திங்கள், 9 ஜனவரி, 2012

கடவுள் ஏன் இருக்கக்கூடாது – விவாதம்: பகுதி 3




விவாதப்பகுதி இரண்டு வெளியான அடுத்த நாளிலேயே நண்பர் குலாம் தன்னுடைய தளத்தில் சில பின்னூட்டங்களில் பதில் கூற முயன்றிருக்கிறார். அதுவும் பதிவின் கேள்விகளை முழுமையாக உள்ளடக்காமல் ஒன்றிரண்டை மட்டும் குழப்பமான முறையில் தொட்டுச் சென்றிருக்கிறது. தொடர்ந்து அவர் பின்னூட்டத்தில் பதில் கூறுவார், அல்லது தனிப்பதிவாக எழுதுவார் என்று இதுவரையில் காத்திருந்தேன். அப்படி எதுவும் நடக்காததால் பகுதி 3 வெளிவருகிறது. மட்டுமல்லாது, இந்த தலைப்பு குறித்து இனி அவர் தன்னுடைய தளத்தில் எழுதும் கட்டுரைகள் என்னுடைய கவனத்திற்கு வந்தால், உகந்த காலத்தில் பதிலளிக்கப்படும். அதாவது, நண்பர் குலாம் பதிலளித்தாலும் அளிக்காவிட்டாலும் இந்த விவாதப்பகுதி தொடரும்.

நண்பர் குலாம் விவாதம் குறித்து எதுவும் பேசாமல் கள்ள மௌனம் சாதித்துக் கொண்டிருக்கிறார். இப்படி கள்ளத்தனமாக இருப்பதற்கு ஏன் அவர் என்னை விவாதத்திற்கு அழைக்க வேண்டும்? இதற்கு அவர் பதில் கூறியாக வேண்டும். பதில் கூறும் கடமை அவருக்கு இருக்கிறது என்பது அவரின் விளக்கங்களுக்கு அளித்த மறுப்பில் விரிவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இனியும் அவர் கள்ள மௌனம் சாதித்தாலோ, நேரமில்லை என்று பல்லவி பாடினாலோ, என்னிடம் விவாதம் செய்தால் பதில் கூற முடியாமல் அம்பலப்பட நேரும் என்பதை உணர்ந்து கொண்டதால் தான் விவாதத்தை தவிர்க்க முனைகிறார் என்றும், அதுவும் வெளிப்படையாக தெரிந்துவிடக்கூடாது என்பதால் ஏதேதோ கூறி சமாளிக்கிறார் என்றும், நான் முடிவு செய்ய நேரிடும் என்பதை இதன் மூலம் அவருக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

நண்பர் குலாம் தன்னுடய பதிவை வெளியிட்டதும் எனக்கு முறைப்படி தெரிவிக்கவில்லை. அப்படி தெரிவிக்காதன் காரணமாக என்மீது ஒரு குற்றச்சாட்டையும் தெரிவித்திருக்கிறார். அதேநேரம் எனக்கு தெரிவிக்காததற்கு என்மீதான நம்பகத்தன்மையின் குறைபாடு என்று காரணம் சொன்னதை இந்தளத்தில் தெரிவித்திருக்கிறார். என்றால் ‘நம்பகத்தன்மையின் குறைபாடு’ சரியாகி விட்டதா? நான் எதுவும் செய்யாமலேயே சரியாகிவிடக்கூடிய குறைபாட்டால் தான் அவரது பதிவை எனக்கு தெரிவிக்காமல் இருந்தாரா? இந்தக் கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். அவர் வைக்கும் குற்றச்சாட்டே அபத்தமாகவும், பொருந்தாததாகவும் இருக்கிறது. ராபின் என்பவர் \\குலாம் விவாதத்தை தவிர்க்க ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார்// என்றொரு பின்னூட்டத்தை இட்டிருக்கிறார். இது குலாம் மீது வைக்கப்பட்ட விமர்சனம். இதை மறுத்து நண்பர் குலாம் விளக்கமளித்தும் இருக்கிறார். (அதுவும் விமர்சனத்தின் மீதான விளக்கமாக இல்லாமல் திசைதிருப்பலாக இருக்கிறது என்பது வேறு விசயம்) ஆனாலும் நான் “நண்பர் குலாம் வல்லவர், மெய்யாகவே அவருக்கு நேரமில்லாததால் தான் விவாதத்தில் பங்கெடுக்க சிரமப்படுகிறாரேயன்றி, இதில் சமாளிப்பு எதுவுமில்லை” என்று நான் பதில் கூறியிருந்தால் என்னுடைய நம்பகத்தன்மையில் குறைபாடு எதுவும் நண்பருக்கு வந்திருக்காது போலும்.

இந்த நம்பிக்கை குறைபாட்டில் என்ன தான் சொல்ல வருகிறார் நண்பர். \\இந்த பின்னூட்டத்தை வெளியிட்ட நீங்கள் அதுக்குறித்து எதும் சொல்லவில்லையே., சகோ ராபின் கிறித்துவ மதத்தை பின்பற்றினாலும் உங்களை பொருத்தவரை கடவுள் உண்டென்கிறார் என்ற நிலைப்பாட்டின் கீழ் வருகிறார். அவர் உங்களை நோக்கி கருத்தை முன்வைக்கா விட்டாலும் உங்கள் நிலைப்பாட்டிற்கு எதிரான கருத்துடையவர். ஆக நீங்கள் அவருக்கு எந்த வித மறுப்போ அல்லது விவாத அழைப்போ ஏன் விடுக்க வில்லை. குறைந்த பட்சம் அவரது கொள்கையும் குறைபாடுடையாதாக ஏன் அங்கு ஒரு வரியை முன்வைக்கவில்லை. நீங்கள் சொல்லலாம் அவர் என்னை நோக்கி கருத்தை பதியவில்லை என… பின் அவரது வருகை அங்கு எதற்காக? என்னை விமர்சிக்கவா…? எனக்கும் முகவரி இருக்கிறது சகோ ஆக உங்கள் நோக்கம் கடவுள் கோட்பாட்டை எதிர்ப்பதில் இல்லை. மாறாக இஸ்லாத்தை (மட்டும்) விமர்சிப்பதே என்பது தெளிவாகிறது. இதுவே உங்களுக்கு தெரியப்படுத்தாதற்கு காரணம்// அந்த ராபின் பின்னூட்டம் குலாம் என்பதற்குப் பதிலாக செங்கொடி என்று குறிப்பிட்டு நான் ஏதேதோ கூறி சமாளிப்பதாக இடப்பட்டிருந்தாலும் அதுவும் வெளியிடப்பட்டு என்னிடமிருந்து பதிலேதும் கூறப்படாமல் விடப்பட்டிருக்கும். இதற்கு முன்னர் நடந்த விவாதங்களை படித்துப் பார்க்கலாம். பல பின்னூட்டங்கள் அவ்வாறு எழுதப்பட்டும் இருக்கிறது, அவை வெளியிடப்பட்டும் இருக்கிறது. விவாதம் என்று வந்துவிட்டால் அதில் பதியப்படும் வேறு எந்த கருத்துக்களையும் நான் கண்டு கொள்ள மாட்டேன் என்பதை பலமுறை நான் அறிவித்திருக்கிறேன். மட்டுமல்லாது, இப்படியான கருத்துக்கள் வருவதற்கான வாய்ப்புண்டு, வந்தால் அவைகளை பொருட்படுத்தத் தேவையில்லை என்று நான் நண்பர் குலாமுக்கு ஏற்கனவே செங்கொடி தளத்தில் நேரடியாக அறிவுறுத்தியிருக்கிறேன். இதன் பின்னரும் அவருக்கு பதிலளிக்காதது நண்பருக்கு என்மீதான நம்பகத்தன்மையில் குறைவை ஏற்படுத்துகிறது என்றால் அதன் பொருள் என்ன?

நண்பரின் விளக்கங்களில் திருப்தியுறாத ஒருவர், நீங்கள் சமாளிக்கிறீர்கள் என்று நண்பரைக் கூறினால், அவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பதைக் கண்டறிந்து, நீங்கள் கடவுளை நம்புபவர் எனும் பொதுப் பிரிவில் வருகிறீர்கள். அது என்னுடைய நிலைபாட்டுக்கு எதிரிடையானது எனவே நான் உங்களை எதிர்க்கிறேன் என்று கருத்து கூற வேண்டுமா? என்ன அபத்தம் இது. என்னுடைய வாதங்களை எதிர்த்து அவர் கருத்துக் கூறியிருந்தால் கூட நீங்கள் ஏன் பதிலளிக்கவில்லை என்று கேட்பதற்கு குறைந்தபட்ச நியாயமாவது இருக்கும். அவ்வாறில்லாத போதிலும் கூட அது என்மீதான நம்பகத்தன்மையில் குறைவை ஏற்படுத்துகிறது என்று கூறினால் அதன் பொருள் என்ன? எதையாவது கூறியாக வேண்டுமே எனும் நிர்ப்பந்தத்தில் தேடிப்பிடித்து இதை காரணமாக நண்பர் காட்டியிருக்கிறாரே தவிர அதில் வேறு ஒன்றுமில்லை என்பது தெளிவு.

சரி, இதில் என்னுடைய நோக்கம் நாத்திகமல்ல, இஸ்லாத்தை மட்டும் விமர்சிப்பது என்பதை எந்த அடிப்படையிலிருந்து நண்பர் கண்டு கொண்டார்? குலாமின் பதில் சமாளிப்பாக ஒருவருக்கு தெரியும் கருத்திலிருந்து நுணுகி ஆராய்ந்து, வளைத்து நெளித்து இஸ்லாத்தை விமர்சிப்பது மட்டுமே என்னுடைய நோக்கம் என்பதைக் கண்டுபிடித்து, அதனால் என் மீது நம்பகத்தன்மையில் குறைபாடு என்று முடிவுக்கு வரமுடியும் என்றால், நேரடியாக அவரை நோக்கி எழுப்பப்பட்ட பல கேள்விகளுக்கு பதிலைக் கூறாமல் “அர்த்த புஷ்டியுடன் அமைதியாக இருக்கும்” நண்பர் குறித்து நான் என்ன முடிவுகளுக்கு வருவது? முடிவாகச் சொல்வதானால் ராபினின் பின்னூட்டத்தை காரணமாக காட்டிக் கொண்டே, அந்தப் பின்னூட்டத்தை உறுதிப்படுத்தும் சான்றை தந்துள்ளார்.

இனி நண்பரின் தலைப்புக்குட்பட்ட பின்னூட்டக் கருத்துகளைப் பார்க்கலாம். \\ஒரு கோட்பாட்டை ஏற்காமல் இருப்பது வேறு., மறுப்பதென்பது என்பது வேறு. ஏற்காவிட்டால் விளக்க வேண்டிய அவசியம் இல்லை, ஏனெனில் ஏற்பது என்ற அடிப்படை போன்று நம்பிக்கையின் கீழ் அதைக்கொண்டு வரலாம்// ஒன்றின் மீது நம்பிக்கை கொள்வதற்கும் அதை ஏற்பதற்கும் இடையில் பெருத்த வித்தியாசம் இருக்கிறது. நம்பிக்கை என்பது சான்றுகள் இல்லாத நிலையிலும் கூட அதை சரி காண்பது. ஏற்பு என்பது சான்றுகள் இருந்து அதை சோதித்தறிந்த பின்னர் ஏற்படுவது. எனவே அடிப்படையில் இரண்டும் வேறு வேறானது. அதே நேரம் ஏற்காமல் இருப்பதும் அதையே மறுப்பதும் இருவேறு பக்கங்கள் தான். நான் இஸ்லாத்தை மறுக்கிறேன் என்றால், அதன் பொருள் ஏற்காமால் இருக்கும் நிலையை வெளிப்படுத்து மட்டுமல்ல. தரவுகளின் அடிப்படையில் காரண காரியங்களை விளக்கி மறுத்துக் கொண்டிருக்கிறேன்.

நான் கம்யூனிசத்தை ஏற்கிறேன், அந்த அடிப்படையில் நின்று இஸ்லாம் எனும் நம்பிக்கையை மறுக்கிறேன். மறுப்பதை நான் மேலெழுந்தவாரியாக செய்திருக்கிறேனா? இல்லை. ஆழமாகவும் அழுத்தமாகவும் செய்திருக்கிறேன். எடுத்துக்காட்டாக நண்பர் கூறும் சட்டப் பிரச்சனையையே எடுத்துக் கொள்வோம். சட்டங்களின் தன்மை என்ன என்பதை விளக்கியிருக்கிறேன். அதன் பயன்பாடுகள், கடந்து வந்த பாதை, இதுவரையான சட்டங்களின் வீச்சு என அனைத்தையும் விளக்கிவிட்டு, அதன் பிறகு மனிதச் சட்டங்களில் இருக்கும் குறைபாடுகள் குறித்தும், மனிதச் சட்டங்களின் நோக்கம், அவை செயல்படும் விதம் குறித்தும் விளக்கியிருக்கிறேன். எதிர்நிலையில் இறைச் சட்டம் என்று ஒன்றுமில்லை எல்லாம் மனிதச் சட்டங்களே என்பதை வாதமாக வைத்திருக்கிறேன். இவ்வளவுக்கும் பிறகு நடப்பில் இருக்கும் சட்டங்களை கற்பனைகளுடன் ஒப்பீடு செய்யமுடியாது என்பதையும் உறுதி செய்திருக்கிறேன். இவைகளை மறுத்து நண்பர் செய்திருப்பது என்ன? மனிதச் சட்டங்கள் குறையுடையவை என்று கூறி அதற்கு மாற்று என்பதாக தன்னுடைய நம்பிக்கையை, வெற்று கற்பனையை கூறியிருக்கிறார். மெய்யாகவே மனிதச் சட்டங்களுக்கு ஒரு மாற்றை கூறவேண்டும் என்றால் இறைச் சட்டம் என எதையாவது முன்வைத்து அது நடப்பில் செயல்படும் தன்மையுடன் இருக்கும் நிலையில் அதை மனிதச் சட்டத்துடன் பொருத்திக் காட்டி, இறைச்சட்டமே சிறந்தது எனக் காட்டினால் அதை சரியான வாதமாக கொள்ள முடியும். ஆனால் நண்பரோ மனிதச் சட்டங்களுக்கு மாற்று என்று கற்பனையை முன்னிருத்துகிறார்.

ஆனால் இப்போது நடைமுறையில் இருக்கும் சட்டங்களுக்கு மாற்றாக நான் சோசலிச நோக்கங்களை முன்வைத்திருக்கிறேன். சோசலிச சட்டங்களும் சாராம்சத்தில் நடப்பிலிருக்கும் மனிதச் சட்டங்களைப் போன்றது தான். ஆனால் அதன் நோக்கம் நடப்பிலிருக்கும் சட்டங்களைப் போலல்லாது, குற்றங்களை செய்யத் தூண்டும் மனோநிலை, சமூகச் சூழல் ஆகிய அனைத்தையும் மாற்றுவதன் மூலம் குற்றங்களை சமூகத்திலிருந்து நீக்க முயற்சிக்கும் என்றும் கூறியிருக்கிறேன். இவைகளை மறுத்து நண்பர் ஏதாவது கூறியிருக்கிறாரா? ஒன்றுமில்லை. ஆனால் \\இவ்வுகலகில் உண்டான மனித உருவாக்க சட்டத்தால் சாத்தியமில்லையென்கிறேன்// என்று வாதங்களை வைக்கு முன்பு தானே தீர்ப்பெழுத முயற்சிக்கிறார். எந்த அடிப்படையில் சாத்தியமில்லாதவை விளக்க முடியுமா அவரால்?

எடுத்து வைத்தவற்றுக்கு முறையான பதிலில்லை. தன்னுடைய பக்கத்தின் வாதங்களை முழுமையாக எடுத்து வைக்கவில்லை. ஆனாலும் இப்படி கூறிக் கொள்கிறார் \\இல்லை .. செங்கொடி தளத்தில் விளக்கம் போல் புனையப்பட்டு இருக்கிறது// இதை பிதற்றல் என்பதாகவன்றி வேறு எப்படி எடுத்துக் கொள்வது? இப்படி பிதற்றல்களை அள்ளிக் கொட்டுவது யாரை ஏமாற்ற?

\\நீங்களோ மனித உருவாக்கசட்டங்கள் குறைப்பாடுடையவை அவை வர்க்கரீதியாக வாழும் மக்களின் சூழ்நிலைக்கு தக்கவாறு நெகிழ்வடையும். எனினும் அதிகப்பட்ச நீதமான ஆட்சிமுறை கம்யூனிசத்தால் மட்டுமே முடியும் என்கிறீர்கள்.- இது பதில் அதிகப்பட்ச சாத்திக்கூறுகள் எதில் என்பதல்ல.. நூறு சதவீகிதம் முழுமையான சட்டங்கள் எங்கே என்பதே என் கேள்வி// சோசலிசத்தால் மட்டுமே அதிகபட்ச நீதமான ஆட்சிமுறை வழங்க முடியும் என்று மட்டுமா கூறியிருக்கிறேன். சட்டங்கள் என்பது குற்றங்களுக்கு எதிரான எதிர்வினை மட்டுமே, அது குற்றங்களுக்கு எதிரான தீர்வு அல்ல. கம்யூனிசம் குற்றங்கள் நிகழ்வதற்கான சமூகச் சூழலை, மனோநிலையை மாற்றுவதன் மூலம் குற்றமற்ற சமூகத்தை கட்டியமைப்பதை நோக்கமாக கொண்டிருக்கிறது.  எதில் முழுமை இருக்கிறது? குற்றங்கள் நிகழவிட்டு தண்டனை வழங்குவதிலா? குற்றங்களே நிகழாமல் மாற்றுவதா? சட்ட ரீதியாக மட்டுமல்ல, குற்றங்களையும் மனித முன்னேற்றங்களுக்கு எதிரான அத்தனையையும் சமூகத்திலிருந்தே நீக்குவதற்கான முனைப்பு சோசலிசத்தைத் தவிர வேறு எதற்காகவது இருக்கிறதா? இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். மாறாக சாத்தியமில்லை என்று ஒற்றைச் சொல்லில் கடந்து செல்லாமல், உங்களின் முன்முடிவுகளையே உண்மை என திரிக்காமல், முடிந்தால் எப்படி சாத்தியமில்லை என்பதை கூறுங்கள் பின்னர் நான் விரிவான தரவுகளுடன் வருகிறேன்.

இந்த விசயத்தில் இன்னொரு கேள்வியையும் எழுப்பியிருக்கிறார், சட்டத்தின் முன் கொண்டு வரப்படாதவர்களை என்ன செய்வது? என்று. ஒன்றும் செய்யமுடியாது. நடப்பில் இருக்கும் குற்றங்களைக் கண்டுபிடிக்கும் நடைமுறையில் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தி சட்டத்தின் முன் வராமல் ஒருவரால் தப்பிக்க முடிகிறது என்றால், சட்டத்தின் முன் கொண்டுவராதவரை அவரை எதுவும் செய்ய முடியாது. மனிதச் சட்டமானாலும், இறைச் சட்டமானாலும், சோசலிசச் சட்டமானாலும் இதில் மாற்றம் ஒன்றுமில்லை. மாறாக, இதற்கு மாற்று என்று கூறிக் கொண்டு ஆண்டவன் தண்டிப்பான் என்று கற்பனை செய்து கொள்வதில் திருப்தியடைய முடியுமா? ஆனால் சோசலிச நோக்கத்தில் இதற்கான மாற்று இருக்கிறது என்பதை வெளிப்படுத்தியிருக்கிறேன். சோசலிசத்தின் நோக்கம் குற்றங்களுக்கான மனோநிலையை நீக்குவதிலும், குற்றத்திற்கான சமூகச் சூழலை நீக்குவதிலும் முனைப்பு கொண்டிருக்கிறது என்பதால் நண்பர் எதிர்பார்க்கும் நூறு நூற்றுமேனிக்கு முழுமையான சமூகம் சோசலிசத்தால் மட்டுமே சாத்தியம் என்பதை உரத்துக் கூறுகிறேன்.

கம்யூனிசம் எங்களின் நம்பிக்கையல்ல, எங்களின் ஏற்பு. அதை ஒரு மதத்தின் மீதான நம்பிக்கையைப் போல் உருவகப்படுத்துவது மடமை. இஸ்லாம் முன்னிருத்தும் கேள்விகளை மட்டுமல்ல அதையும் தாண்டி விளக்கமளிக்கவும், பதில் தரவும் தயார். உங்களிடம் கேள்விகள் இருக்கின்றனவா? இருந்தால் எடுத்துவாருங்கள் நான் ஆயத்தமாகவே இருக்கிறேன்.

அடுத்து, கடவுள் என்ற ஒரு நிலை இல்லையென்றால் இயற்கை எல்லாவற்றையும் முழுமைப்படுத்தி இருக்க வேண்டும் என்பது போல் எழுதியிருக்கிறார். இதற்கான விளக்கம் அவரின் வேறொரு கட்டுரையில் கிடைத்தது. அதாவது பறவைகள் யாரும் சொல்லித்தராமல், பயிற்சியெடுக்காமல் பறக்கின்றன. இதுபோல பல விலங்குகள் தங்களுக்கென்று இயற்கையாக அமைந்த சில பண்புச் செயல்கள் இருக்கின்றன. அதுபோல மனிதனுக்கு இல்லையே, நடப்பதற்குக் கூட பெற்றோரின், மற்றோரின் உதவிகள் தேவைப்படுகின்றன. இதனால் கடவுள் இருப்பதை நம்புங்கள் என்கிறார். கடவுள் இருக்கிறார் என்பதைத் தவிர வேறெந்த கருத்தையும் படித்தறியத் தேவையில்லை எனும் முன்முடிவுதான் இது போன்ற கேள்விகளை எழுப்ப காரணமாக அமைகிறது.

முதலில், இப்படி ஒரு நிலை இருப்பது கடவுளின் இருப்பை உறுதிப்படுத்துமா? மனிதனைத்தவிர ஏறக்குறைய அனைத்து உயிரினங்களுக்கும் ஏதாவது ஒன்றோ, பலவோ பண்புச் செயல்கள் இருக்கின்றன. மனிதனுக்கு அவ்வாறு இல்லை என்பதால் கடவுள் அவசியம் என்றால் பிற உயிர்களுக்கு இருக்கிறது என்பதால் கடவுள் அவசியமில்லை என எடுத்துக் கொள்ளலாமா? தர்க்க ரீதியான இந்தக் கேள்வியில் கடவுளின் இருப்பு அனைத்து உயிர்களுக்கும் பொதுவான ஒன்றல்ல மனிதனுக்கு மட்டும் சிறப்பான ஒன்று என்றாகிறது. இதை குறிப்பிட்ட மத நம்பிக்கையாளர்கள் மட்டுமல்ல எந்த கடவுள் நம்பிக்கையாளரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பொதுவான ஒன்றாக இல்லாமல் மனிதனுக்கு மட்டும் என்றாலே அதன் உட்பொருள் பிற உயிரினங்களில் இல்லாத மனிதனிடம் இருக்கும் ஒன்றுதான் கடவுளின் இருப்புக்கு காரணமாக இருக்கிறது என முடிவு செய்யலாம். பிற உயிரினங்களிடம் இல்லாத மனிதனிடம் இருக்கும் ஒன்று என்றால் அது கருத்தியல் வளர்ச்சி தான். இது பொருள், இது அதனைச் சார்ந்த கருத்து என்று பிரித்தரியத் தெரிந்த ஒரே உயிரினம் மனிதன் மட்டும் தான். எனவே மனிதனின் கருத்தியல் வளர்ச்சி தான் கடவுளை உருவாக்கியிருக்கிறதேயன்றி அது மெய்யான ஒன்றல்ல.

இதை இன்னொரு கோணத்தில் பார்த்தால், சிறப்பான பண்புச் செயல்களைத் தவிர்த்து பார்த்தால் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களுமே சில செயல்களை கற்றுக் கொள்வதற்கு அவசியமின்றி இயல்பாகவே கொண்டிருக்கின்றன. வெளியிலிருந்து ஆக்ஸிஜனை உள்ளிழுத்துக் கொள்வது, உணவை வாய் வழியாக இரப்பைக்கு செலுத்துவது என்பன போன்று சில செயல்கள் எல்லா உயிரினங்களும் செய்கின்றன. ஆனால் மனிதனைத் தவிர வேறு உயிரினங்களுக்கு இவைகளைவிட மேலதிகமான சில செயல்கள் அந்த பட்டியலில் இருக்கின்றன. இதை எப்படி புரிந்து கொள்வது? உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத செயல்கள் கற்றுக் கொள்வதற்கு அவசியமில்லாத இயல்பாக உயிரினங்களிடம் தங்கி நிற்கின்றன. பறக்கத் தெரியாத பறவையால் உயிர்வாழ முடியாது. ஆனால் நடக்கத் தெரியாத மனிதனால் உயிர்வாழ முடியும். மனிதன் தான் முயன்று பெற்ற சிந்தனை மேம்பாட்டால் கருவிகளின் வழியே வாழப் பழகிக் கொண்டான். செருப்பு இல்லாமல் மனிதன் நடப்பது மனிதனுக்கு வெகு சிரமமான செயல் இன்று, ஆனால் பிற உயிரினங்களுக்கோ அது வெகு இயல்பானது. இதுபோன்று கருவிகளின் பாவனையால் மனிதனின் உயிர்வாழும் பாதுகாப்பு மேம்பட்டிருக்கிறது. இந்த மேம்பாட்டினால் கற்றுக் கொள்ள அவசியமில்லாத இயல்பான பண்புச் செயல்களை மனிதன் இழந்து வருகிறான்.


இன்றிருப்பதைவிட மிகைத்த மோப்ப சக்தி, நிலத்தின் அதிர்வுகளை பாதத்தின் மூலம் உணர்ந்து பெருவிலங்குகளின் அருகாமையை அறிந்து கொள்வது போன்ற சில பண்புகள் இல்லாவிட்டால் ஆதி மனிதன் நீடித்து உயிர் வாழ்ந்திருக்க முடியுமா? ஆகவே இது போன்ற செயல்கள் உயிரினங்களின் உயிர்வாழும் பாதுகாப்பைப் பொருத்தது. ஏனைய அனைத்து உயிரினங்களையும் விட உயிர்வாழும் பாதுகாப்பை அதிகம் பெற்றிருப்பவன் மனிதன். அதனால் இதுபோன்ற செயல்களை குறைவாக பெற்றிருக்கிறான். ஒப்பீட்டளவில் குறைவான பாதுகாப்பை உடைய பிற உயிரினங்கள் மனிதனை விட அதிக செயல்களைப் பெற்றிருக்கின்றன. இதுதான் காரணமேயன்றி இதில் கடவுளின் இருப்பு கொஞ்சமும் இல்லை. ஒரு திரைப்படத்தில் சிரிப்பு நடிகர் ஒருவர் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் முன்பே ”விக்ஸ் என்பதைத்தான் அப்படி சுற்றிச்சுற்றி எழுதியிருக்கிறேன்” என்பார். அதைப் போல பண்புச் செயல்களை இயற்கை கடவுள் என்று வார்த்தைகளால் சுற்றிச்சுற்றி எழுதப்பட்டிருக்கிறதேயன்றி அதில் வேறொன்றுமில்லை.

என்னிடம் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு வெளிப்படையாகவும், விளக்கமாகவும் பதிலளித்திருக்கிறேன். இதில் ஐயமிருந்தாலும், இந்த தலைப்பில் புதிய கேள்விகளை எழுப்புவதென்றாலும் நான் ஆயத்தமாகவே இருக்கிறேன். மாறாக, பதில் கூறியது போலும் இருக்க வேண்டும், தப்பித்தும் செல்ல வேண்டும் என்று முகமயிரில் மண் ஒட்டாமல் பாதுகாத்துக் கொள்ளும் அவசியம் எனக்கில்லை. இந்த இடுகையை படர்க்கை வாக்கியங்களாகத் தொடங்கிய நான் படிப்படியாக முன்னிலை வாக்கியங்களுக்கு மாறிக் கொண்டேன். படர்க்கையாக கொண்டாலும், முன்னிலையாக கொண்டாலும் எனக்கு சம்மதமே.

பின்குறிப்பு 1: பகுதி இரண்டில் எழுப்பப்பட்டிருந்த பலவற்றுக்கு நீங்கள் விளக்கமோ, மறுப்போ தராமல் கடந்து சென்றுள்ளீர்கள். அவைகளை உங்களால் மறுக்க முடியவில்லை என்றோ, ஏற்கிறீர்கள் என்றோ கொள்ளலாமா?

பின்குறிப்பு 2: இந்த கட்டுரையை நான் எழுதத் தொடங்கிய பின்னர், இந்த தலைப்புக்குட்பட்டு ஒரு கட்டுரையை ”கடவுளை விமர்சிக்கும் ஓர் அறிவாளி” என்ற பெயரில் வெளியிட்டுள்ளீர்கள். இதை எழுதத் தொடங்கிய பின்னரே அது என் கவனத்திற்கு வந்தது என்பதாலும், அதையும் உள்ளடக்கினால் மிக நீண்டதாக அமைந்துவிடும் என்பதாலும் அதற்கான மறுப்பு அடுத்த பகுதியாக வெளிவரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக