வியாழன், 19 ஜனவரி, 2012

அறிவார்ந்த வடிவமைப்பு என்றால் என்ன? பகுதி 1


பரிணாமம். அறிந்த அனைவரையும் உலுக்கிப் போட்ட ஓர் அறிவியல் தேற்றம். ஆதரவாகவும் எதிராகவும் உலகை இருகூறாக பிரித்த ஓர் அறிவியல் கண்டுபிடிப்பு. தொடக்கம் முதல் இன்றுவரை மதவாதிகள் இதற்கு எதிராக சளைக்காமல் சமர் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு அறிவியல் குறித்து அக்கரை இல்லை. அறிந்தாலும் அறியாவிட்டாலும் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் அறிவியலின் அணுகூலங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனாலும் அவர்களின் மத வரம்புகளைக் கடந்து பேசுவதால் முனை மழுங்கியவை என்றாலும் கூட தங்களின் வேத வசனங்களை பரிணாமத்திற்கு எதிரான வாளாக தாங்கி நிற்கிறார்கள். ஆனால் மதங்களின் மழுங்கிய தன்மையை உணர்ந்து கொண்டவர்கள் பரிணாமத்தை எதிர்க்க வேதங்களும் மதப்பிடிப்பும் போதுமானதல்ல எனக் கண்டதால் அவர்கள் கண்டடைந்த ஆயுதம் தான் அறிவார்ந்த வடிவமைப்பு(Intelligent Design) எனும் கொள்கை. பரிணாமக் கொள்கைக்கு எதிரான இந்தக் கொள்கை பரிணமித்ததை விளக்குவது தான் இந்தத்தொடர். தமிழில் வெகுவான கவனம் பெறாத இதனை நண்பர் சார்வாகன் தொடராக எழுதுகிறார். இத்துறையின் அறிஞர்கள் குறித்த அறிமுகம், அவர்களின் விளக்கங்கள் விவாதங்களினூடாக விரியப்போகும் இத்தொடரை இனி சார்வாகன் மொழிதலிலேயே தொடர்வோம்.
************************************************************

மகாகவி பாரதிக்கு “கவிதை எமக்கு தொழில்” என்றது போல் நமக்கு “தேடல் ஒரு தொழில்” என்பதால் தேடுவதை உண்மையின் அளவுகோல் கொண்டு மதிப்பீடு செய்தே தமிழ் சொந்தங்களுடன் பகிர்ந்து வருகிறோம். நம் தேடல: பெரும்பாலும் அறிவியலை எளிமைப்படுத்துவது, இயற்கை சார்ந்த வாழ்வு என்ற எல்லைகளுக்குல் இருந்தாலும் பிற விஷயங்களை பிறரிடம் இருந்தும் கற்று வருகிறோம்.
பரிணாம கொள்கை என்பதுதான் என்ன?
மனிதன் உட்பட்ட அனைத்து உயிரினங்களும் ஒரு செல் உயிர்களில் இருந்து இயற்கை தேர்வு[natural selection],சீரற்ற சிறு மாற்றங்கள்[mutations] ஆகியவற்றால் மாற்றம் அடைந்து தோன்றின‌.
பரிணாமம் இபோதைய அறிவியலின் உயிர் தோற்ற, பரவலாக‌ ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கை என்ற அளவில் அதனை கற்று வருகிறோம். அது குறித்து சில பகிர்தலும் முயற்சித்தோம். பரிணாமத்திற்கும் பிற அறிவியல் கொள்கைகளுக்கு உள்ள வித்தியாசம் என்னவெனில்
“இந்த ஒரு கொள்கை மட்டுமே 90% அறிவியலாளர்களால் ஏற்றுக் கொள்ள‌ப் பட்டாலும் 90% மக்களால் ஏற்றுக்(அறிந்து) கொள்ளப்படாததும் ஆகும்”
மக்கள் எந்தக் காலத்தில் எதை புரிந்து கொண்டார்கள்? பல கொள்கைகள் இப்படித்தான் மக்கள் ஆட்டு மந்தை போல் தினசரி வாழ்வின் தேவைகளை சந்திப்பதிலேயே அவர்கள் வாழ்வு முடிந்து விடுகிறது என்று கூறலாம் என்றாலும், பரிணாம கொள்கை பல மதவாதிகளிடம் இருந்து மிகுந்த எதிர்ப்பை பெற்ற கொள்கையாகும்.
எடுத்துக்காட்டாக இபோதைய பிரபஞ்ச தோற்ற கொள்கையான பெரு விரிவாக்க கொளகை கூட பரிணாமம் போன்றதே.அதாவது
“ஓரணுவில் இருந்து விரிவடைந்து அனைத்து பிரபஞ்சமும் தோன்றியது.” (Big Bang Theory)
“ஓர் செல் உயிர்களில் இருந்து மாற்றம் அடைந்து அனைத்து உயிர்களும் தோன்றியது”. (Evolution theory).
அனைத்து  மதவாதிகளும் பெரு விரிவாக்க கொள்கையை எதிர்ப்பது இல்லை.இது ஏன் என்பது அனைவருக்கும் தெரியும்.வேண்டுமெனில் விளக்குவோம்!.
மதங்கள் கூறும் படைப்புக் கொள்கையையே பரிணாம கொள்கை முன் உயிர்களின் தோற்றமாக ஏற்கப்பட்டு வந்தது. அதனை பரிணாமத்தின் மாற்றாக மதவாதிகள் வைப்பது உண்டும்
1.இளைய பூமி கொள்கை [Young earth creationism]
2.பழைய பூமி கொள்கை [Old earth creationism]
இவற்றின் படி மத புத்தகங்கள் கூறும் படைப்பு செயல்களை இப்போதைய அறிவியலின் உறுதிப்படுத்தப்பட்ட முடிவுகளோடு ஒட்டியோ, வெட்டியோ விளக்குவதாகும். இவற்றில் பல சிக்கல்கள் இருப்பதால் பரிணாம்த்திற்கு மாற்று ஒன்று இருந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அது அறிவார்ந்த வடிவமைப்பு[Intelligent Design] என்று அழைக்கப்படுகிறது.
அதனை என்ப்படி வரையறுப்பது?
பிரபஞ்சம்,உயிரினங்கள் தோற்றம் உள்ளிட்ட பல செயல்கள், தன்மைகள் போன்றவை ஒரு  அறிவு சார்ந்த காரணி மூலமே நன்றாக விளக்க முடியுமே தவிர ஒழுங்கற்ற இயறகை தேர்வு மற்றும் சீரற்ற சிறு மாற்றத்தினால் அல்ல.”
“certain features of the universe and of living things are best explained by an intelligent cause, not a possibly undirected process such as natural selection.”
இது குறித்த பல தகவல்களை இத்தொடர் பதிவில் பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக