செவ்வாய், 25 அக்டோபர், 2011

"மரண தண்டனை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்'' - டாக்டர் அம்பேத்கர்


பேரறிவாளன், முருகன், சாந்தனை செப்டம்பர் 7ம் தேதிக்குள் தூக்கிலிட வேண்டும் என்று இன்று வேலூர் சிறை அதிகாரிக்கு தகவல் அனுப்பப்பட்டு உள்ளது. 

அவசர அவசரமாக நடைபெறும் தண்டனை நிறைவேற்றுதல் குறித்து பெரும் அச்சத்தை தமிழ் ஆவலர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தாலும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை நோக்கிய நகர்வுகளை எச்சரிக்கையுடனும் முனைப்புடனும் திட்டமிட வேண்டிய இக்கட்டான நிலைமைக்குள் தமிழ் ஆவலர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது. 

தமிழ் மக்கள், 'ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு கிடைத்த தண்டனை' என்று அறியாமையில் தொடர்ந்து அலட்சியமாய் பேசுவதை தவிர்த்து உண்மை நிலையை உணர்ந்து http://www.youtube.com/watch?v=7YYfXWxe_1A நடைபெறவிருக்கும் 'நரபலி தண்டனை'யை தடுத்து நிறுத்த ஒன்றிணைய வேண்டிய தேவையை இந்திய ஏகாதியபத்திய அரசு ஏற்படுத்தி இருக்கிறது.  

 சமூக ஆவலர்களாலும் தமிழ் தேசியவாதிகளாலும் ஒரு சில சமூக அமைப்புகளாலும் தடுத்து நிறுத்தப்பட வேண்டிய சம்பவம் இல்லை. தமிழக மக்கள் அனைவரும் போராட வேண்டிய தேவை இருக்கிறது. எனவே ஒருமித்த உணர்வோடு அநீதிக்கு எதிராய் போராடுவோம். 

 இந்திய சட்டங்களை இயற்றிய டாக்டர் அம்பேத்கர் மரண தண்டனை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பார். உலகம் முழுவதிலும் பல நாடுகளில் தூக்கு தண்டனை ஒழிக்கப்பட்டு வரும் நிலையில் 'அகிம்சை நாடு' என்று கூறிக் கொள்ளும் இந்தியா ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுக்காக மூன்று தமிழர்கள் தூக்கில் போடப்பட வேண்டும் என்று இம்சிப்பது அகிம்சை இல்லை. சட்டத்திற்கு விரோதமானது என்பதை இந்திய அரசுக்கு உணர்த்தப்பட வேண்டும். 

 மரண தண்டனை குறித்து டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் கூறுவார் :

 "..... நமது அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே ஒரு வரையறுக்கப்பட்ட பகுதியாக ‘உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்யும் உரிமை' நிர்ணயம் செய்யப்பட வேண்டுமா? அல்லது எத்தகைய கிரிமினல் மேல் முறையீடுகளை உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொள்ளலாம் என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை, நாம் நமது நாடாளுமன்றத்திடமே அளித்து விடலாமா? இந்தக் கேள்விகளை, தவிர்க்க இயலாத ஒரு நியதியாக உருவாக்க நான் விரும்பவில்லை. மேலும், கேள்விகளுக்கான எனது தீர்மானமான பதில் என்று எதையும் இந்தச் சூழலில் நான் கூற விரும்பவில்லை.

எனக்கென்று தனிப்பட்ட கருத்துகள் உள்ளன. பிரச்சனைகள் எழும்போது, எனது கருத்துகளை நான் அதன் மீது திணிப்பதில்லை. குறை நிறைகளை சீர்தூக்கி, திறந்த மனதுடன்தான் பிரச்சனைக்கான தீர்வினைத் தருகிறேன். கிரிமினல் மேல் முறையீடுகளை விசாரிக்கப் போதுமான அதிகாரத்தை, உச்ச நீதிமன்றத்திற்கு நமது நாடாளுமன்றமே வழங்கிவிடலாம். 

உச்ச நீதிமன்றத்திற்கானப் பணியின் அளவையும், உச்ச நீதி மன்றத்தால் எவ்வளவு வேலை செய்ய முடியும் என்பதையும், அங்கு பணியாற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கையையும், அதற்கானப் பொருளாதார செலவுகளையும், நமது நாடு சந்திக்க முடியுமா என்பதற்கானப் புள்ளிவிவரம் திரட்டப்பட்டு, அதை நமது நாடாளுமன்றம் ஆய்வு செய்ய வேண்டும்.

 மரண தண்டனை மேல் முறையீட்டு வழக்குகளை உச்ச நீதிமன்றமே விசாரிக்கலாம் என்பதற்கு மாறாக, மரண தண்டனையை முழுவதுமாக ஒழித்து விடுவதை நான் ஆதரிக்கிறேன். இந்த முடிவைப் பின்பற்றுவதே சரியானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இதனால் பல முரண்பாடுகள் முடிவிற்குக் கொண்டு வரப்படும். 

 நமது நாடு அகிம்சையில் நம்பிக்கை கொண்ட நாடு. அகிம்சை நமது நாட்டின் பண்டைய கலாச்சாரம். மக்கள் தற்போது தங்களின் வாழ்வியல் நெறியாக இதனைப் பின்பற்றாமல் இருந்தால்கூட, அகிம்சையை ஒரு நியாயத் தீர்ப்பாக மக்கள் முடிந்தவரை பின்பற்ற வேண்டும் என விரும்புகின்றனர். இந்த உண்மைக்கு மதிப்பளிக்கும் வகையில், நாம் இந்த மக்களுக்கு ஆற்ற வேண்டிய சரியான பணி மரண தண்டனையை ஒட்டுமொத்தமாக ஒழிப்பதுதான்.....''

 [டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு': 13, பக்கம் 639]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக