செவ்வாய், 8 நவம்பர், 2011

இஸ்லாமே கற்பனைகளின் களம்.2



இந்தப்பகுதியை, இந்தத்தொடரை வாசிக்கவிருக்கும் முஸ்லீமல்லாதவர்களுக்கு, இஸ்லாம் குறித்த போதிய அறிமுகமில்லாதவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் என்னுடைய பார்வையில் அறிமுகம் செய்யும் விதமாக அமைத்திருந்தேன். நான் இஸ்லாத்தை அறிமுகம் செய்ததில் பொருட்பிழை ஏதுமில்லை என்பதை நண்பரின் பதிவு அறிவிக்கிறது. ஆனால் அதை செய்தவிதத்தில் அவருக்கு பேதமிருக்கிறது. அப்படி பேதமிருப்பதாய் அவர் கருதும் இரண்டு இடங்களை குறிப்பிட்டு தம் பதிவை தயாரித்திருக்கிறார்.

முதல் பேதமாய் நண்பர் குறிப்பது, சைத்தான் என்பவன் மனிதனின் எதிரி தானேயன்றி ஆண்டவனின் எதிரியல்ல என்பதை. அதற்கு ஆதாரமாக நண்பர் எடுத்துவைத்திருப்பது “சைத்தான் உங்களுக்கு எதிரி” என்று ஆண்டவன் மனிதனுக்கு கூறும் ஒரு குரான் வசனம். தன்னுடைய படைப்பாகிய மனிதனிடம், யார் தான் அறிவுறுத்தியபடி நடக்கவேண்டும் என விரும்புகிறானோ அத்தகைய மனிதனிடம், யாரை தன்னுடைய பிரதிநிதியாக படைத்திருக்கிறானோ அத்தகைய‌ மனிதனிடம் ஆண்டவன் கூறுகிறான் சைத்தான் உனக்கு எதிரி என்று. என்றால் ஆண்டவனுக்கு சைத்தானுடனான உறவு என்ன? தன்னுடைய நண்பனை உனக்கு எதிரி என மனிதனுக்கு அறிவிக்க முடியுமா? தன்னுடைய எதிரியை உனக்கு எதிரி என மனிதனுக்கு அறிவிக்க முடியுமா? இந்த இடத்தில் எல்லாமே ஆண்டவனின் படைப்புகள் எனும் சமன்பாட்டைக் கொண்டுவரவேண்டாம். ஏனென்றால் மலக்குகளும், மனிதனும், மரக்கட்டையும் மூன்றுமே ஆண்டவனின் படைப்பு தான். ஆனால் கொண்டிருக்கும் உறவில் மூன்றின் மதிப்பும் வேறுவேறுதான். எனவே உனக்கு எதிரி என சைத்தானை மனிதனுக்கு ஆண்டவன் காட்டுகிறானென்றால் அதில் உட்கிடக்கையாக இருப்பது தனக்கு எதிரி என்பதுதான்.

ஒருவனுக்கு எதிரி என யாரைக் கூறமுடியும்? யார் எதிராக செயல்படுகிறானோ அவனைத்தான் ஒருவனுக்கு எதிரி என்று கூறமுடியும். அந்த வகையில் சைத்தான் மனிதனுக்கு எதிராக செயல்படுகிறானா? இறைவனுக்கு எதிராக செயல்படுகிறானா? மனிதனுக்கு எதிராக செயல்படுகிறான் என்றால் மனிதனை துன்பப்படுத்த முயலவேண்டும், மனிதனுக்கு இன்னல்களை ஏற்படுத்த வேண்டும், மனிதனை நிர்மூலமாக்க வேண்டும். ஆனால் சைத்தான் இவைகளைச் செய்வதில்லை, மாறாக மனிதனுக்கு இன்பங்களைக் காட்டுவதன் மூலம், சொகுசுகளை காட்டுவதன் மூலம், இன்னும் பல்வேறு உத்திகள் மூலம் இறைவனின் நினைப்பை மனிதனிடமிருந்து நீக்க முயல்கிறான். ஆக சைத்தான் மனிதனிடம் செயல்படுகிறான் ஆனால் ஆண்டவனுக்கு எதிராக செயல்படுகிறான். மறுபக்கம் ஆண்டவனோ என் சொல்லைக் கேட்டால் உனக்கு மிட்டாய் தருவேன், சைத்தான் சொல்லைக் கேட்டல் பிரம்படி தருவேன் என்கிறான். என்றால் யாருக்கு யார் எதிரி?

சைத்தான் மனிதனை ஆண்டவனின் திசையிலிருந்து திருப்புகிறான், அதாவது மனிதனிடம் தான் செயல்படுகிறான் என்றாலும் அது விளைவுதான், வினையல்ல. வினை என்பது சைத்தான் ஆண்டவனை எதிர்த்தது தான். ஆண்டவனின் சொல்லுக்கு கீழ்படிய மறுத்து எதிர்த்து நின்ற வினையின் விளைவு தான் மனிதனை திசைமாற்றும் சைத்தானின் முயற்சி. மனிதனைக் கெடுக்க வேண்டும் என்பதற்காக சைத்தான் ஆண்டவனை எதிர்க்கவில்லை. ஆண்டவனை எதிர்த்ததால்தான் மனிதனைக் கெடுக்கிறான். எனவே சைத்தானின் நோக்கம் ஆண்டவனை எதிர்த்தது தானேயன்றி, மனிதனைக் கெடுப்பதல்ல. எனவே சைத்தான் ஆண்டவனின் எதிரி என்பதே சரி, மனிதனின் எதிரி என்பது மாத்திரைக் குறைவுதான்.

தர்க்கரீதியான(!) ஒன்றையும் இதில் இணைத்திருக்கிறார். அதாவது சைத்தான் மனிதனின் மனதைத்தான் கெடுத்தானாம் மார்க்கத்தைக் கெடுக்கவில்லையாம். மார்க்கம் என்பதென்ன தனியொரு பொருளா? (இங்கு மார்க்கம் என்று அவரது சொல்லாகவே கையாண்டிருக்கிறேன். மதமா மார்க்கமா என்பதை பின்னர் விளக்குகிறேன்) மனிதர்க‌ளை நீக்கிவிட்டால் மார்க்கம் என்பதை எப்படி வரையறுப்பது? மனிதர்களின் மனதிலிருந்து பிரித்து தனித்த ஒன்றாக மார்க்கத்தை அடையாளப்படுத்த முடியாது. எனவே மார்க்கத்தைக் கெடுத்தான் என்பதும், மனதைக் கெடுத்தான் என்பதும் ஒன்றுதான் மாறுபட்டதல்ல. முன்னவர்களின் மன‌திலிருக்கும் மார்க்கத்தைக் கெடுத்து அதையே பின்னவர்களுக்கு அழகாகக் காட்டியதால்தான் அதையே அவர்களும் பின்பற்றும்படியாகிறது. இதில் தர்க்கவியல் குறை ஒன்றுமில்லை.

இரண்டாவதாக‌, இஸ்லாத்தை இதுவரை யாரும் ஆதாரபூர்வமாக யாரும் விமர்சித்ததில்லை என்கிறார். குரானிலேயே இதற்குமேல் தர்க்கிக்க வேண்டாம் விட்டுவிடுங்கள் எனும் பொருளுள்ள வசனங்கள் இருக்கின்றன. விமர்சனம் செய்து மீறிப்போகும்போது தாக்குதலில் இறங்குவதற்கு அண்மைக்காலம் வரை எடுத்துக்காட்டுகள் உண்டு. இங்கும் கூட கம்யூனிச அவதூறுகளை கூறியிருக்கிறீர்கள். கொலை, கொலை என்று அலறியவர்களே நாங்கள் காசுக்காகத்தான் அவயமிட்டோம் என ஒதுங்கிவிட்டார்கள், நீங்களோ இன்னும் விடாமல் பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு கம்யூனிசம் குறித்த விமர்சனம் இருந்தால் தனித்தொடராக வெளியிடலாம், நான் நீங்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் தெளிவுபடுத்த ஆயத்தமாக இருக்கிறேன். அப்புறம் இஸ்லாத்தில் மாற்றம் செய்ய தேவையிருக்காது என கூறியிருக்கிறீர்கள். அதை உங்கள் நம்பிக்கை என நகர்ந்துவிடலாம். ஆனால் போகிறபோக்கில், \\தவறு எனில் மாற்றுவோம்// என்று கூறியிருக்கிறீர்களே. என்ன விசமம் இது. இஸ்லாத்தில் எந்த ஒன்றையும் கூட்டவோ குறைக்கவோ யாருக்கு அதிகாரம் இருக்கிறது? பொருட்பிழையில்லாமல் சொற்பிழைகளையே பெரும்பேதமாய் பதிவெழுதி எனக்கு விளக்கம் கூறிவிட்டு, இஸ்லாத்தின் அடிமடியிலேயே கைவைத்துவிட்டீர்களே. பலே, பலே.

