிறோம். இது சூரியனை சுற்றிவர 248 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. நமது சூரியக் குடும்பம் இத்துடன் முடிந்து விட்டதா? இன்னும் நமது சூரியனை சுற்றிவரும் கோள்கள், விண்கற்கள் இருக்கின்றனவா?
இப்போது நாம் 1977-ம் ஆண்டு பூமியிலிருந்து விண்ணில் ஏவப்பட்ட வோயேஜர் விண்கலத்தை காண்கிறோம். இது தற்போது சூரியக் குடும்பத்தை தாண்டி நட்சத்திரங்களுக்கிடையிலான வெளியில் தனது பயணத்தை தொடர்கிறது.
அதையடுத்து தொலை தூர சிறு கோள் ஒன்று சூரியனை சுற்றுகிறது. சேத்னா (sedna) எனப் பெயரிடப்பட்டுள்ள இக்கோள் சூரியனிலிருந்து சுமார் 930 கோடி மைல்கள் தொலைவில் இருப்பதுடன் சுற்றிவர 10,000 ஆண்டுகளுக்கும் மேல் எடுத்துக் கொள்கிறது.
நமது சூரியன் எப்படி தோன்றியது, இப்படியே நீடித்திருக்குமா? அழிந்தால் அதன் பின் என்னவாகும், நமது பூமியின் நிலை என்னவாகும், என்பவற்றை அறிய இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்.
இப்போது நம் குடும்பத்திலிருக்கும் அனைத்து கோள்களையும் சந்தித்து விடை பெற்றுக்கொண்டு, நமது வீட்டிலிருந்து வெளியில் காலடி எடுத்து வைக்கிறோம். தொடரும் நமது பயணம் நட்சத்திரங்களுக்கிடையிலான வெளியை அடைகிறது. இங்கு நமது சூரியனைப் போல கோடிக்கணக்கான விண்மீன்கள் இருக்கின்றன. இவற்றில் உயிரினங்கள் வாழ்கின்றனவா?
இப்பிரபஞ்சம் எல்லையில்லா சாத்தியங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.
அடுத்து சுமார் 45 லட்சம் கோடி கிலோமீட்டர்கள் (4.5 ஒளிஆண்டுகள்) தொலைவில் இருக்கும் நமது அண்டை நட்சத்திர மண்டலமான ஆல்பா சென்சூரி என்ற நட்சத்திர மண்டலத்தை காண்கிறோம். இது மூன்று விண்மீன்கள் அடங்கிய அமைப்பாகும். மூன்று நட்சத்திரங்களும் ஈர்ப்புவிசையால் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன.
இந்த தொலைவுக்குபின் நீளத்தின் அளவைகளான கிலோமீட்டரும், மைல்களும் மீச்சிறு அளவாகி பொருளற்றதாகி விடுகிறது. இதன்பின் தொலைவை அளக்க ஒளிஆண்டு என்ற வேறு அளவை பயன்படுத்தவேண்டும். ஒரு வினாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர்கள் பயணிக்கும் ஒளி, ஓராண்டில் கடக்கும் 9.46 லட்சம் கோடி கிலோமீட்டர் தொலைவே ஒரு ஒளியாண்டு எனப்படுகிறது.
நமது பயணம் 10.5 ஒளிஆண்டுகளை அடையும் போது எப்சிலோன் எரிடனி என்ற இளம் நட்சத்திர மண்டலத்தை காண்கிறோம். இந்நட்சத்திரத்தின் தூசியும், பனியும் கலந்த பிரமிக்கத்தக்க வளையங்களில் கோள்கள் இன்னும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இதைப் போன்ற செயல்முறையால்தான் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நமது சூரியக் குடும்பம் உருவானது.
வால் நட்சத்திர மோதல்
வால் நட்சத்திர மோதல்
மேலும் பயணிக்கும் போது 20.2 ஒளி ஆண்டுகள் தொலைவில் நமது சூரியனை ஒத்த வயதுடைய கிலீஸ்-581 (Gliese581) என்ற நட்சத்திரத்தை காண்கிறோம். இந்த நட்சத்திர மண்டலத்தில் ஏறக்குறைய நமது பூமிக்கும் சூரியனுக்குமிடையிலான அதே தூரத்தில் ஒரு கோள் இருக்கக் காண்கிறோம். இக்கோள் உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கான சூழ்நிலைகளை பெற்றிருக்கலாம், இங்கு உயிரினங்களும் இருக்கலாம். அவை தமது தொலைக்காட்சிகளை இயக்கி நாம் பூமியில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பிய நிகழ்ச்சிகளை இப்போது இங்கு பார்த்துக் கொண்டிருக்கலாம்.
நாம் இதுவரை பார்த்ததிலேயே அதிக பிரகாசமான வானில் மிகப்பிரகாசமான  விண்மீன்களில் 9-ம் இடத்தில் இருக்கும் திருவாதிரை நட்சத்திரத்தை (betelgeuse star) பார்க்கிறோம். ஆனால் இது நட்சத்திரம் அல்ல, நட்சத்திரத்தின் அடுத்த நிலை, இந்நிலை பெரும் சிகப்பு அசுரன் (Red SuperGiant) எனப்படுகிறது. இது நமது சூரியனை விட 600 மடங்கு பெரியது. இன்றிலிருந்து சில ஆயிரம் ஆண்டுகளுக்குள் இவ்விண்மீன் வெடித்து சிதறிவிடும்.
1344 ஒளியாண்டுகள் தொலைவில் நாம் ஒரு விண்மீன் தொழிற்சாலையை காண்கிறோம். ஓரியன் இருண்ட மேகத்திரள், அதன் ஆழத்தினுள் ஒரு ஒளித்துளி அதைச் சுற்றியுள்ள வாயுக்களை உள்ளிழுத்து அழுத்தி வெப்பமடைய செய்கிறது. இந்த வெப்பமும் அழுத்தமும் அணுவினையை தூண்டுவதற்கு போதுமானதாக இருக்கிறது. ஒரு நட்சத்திரம் பிரசவிக்கிறது. ஓரியன் நெபுலா – இங்குதான் நமது சூரியனைப் போல் சிறிதும் பெரிதுமாக ஆயிரக்கணக்கான விண்மீன்கள் உருவாகி கொண்டிருக்கின்றன- பிறக்கின்றன.
ஒளிரும் வாயுக்கூட்டம்
ஒளிரும் வாயுக் கூட்டத்தை – நிறமுகிழை- கடந்து செல்கிறோம்.
இப்போது ஒளிரும் வாயுக் கூட்டத்தை – நிறமுகிழை- கடந்து செல்கிறோம். பிரபஞ்சத்தின் மூலப் பொருட்களான ஹைட்ரஜனும், ஹீலியமும் பச்சை, ஊதா நிறங்களிலும், உயிர்கள் தோன்ற, உயிர் வாழ அடிப்படையான ஆக்சிஜனும், நைட்ரஜனும் சிவப்பு, நீல நிறங்களில் காட்சியளிக்கின்றன. கோள்களும், அவற்றில் உயிரினங்களும் தோன்ற விண்மீன்கள் தமது நிலையை மறுத்து வெடித்து சிதற வேண்டும். நமது உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவும் விண்மீன்களில் நடைபெற்ற அணுக்கரு கூட்டிணைவால் உருவாக்கப்பட்டவை. அந்தவகையில் நம்முடைய குடும்ப கிளை இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது. விண்மீன்கள் தான் நம்முடைய மூதாதையர்.
இந்நிற முகிழ்களின் நடுவில்-வெள்ளை குள்ளன் (White Dwarf) ஒருவன் இருக்கிறான். இதில் ஒரு தேக்கரண்டி அளவு நமது பூமியில் ஒரு டன் எடை இருக்குமளவு அடர்த்தி மிகுந்ததாகும்.
சூரியனைப் போலுள்ள நட்சத்திரங்களில் மையக்கருவில் உள்ள எரிபொருளான ஹைட்ரஜன் அனைத்தும் ஹீலியமாக மாற்றப்பட்டு தீர்ந்த பின் மேல் அடுக்கில் உள்ள ஹைட்ரஜனில் அணுப் பிணைப்பு வினை நடைபெறத் துவங்கும். இப்போது அது அளவில் 100 மடங்குக்கும் மேல் விரிவடைந்து அது தனது நட்சத்திர நிலையிலிருந்து மாறி சிவப்பு அசுரன் நிலைக்கு செல்கிறது. எரிபொருளின் அளவில் ஏற்படும் மாற்றங்கள் விண்மீனின் பண்பில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இன்றிலிருந்து சுமார் 5 பில்லியன் ஆண்டுகளுக்கு பின் நமது சூரியன் தற்போது இருக்கும் அளவை விட 100 மடங்கு பெரிதாகி பூமியை விழுங்கி செவ்வசுரன் நிலையை அடையும். அப்போது வியாழனின் நிலவு அல்லது சனிக்கோளின் நிலவு உயிரினங்கள் வாழ்வதற்கான சூழ்நிலையை வந்தடையக் கூடும்.
கருந்துளை
கருந்துளை
நட்சத்திரத்தின் மேற்பரப்பில் இருக்கும் ஹைட்ரஜனும் தீர்ந்து மொத்தமும் ஹீலியமான பின் ஹீலியம் அணுக்கரு பிணைப்பிற்கு உள்ளாகி கார்பனாக மாறத்துவங்கும். காலப்போக்கில் எல்லா ஹீலியம்  எரி பொருளும் தீர்ந்த பின்னர் படிப்படியாக குளிர ஆரம்பிக்கும் போது செவ்வசுரன் நிலையை மறுத்து வெள்ளைக் குள்ளன் நிலையைப் பெறுகிறது. சூரியனை ஒத்த மற்றும் அதைவிட குறைவான நிறையுள்ள விண்மீன்கள் இந்நிலையைப் பெறுகின்றன. இன்றிலிருந்து சுமார் 600 கோடி ஆண்டுகளுக்கு பின் நமது சூரியனும் வெள்ளைக் குள்ளன் நிலையை வந்தடையும். அப்போது சூரியக் குடும்பத்தின் கோள்கள் அனைத்தையும் சூரியன் விழுங்கியிருக்கும்.
சூரியனை விட  மூன்றிலிருந்து ஐந்து மடங்கு நிறையுள்ள விண்மீன்களில் ஹீலியம் எரிபொருளும் தீர்ந்து கார்பன் ஆன பின் மேலும் அணுப்பிணைப்பு நடக்க அதன் நிறையும் – ஈர்ப்பு விசையும் போதுமானதாக இருப்பதால் தொடர்ந்து அணுப்பிணைப்பு நடந்து அதிக நிறையுள்ள தனிமங்கள் உருவாகின்றன. இந்நிலை பெரும் சிகப்பு அசுரன் (Red Super Giant) எனப்படுகிறது. நாம் சற்று முன்பு பார்த்த திருவாதிரை நட்சத்திரம் பெரும் சிவப்பு அசுரன் நிலையில் தானிருக்கிறது.
இச்செயல் முறையால் தொடர்ந்து நிறை அதிகரித்துக் கொண்டே செல்வதால் ஒரு கட்டத்தில் ஈர்ப்பு விசை அதிகரிக்கிறது. அதனால் அது தன் சொந்த எடையை தாங்க முடியாமல் வெடித்து சிதறும். இது சூப்பர் நோவா எனப்படுகிறது. நம் சூரியக் குடும்பம் முழுவதுமே இதைப்போல் ஒரு சூப்பர் நோவா வெடித்து சிதறி வெளியிட்ட வாயுக்கள், துகள்களிலிருந்து தான் தோன்றியது.
வெடித்து சிதறும் நட்சத்திரத்தின் மையக் கருவில் உள்ள அணுத் துகள்கள் ஒன்றிணைந்து அடர்த்தியான நியூட்ரான்களாகின்றன. இது நியூட்ரான் நட்சத்திரம் எனப்படுகிறது. இதில் இருக்கும் துகள்களின் அடர்த்தி மிக மிக அதிகம். இதில் ஒரு தேக்கரண்டி, நமது பூமியில் ஒரு லட்சம் டன் எடையிருக்கும். இங்கு நாம் பல்சார் (Pulsar) என்ற ஒரு வகை நியூட்ரான் நட்சத்திரத்தை பார்க்கிறோம். இது நமது பூமியின் காந்தப்புலத்தை விட பல்லாயிரம் மடங்கு அதிகமான காந்தப்புலத்தையும், ரேடியோ மின்காந்த அலைகளையும் வெளியிடுகிறது.
விண்மீன் தொழிற்சாலைகள்
லட்சக் கணக்கான விண்மீன்கள்
விண்மீன்களின் அளவில் இருக்கும் வேறுபாடும் அதன் அடுத்த நிலைப் பண்பை தீர்மானிக்கிறது. நட்சத்திரம் சூரியனை விட ஐந்து மடங்கிற்கு அதிக நிறையுடன் இருக்கும் பட்சத்தில் இந்நியூட்ரான் நட்சத்திரங்களின் அளவும் நிறையும் அதிகமாக இருக்கும் அதனால் அதன் மையம் மேலும் மேலும் சுருங்குகிறது. அதன் அடர்த்தியும் ஈர்ப்பு விசையும் மிக மிக அதிகரித்து வேறு நிலையை அடைகிறது. இந்நிலை கருந்துளை (Black Hole) எனப்படுகிறது.
இவ்வாறு விண்மீன்களில் அளவில் இருக்கும் வேறுபாடும், அவற்றின் அடுத்த நிலைப் பண்பையும் நிகழ்ச்சிப் போக்கையும் தீர்மானிக்கிறது.
இப்பிரபஞ்சத்தில் அனைத்து பொருட்களுமே ஒளியை பிரதிபலிக்கின்றன. அப்பிரதிபலிப்பையே நாம் கண்ணால் காண்கிறோம். இக்கருந்துளையின் ஈர்ப்புவிசை ஒளியின் துகளையும் வெளியிடாமல் ஈர்த்து விடுமென்பதால், இதைக் காண இயலாது. இதன் ஈர்ப்பிலிருந்து விண்மீன்கள் உட்பட எதுவும் தப்பிச்செல்ல முடியாது. இதில் ஒரு குண்டுமணியளவு பூமியில் ஒரு கோடி டன் எடையிருக்கும்.
நாம் இப்போது நமது விண்மீன் திரளான பால்வெளியைப் பார்க்கிறோம். இதன் நடுவில் மிகப் பிரமாண்டமான மீப்பெரும் கருந்துளை இருக்கிறது. அதை சுற்றி தான் நம் சூரியன் உள்ளிட்ட எண்ணிலடங்கா நட்சத்திரங்களும், பல சிறு கருந்துளைகளும், நியூட்ரான் நட்சத்திரங்களும், பிறவும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.  பால்வெளியில் 1000-லிருந்து 4000 விண்மீன்கள் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.
நாம் இப்போது 25 லட்சம் ஒளியாண்டுகள் தொலைவில் நாம் நமது அண்டை விண்மீந்திரளான அன்ட்ரோமெடாவை (Andromeda) காண்கிறோம். இங்கிருந்து பூமியை பார்த்தால் குரங்கிலிருந்து பரிணமித்த நமது மூதாதையர்கள் ஆப்பிரிக்க நிலத்தில் நடப்பதை காண முடியும்.
குவாசார்
இந்த அண்டத்தின் மிக சக்தி வாய்ந்த குவாசார் -  100 கோடி சூரியன்களின் நிறையுடையது
இப்போது இரண்டு விண்மீன் திரள்கள் மோதிக்கொண்டு அளப்பரிய ஆற்றலை வெளியிடுகிண்றன. விண்மீன் திரள்கள் அழிகின்றன. ஆனால் அதன் இயக்கம் நின்றுவிடுவதில்லை. புதிய திரள்கள் புதிய வடிவத்தில், புதிய நட்சத்திரங்களுடன் மீண்டும் பிறக்கிறது. பிறப்பு-இறப்பு, படைப்பு-அழிவும் கொண்ட முடிவில்லா சுழற்சியே பிரபஞ்சம் முழுவதையும் பிணைக்கும் இழையாக இருக்கிறது. இதைப்போல் கோடிக்கணக்கான விண்மீன் திரள்கள் நமது பிரபஞ்சத்தில் இருக்கின்றன.
நமது பயணம் மேலும் தொடர்கிறது. 200 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் கோடிக் கணக்கான சூரியன்களின் நிறையைக் கொண்ட மீமீப்பெரும் கருந்துளையைக் காண்கிறோம். அது அதைச் சுற்றியுள்ள  நட்சத்திரங்களை பிய்த்து உள்ளிழுத்து விழுங்குகிறது. மொத்த விண்மீன் திரளையும் இது விழுங்கி விடக்கூடும்.
அண்ட பெருவெடிப்பு
அண்டத்தின் எல்லை – 1350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அண்ட பெருவெடிப்பு
இப்போது 1400 கோடி ஒளியாண்டுகள் தொலைவிலிருக்கிறோம். இப்போது திரும்பி பார்த்தால் சுமார் 1400 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த பெருவெடிப்பை காணமுடியும். இப்பெருவெடிப்பிலிருந்து தான் மீச்சிறு கோளத்தில் அளப்பறிய அழுத்ததுடன் இருந்த அளப்பறிய ஆற்றல் வெடித்து கிளம்பியது. அதிலிருந்து தான் நமது இடம், காலம், வெளி, பிரபஞ்சம் அனைத்தும் தோன்றின. இது வரை பிரபஞ்சம் முழுவதிலும், பொருள் ஆற்றலாக மாறுவதை கண்ட நாம் இங்கு ஆற்றல் பொருளாக மாறுவதை காண்கிறோம்.
பெருவெடிப்பின் ஒளி அண்டம் முழுமையும் இன்றும் விரிந்து பரவிக் கொண்டிருக்கிறது. பூமியில் அதை நாம் தொலைக்காட்சி இரைச்சலாக பார்க்கிறோம். நமது பயணத்தில் கண்ட கோள்கள், விண்மீன்கள், விண்மீன் திரள்கள் முதலான அனைத்து அற்புதங்களும், பெருவெடிப்பிலிருந்து சிதறி பயணிக்கும் துகள்கள்தான். இப்போதுதான் நாம் நினைத்ததை விட எவ்வளவு சிறியவர்கள், பலவீனமானவர்கள் என்று புரிந்து கொள்கிறோம். ஆனால், இந்த பயணத்தின் ஊடாக நாம் இந்த அண்டத்தின் அற்புதங்களை அனுபவித்தோம். அந்த சாதனையை கொண்டாடுவோம்.