எண்ணைக் கொப்பரை என்பது நரகத்தைக் குறிக்கும் ஒரு குறியீடு அவ்வளவு தான், நேரடியாக நெருப்பில் வாட்டுவது என்றாலும் எண்ணெய் தடவி ஓவனில் வைத்தாலும் அதில் பொருட்பிழை ஒன்றுமில்லை. இந்தப் பதிவில் கூட மிட்டாய், பிரம்படி என்று சொர்க்கம், நரகத்தை குறியீட்டால் குறித்திருக்கிறேன்.

அடுத்து, இஸ்லாத்தை விமர்சித்ததற்காக இன்னலுக்கு ஆளான சிலரை நான் என்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அவர்கள் குறித்த குறிப்புகளை இணையத்தில் தேடித்தந்திருக்கிறீர்கள். இறுதியாக \\உண்மயை மக்கள் மத்தியில் போட்டு உடைக்கும் போது இவர் குறிப்பிட்ட தடங்கள் வருவது இயல்பே// என்று ஒப்புதல் தந்திருக்கிறீர்கள். ஆனால் நான் குறிப்பிட்டிருந்ததற்கும் நீங்கள் இயல்பு என்பதற்கும் இடையில் கொஞ்சம் வித்தியாசமிருக்கிறது. ஏனைய மதங்களைப் பொருத்தவரை மதத்திற்குள் இருந்து கொண்டே அந்த மதக்கொள்கைகளை விமர்சிக்க முடியும், விமர்சித்திருக்கிறார்கள். அதை அந்த மதத்தைச் சார்ந்தவர்கள் விளக்கமாக கருதியிருக்கிறார்களேய‌ன்றி புறக்கணித்ததில்லை. ஆனால் ஆப்ரஹாமிய மதங்களில் அது இயலாது. அதிலும் குறிப்பாக இஸ்லாத்தில் முடியவே முடியாது. ஒரு அரசு இருந்து மதக் கொள்கைகளுக்கு எதிரானவரை தடுப்பது தண்டிப்பது என்பது வேறு, மக்களே புறக்கணிப்பது என்பது வேறு. அதுவரை நெருங்கிய உறவினர்களாக நண்பர்களாக இருந்தாலும் இஸ்லாத்தை விமர்சித்துவிட்டால் அடுத்த கணமே அங்கு ஒரு விலக்கம் வந்து உட்கார்ந்து கொள்ளும். ஏனென்றால் இஸ்லாத்தில் கடமை தான் இருக்கிறதேயன்றி, விமர்சிக்கும் உரிமையில்லை. இதுதான் துன்புறுத்தல் வரை கொண்டு சேர்க்கிறது. தக்கலை கவிஞர் ரசூல், மைலாஞ்சி கவிதைத்தொகுப்பில் ஏன் பெண் நபி இல்லை என்று கேட்டு கவிதை வெளியிட்டதற்காக, கவிதையை நீக்கி மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள் மறுத்ததால் ஊர் விலக்கம் செய்யப்பட்டர். ஆண்டுகள் பல கடந்தும் அவரால் வீட்டுக்கு அருகிலுள்ள பெட்டிக்கடையில் தாகத்திற்கு மோர் வாங்கி குடிக்கமுடியாது. \\இவ்வாறு அறியாமையினால் ஓரிரு இடங்களில் நடப்பதை எடுத்து காட்டுவது சரியானது அல்ல என்பதை தெரிவித்து கொள்கிறேன்// சரிதான், அப்படி எடுத்துக்கொள்லலாம். ஆனால், இதை இயல்பு என்று எடுத்துக்கொள்ள முடியாதல்லவா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக