புதன், 25 ஜனவரி, 2012

கடவுள் ஏன் இருக்கக்கூடாது – விவாதம்: பகுதி 4

 




விவாதப் பகுதி 3 க்கு நண்பர் குலாம் ஒற்றை வரியில் தன் பதிலை முடித்துவிட்டிருக்கிறார். ”உங்கள் மீது நம்பகத்தன்மை இல்லை” அவ்வளவு தான். நம்பகத்தன்மை குறித்து கடந்தமுறை அவர் கூறிய பொருந்தாக் காரணத்தை, அது எவ்வாறு பொருந்தாமல் இருக்கிறது என்பதை தெளிவாக விளக்கியிருந்தும், அதற்கு பதிலேதும் கூறாத நிலையில் மீண்டும் அதே காரணத்தைக் கூறி பதில் கூறும் கடமையை தட்டிக் கழித்திருக்கிறார். இதன் மூலம் அவர் மீது இரண்டுவித முடிவுகளுக்கு என்னால் வரமுடிகிறது.

1) என்னுடன் விவாதம் செய்ய குலாம் தயாராக இல்லை. காரணம், அவ்வாறு செய்தால் தன்னுடைய நிலையை தக்கவைத்துக் கொள்ள முடியாமல் தடுமாறி, அம்பலப்பட நேரலாம் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். கடந்த பதிவுக்கு அவர் பதிலளிக்கவில்லை என்பதைக் கொண்டு மட்டும் இதை கூறவில்லை. அவருடைய முறைமைகளைக் கொண்டே கூறுகிறேன். கடவுளுக்கான வரைவிலக்கணம் குறித்தும், சட்டப் போதாமை குறித்தும், தர்க்க ரீதியான கடவுள் இருப்பு குறித்தும் செங்கொடி தளத்தில் என்னுடன் விவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்திற்கு மேல் பின்னூட்டத்தில் முழுமையாக விவாதிக்க முடியாது என்று கூறி நழுவினார். பின்னூட்டத்தில் முழுமையாக விவாதிக்க முடியாது என்பதை உணர்ந்த அவர், அதன் பிறகும்கூட வேறுசில தளங்களில் சென்று பின்னூட்ட விவாதங்களில் ஈடுபட்டிருக்கிறார், அல்லது ஈடுபட ஆர்வம் தெரிவித்திருக்கிறார். ஆக பின்னூட்டங்களில் முழுமையாக விவாதிக்க முடியாது எனும் அவரது முடிவு எனக்கு மட்டுமானது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. சரி, பின்னூட்டங்களில் முழுமையாக விவாதிக்க முடியாது என உணர்ந்ததன் பின்னர் அவருடைய தளத்தில் பல இடுகைகளை இதுவரை இட்டுள்ளார், அதில் கடவுளின் இருப்பு குறித்த இடுகைகளும் அடங்கும். ஆனால் அவைகள் எதிலும் நான் எழுப்பிய கேள்விகள் எவற்றுக்கும் பதிலில்லை. மட்டுமல்லாது அவ்வாறான பதிலை கூறும் ஆர்வம் இருப்பதாகவும் வெளிக்காட்டப் படவில்லை. இவைகளெல்லாம் செங்கொடி தளத்திற்கானவை.

நல்லூர் முழக்கம் தளத்திலும் பின்னூட்டங்களில் விவாதிக்க ஆர்வப்படுவதாக தெரிவித்திருந்தார். காரணம், செங்கொடியான நான் தான் நல்லூர் முழக்கம் தளத்தையும் நடத்துகிறேன் என்பது அவர் அறியாதது. நான் செங்கொடி என்பதை வெளிப்படுத்தி அவருக்கு பதிலளித்த பிறகு தான், விவாதத்தை தவிர்ப்பதற்காக மடக்கி, மடக்கி பொருந்தாத விளக்கங்களை அளித்துக் கொண்டிருந்தார். அதுவும் பலிக்காது என அறிந்ததும் மௌனமாகி விட்டார். அதிக பட்சம் ஒரு ஆண்டுக்கு ஒரு பதிவு என்றாலும் பதில் கூறுவதற்கு பிடிவாதமாக மறுக்கிறார். ஆகிய இவைகளிலிருந்து தான் அந்த முடிவுக்கு வந்திருக்கிறேன்.

இது தொடர்பாக விளக்கம் ஒன்றையும் நண்பர் குலாமுக்காக இங்கு பதிவு செய்து விடலாம். விவாதம் என்பது ஒரு நிலைப்பாட்டில் எது சரியானது என்பதை தம்மளவில் தீர்த்துக் கொள்ள உதவும் ஒரு கருவி. அறிதல் எனும் நிலையில் வெற்றியும் தோல்வியும் சமமானதே. தோல்வி ஏற்புக்குறியதல்ல எனும் கருத்து இருப்பதால் தான் நண்பர் தவிர்க்க முயல்கிறார். ஆனால் அது தேவையற்றது. தோல்வி என்பது நம் தேடலை, அறிதலை அகலமாகவும், ஆழமாகவும் செய்வதற்கு உதவக்கூடியது. அதை முன்னிட்டு தவிர்க்காதிருப்பதே சிறந்தது.

2) மாற்றுக் கருத்து கொண்டிருப்பவர்கள் மீது கேள்வி எழுப்பும் தார்மீக உரிமை நண்பர் குலாமுக்கு இல்லை. தன்னுடைய கருத்தைத்தான் பிறரும் கொண்டிருக்க வேண்டும் என யாரும் வற்புறுத்த முடியாது, அதேநேரம் பொதுவிலிருக்கும் ஒரு கருத்தை யாரும் விமர்சனம் செய்யலாம். ஆனால் ஒருவர் அவ்வாறு விமர்சனம் செய்கிறார் என்றால் அவருக்கு பதில் கூறும் கடமை இருக்கிறது என்பதே அதன் பொருள். பதில் கூறும் கடமையை கையில் எடுத்துக் கொள்ளாத யாரும் விமர்சனம் செய்வதற்கு தகுதியற்றவர்கள். குலாம் பதில் கூறும் கடமையிலிருந்து நழுவி விடுவதற்கு எல்லா முயற்சிகளையும் செய்கிறார் என்பதால் விமர்சனம் செய்யும் உரிமையும் அவரிடமிருந்து நழுவி விடுகிறது.

தமிழ் இணைய உலகில் எகிறிக் குதிக்கும் இஸ்லாமிய பரப்புரை பதிவர்கள் அதிகம். அவர்களின் மத்தியில் நண்பர் குலாம் விதிவிலக்கானவர் என்று நான் மதிப்பிட்டிருந்தேன். காரணம், மதத்தில் அறிவியல் என்று இறுபூறெய்தாத தன்மை(வெகுசில பதிவுகள் அவ்வாறு இருந்த போதிலும்), உணர்ச்சி வயப்படாமல் அறிவுவயப்பட்டு பதில் கூறும் பாங்கு, தர்க்க ரீதியாக அணுகும் முறை போன்றவற்றால் அவ்வாறு கருதினேன். அதனால் தான் அவர் விவாதத்திற்கு வரமறுக்கிறார் என்பது புரிந்த பிறகும், தொடர்ச்சியாக விவாதத்தில் பங்கெடுக்குமாறு அவரை வற்புறுத்தினேன். என்னுடைய அந்த முயற்சியில் தோல்வி தான் என்றாலும் குலாமும் ஏனையோரைப் போல நேர்மை உணர்வற்ற மதப் பரப்புரை பதிவர் தான் என்பதை அறிந்து கொண்ட வகையில் மகிழ்ச்சியே.

இனி அவரின் ”கடவுளை விமர்சிக்கும் ஓர் அறிவாளி?” எனும் பதிவை எதிர் கொள்ளலாம். கடவுளை விமர்சிக்கும் அறிவாளிகள் என்று பொதுத் தலைப்பை தன் பதிவுக்கு இட்டிருந்தால் அதை பொதுவானதாக கருதியிருக்கலாம். ஆனால் ‘ஓர்’ எனும் இலக்க உருபை பயன்படுத்தியிருப்பதால் தனிப்பட்ட யாரையோ உத்தேசித்துத்தான் தன் பதிவை இட்டிருக்கிறார் என்பது புலனாகிறது. ஆனால் அது யார் என்பதை அவர் வெளிப்படுத்தாததால் (வெளிப்படுத்தினால் பதில் கூறும் கடமை வந்துவிடுமே) பொதுவில் நானும் ஒருவன் என்பதாகவே அதை அணுகுகிறேன். நண்பர் குலாம் அந்த பதிவை எழுதி வெளியிடுவதற்கு முன் சற்று சீர்தூக்கி பார்த்திருக்கலாம். என்ன சொல்கிறோம்? அதை எந்த அடிப்படையில் நின்று சொல்கிறோம்? அவைகளில் உண்மையோ பொருத்தப்பாடோ இருக்கிறதா? போன்ற எதுவும் அவருக்கு அவசியமில்லை. கடவுள் இருக்கிறார், அவர் இந்த பேரண்டத்தை நிர்வகிக்கிறார் என்பது அவரது நம்பிக்கை. அதை உண்மைப்படுத்த வேண்டும் என்பது அவரது நோக்கம். இந்த நம்பிக்கையும் நோக்கமும் தான் அதில் இருக்கிறதேயன்றி தர்க்கமோ, அறிவியலோ துளியும் இல்லை.

தன்னுடைய பதிவின் தொடக்கத்திலேயே குலாம் இப்படி குறிப்பிட்டிருக்கிறார், \\கடவுள்! மனித சமூகத்தோடு பிண்ணி பிணைக்கப்பட்ட ஒரு வார்த்தை// மெய்தான். கடவுள் என்பது இயற்கையாக மனிதனுடன் பிணைந்த சொல்லல்ல, திட்டமிட்டு செயற்கையாக திணித்து பிணைக்கப்பட்ட ஒரு சொல்.

கடவுள் இருக்கிறார் என்பதற்கு அறிவியல் ரீதியாகவோ, தர்க்க ரீதியாகவோ அல்லது வேறொந்த வடிவிலோ ஒரு நிரூபணமும் இல்லை. ஆனால் நம்பிக்கை சார்ந்த அந்த கற்பிதத்தை, அறிவியல் இன்னும் தொடாத உயரங்களில் நின்று கொண்டோ, மக்களின் அறிதல் ஐயங்களை பயன்படுத்திக் கொண்டோ சில கேள்விகளை எழுப்பிவிடுவதன் மூலம் மெய்ப்படுத்திவிட முனைகிறார்கள். அன்றிலிருந்து இன்றுவரை இது தான் நடந்து கொண்டிருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், கடவுள் இல்லை என்பதை உங்களால் நிரூபிக்க முடியாது என நாங்கள் நம்புகிறோம், அதுவே கடவுள் இருப்பதற்கான ஆதாரம், என்பது தான் அவர்களின் வாதமுறைமை. ஒன்று இருக்கிறது என உறுதியாக கூறவேண்டும் என்றாலே அதன் இருப்பு ஐயந்திரிபற நிரூபிக்கப் பட்டிருக்க வேண்டும். அவ்வாறு நிரூபிக்கப் பட்டிருக்கவில்லை என்றால் அதை யூகமாக மட்டுமே கொள்ள முடியும். கடவுள் இருக்கிறார் என்பது ஐயந்திரிபற நீருபிக்கப்பட்டிருக்கிறதா? என்றால் இல்லை என்பார்கள். கடவுள் மெய்யாக இருக்கிறாரா? என்றால் ஆம் என்பார்கள். இந்த முரண்பாடுகளுக்கு இடையில் நம்பிக்கை எனும் பாலத்தை கட்டிவைத்திருக்கும் வரையில், அவர்களால் உண்மைக்கு அருகில் வரமுடியாது.

கடவுள் மறுப்பு என்பது, கடவுள் இருப்பின் விளைவால் ஏற்பட்ட சீர்கேடுகளைக் கண்டு உருவானதல்ல. என்று கடவுள் எனும் சிந்தனை தோன்றியதோ அந்தக் கணமே அதன் மறுப்பும் தோன்றிவிட்டது. கடவுள் இருப்பு எப்படி மனிதச் சிந்தையில் தோன்றியதோ ஆதுபோலவே கடவுள் மறுப்பும் மனிதச் சிந்தையில் தோன்றியது தான். அதை மதத்தின் பெயரால் செய்யப்படும் மூடநம்பிக்கைகளைப் பார்த்து தான் தோன்றியது என்பது, கடவுள் இருப்பும் கடவுள் மறுப்பும் சமநிலையில் இருப்பதல்ல நிலை தாழ்ந்தது என்பதை உணர்த்தும் ஒருவித குறியீடு.

கடவுள் மறுப்பு அறிவியலை மட்டும் சார்ந்ததல்ல, சமூகவியல், பயன்பாடு உள்ளிட்டவைகளையும் சார்ந்தியங்குவது. ஆனால் கடவுள் மறுப்பு என்றதும் மக்களின் மூடநம்பிக்கைகளைப் பார்த்து தோன்றியது என்பதும், அறிவியல் விளக்கமளிக்காததையும்(இது குலாமின் விளக்கங்களை ஒட்டி பயன்படுத்தப்பட்டிருக்கும் சொல்) நாம் ஏற்கவில்லையா என்பதும் தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்த கதைதான். கடவுள் மறுப்பு கடவுள் இருப்பு என்பதை அறிவியலை விளங்கி வாழ்பவர்கள், அறிவியலை விலக்கி வாழ்பவர்கள் என்று பிரிவினை செய்ய இயலாது. அனைவருமே அறிவியலை ஏற்று அறிவியலுக்கு உட்பட்டே வாழ்கிறார்கள். அதேநேரம் சொந்த சாதக பாதகங்களை, கலாச்சார மரபுகளை முன்வைத்து சில நம்பிக்கைகளயும் கொண்டிருக்கிறார்கள். இது இருப்பு, மறுப்பு என்ற இரு நிலையிலுள்ளவர்களுக்கும் பொருந்தும். இதைக் கொண்டு அறிவியல் விளக்கமளிக்காதையும் கூட ஏற்றுக் கொள்பவர்கள் கடவுளை மறுக்கக் கூடாது என கூற முடியுமா?

அறிவியல் விளக்கமளிக்காததை ஏற்பதும், அறிவியலை மறுப்பதும் வேறுவேறான நிலைகள். கடவுளை ஏற்பது என்பது அறிவியலை மறுக்கும் நிலை. விளக்கமளிக்காததையும் ஏற்பது என்பது அறிவியலை மறுக்கும் நிலையல்ல. தெளிவாகச் சொன்னால் அறிவியல் விளக்கமளிக்காத நிலை என்று உலகில் எதுவுமில்லை. குலாம் எடுத்துக் காட்டியிருப்பவைகளையே நானும் எடுத்துக் கொள்கிறேன். கெடு தேதிக்கு முன்பே கெட்டுப் போகும் உணவு, கெடு தேதி முடிந்த பிறகும் நல்ல நிலையில் இயங்கும் மின்கலம்; இவைகள் அறிவியல் முரண்பாடா? ஒரு பொருளின் கெடுதேதி என்பது அந்தப் பொருளில் இருக்கும் சேர்மங்கள், அவற்றின் வேதி வினைபாடுகள், வினைபுரியும் வெளித்தனிமங்கள், நொதிகளால் ஏற்படும் பயன்மாற்றம் முதலியவைகளைக் கொண்டு எந்த தன்மையில் அது மக்களுக்கு பயன்படுகிறதோ அந்த தன்மையை எவ்வளவு காலத்தில் அது இழக்கும் என்பதை அறிவியல் ரீதியாக கணிப்பது. இந்த கணிப்புகள் வெகுசில போதுகளில் தவறிப்போகலாம். அப்படி தவறுவது அறிவியல் தவறல்ல. முன்னதாகவே கெட்டுப் போன உணவையோ, பின்னாலும் இயங்கும் மின்கலத்தையோ ஆய்வுக்கு உட்படுத்தினால் ஏன் அவை கணிப்பை மீறின என்பது புலப்படும். அவை கணிப்பை மீறிய காரணமும் அறிவியலுக்கு உட்பட்டு இருக்குமேயன்றி அறிவியல் முரண்பாடாக இருக்காது. இதை அறிவியல் முரண்பாடாக சுட்டுவதே சூழலை தனக்கு சாதகமாக வளைக்கும் நரித்தனம் தான்.

சுண்டி விடப்படும் நாணயத்தில் எந்தப்பக்கம் மேலாக விழும் என்பது வெற்று யூகமா? அல்ல அதுவும் அறிவியல் தான். எந்தப் பக்கம் விழுவதற்கும் 50:50 வாய்ப்பு இருக்கிறது என்பது மட்டுமல்ல, ஒவ்வொரு பக்கத்திலும் தனித்தனியாக செய்யப்பட்டிருக்கும் அச்சுக்கோர்ப்புகளின் கனத்தைக் கணக்கிட்டு எந்தப் பக்கம் விழுவதற்கு அதிகம் வாய்ப்பிருக்கிறது என்பதைக் கூட அறிவியலால் கூறமுடியும். இதை அறிவியலல்லாத வெற்று யூகம் என்று கூற முடியுமா? அறிவியல்லாமல் செய்யப்படும் வெற்று யூகங்கள் கூட தன்னிச்சையாக மனிதனுக்குள்ளிருந்து கிளைத்து விடுவதில்லை. வாழ்ந்த சூழல், கற்ற கல்வி, பெற்ற அனுபவங்கள் ஆகியவற்றின் துணைகொண்டே யூகங்கள் எழும். ஆக வெற்று யூகங்களைக்கூட அறிவியலுக்குள் வகைப்படுத்த முடியும்.. குறிப்பிட்ட மனிதன் ஒன்றை அறிந்திருக்கிறனா இல்லையா என்பதையும் தாண்டி வாழ்வில் அறிவியலுக்கு அப்பாற்பட்டு எதுவுமில்லை. இதை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் பார்க்கலாம்.

நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஒரு மனிதன் அதைவிட்டு எழும்போது தன் கால்களை செங்கோணத்திலோ, விரிகோணத்திலோ நிலத்தில் ஊன்றி எழுவதில்லை. உள்வசமாய் சற்று மடக்கி குறுங்கோணத்தில் வைத்தே எழுகிறான். இதன் அறிவியல் காரணத்தை எல்லா மனிதர்களும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அமர்ந்திருக்கும் போது மனிதனின் மொத்த எடையும் பிட்டப் பகுதியிலுருந்து நாற்காலியின் நான்கு கால்களின் மையப்பகுதில் புவியீர்ப்பு நிலை கொண்டிருக்கும். எழும்போது எடையின் புவியீர்ப்பு மையத்தை நாற்காலியிலிருந்து பாதங்களுக்கு மாற்றும் போது புவியீர்ப்பு மையத்திற்கு வெளியிலிருந்தால் எழுவதில் சிரமம் ஏற்படும். அதனால் பாதங்களை அந்த மையத்திற்குள் கொண்டுவந்து எடையை மாற்றி பின் நகர்கிறார்கள். இந்த அறிவியல் விளக்கம் ஒருவருக்கு தெரிந்திருந்தாலும் தெரியாவிட்டாலும் அந்த அறிவியல் விதிக்கு உட்பட்டே அவரின் செயல்கள் இருக்கும். இது போல் மனித வாழ்வின் ஒவ்வொரு செயலும் அறிவியலுக்கு உட்பட்டே அமைகிறது. இவ்வாறு செயல்படும் அறிவியலை யாரும் மறுப்பதில்லை, மறுக்கவும் முடியாது, ஒருவர் கடவுளை ஏற்றாலும் மறுத்தாலும் இது தான் நிலை. இதில் எங்கிருந்து அறிவியல் மெய்பிக்காத நிலை வருகிறது?

மனிதன் மரபு ரீதியாக, கலாச்சார ரீதியாக சில நம்பிக்கைகளைக் கொண்டிருக்கிறான். இதை காரணமாக காட்டியும், மக்களின் அறிதல் குறைகளை காரணமாக காட்டியும் கடவுளின் இருப்பை மெய்பிக்க முயல்வது ஒருவழியில் கடவுள் மறுப்பை ஏற்றுக் கொள்வது தான். ஏனென்றால் ஒரு நிலைப்பாடு சரியா? தவறா? ஏற்கலாமா? கூடாதா? என்பதைத் தீர்மானிக்க அறிவியலைத் தவிர வேறொரு கருவி மக்களிடம் இல்லை. எந்த ஒன்றில் ஐயம் ஏற்பட்டாலும் அதை அறிவியலைக் கொண்டு தீர்ப்பது தான் சரியானதாக இருக்கும். அதேநேரம் அறிவியல் என்பது மனித அனுபவங்களை தொகுத்து சோதித்தறிந்து அந்த சோதனையின் முடிவுகளைக் கொண்டு பொதுவிதிகளை அடைவது. மீண்டும் மீண்டும் அவை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். இயங்கியலுக்கு இயைபவை ஏற்றுக் கொள்ளப்படும், மாறானவை தள்ளப்படும். அறிவியல் மனித அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டது தான் என்றாலும் அது விரிவடைந்து கொண்டே இருக்கிறது, புதிய உயரங்களை எட்டிக் கொண்டே இருக்கிறது. அது எட்டாத உயரங்கள் இருக்கிறதா? ஆம். அடுத்து அடுத்து என உயரங்களைத் தேடிக் கொண்டே இருப்பதால், நுண்ணியமாக நுழைந்து கொண்டே இருப்பதால் எப்போதும் அது தேடலிலேயே தொடரும், அதுதான் அறிவியலின் இயல்பு. ஆனால் குறிப்பிட்ட காலத்தில் அறிவியல் இந்த இடத்திற்கு மேல் எட்டவில்லை எனவே, அதற்கு மேல் இருப்பதாக எங்களால் கூறப்படும் கடவுளை ஏற்றுக் கொள் என்பது இயலாமை. இயலாமை மட்டுமல்ல அயோக்கியத்தனமும் கூட. எப்படியென்றால், எதையும் மக்களுக்கு விளக்கிக்கூறி புரியவைப்பதுதான் மக்களை உயர்த்துவதற்கான வழியேயன்றி, மக்களிடம் இருக்கும் அறியாமையை பயன்படுத்தி ஒருவரிடம் இருக்கும் ஆதாரமற்ற நம்பிக்கையை இன்னொருவரிடம் பதியவைப்பதல்ல.

சரி, ஒருவன் அறிவியலின் அடிப்படையில் சிந்தித்து எடுக்கும் முடிவுகள் எப்போதும் சரியாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறதா? இல்லை. எப்போதும் சரியாக இருப்பது சாத்தியமும் அல்ல. சரி, தவறு என்பதும் உண்மை என்பதும் எப்போதும் எல்லா இடத்திலும் பொருந்தக் கூடியதும் அல்ல. சூரியன் கிழக்கில் உதிக்கும் என்பது பூமியில் தான் உண்மை வேறொரு சூரியக் குடும்பத்திலுள்ள கோளில் சூரியன் கிழக்கில் உதிக்கும் என்று கூற முடியுமா? வேண்டுமானால் எந்த திசையில் உதிக்கிறதோ அந்த திசைக்கு கிழக்கு என பெயர் வைத்துக் கொள்ளலாம். பூமியிலேயே கூட பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்ளும் திசையை மாற்றிக் கொண்டால் (அப்படி மாற்றிக் கொள்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது) அப்போது சூரியன் கிழக்கில் உதிக்கும் என்பது உண்மையாக இருக்காது. நிரந்தரமான உண்மை என்று எதுவுமில்லை. மனிதனின் சூழல், ஆற்றல், வாய்ப்புகள், தேவைகளைப் பொருத்து உண்மைகளும், சரியா தவறா என்பதும் மாறுபடும். இதை முகம்மதியர்களுக்கு குறிப்பாக குலாமுக்கு எளிமையாக புரியவைக்க ஒரு எடுத்துக்காட்டை கூறலாம். பன்றியை உண்ணக்கூடாது என்பது முகம்மதியர்களுக்கான விதி. இந்த விதி எப்போதும் எல்லா இடத்திலும் பொருந்துமா? முக்காலமும் அறிந்த எல்லாவற்றையும் செய்யும் திறனுள்ளதாக இவர்களால் கூறப்படும் அல்லாவுக்கே எல்லா நேரத்திலும் இது ஒன்றே சரியானது என்று கூற முடியவில்லை எனும்போது, மனிதர்களின் சிந்தனை எப்போதும் சரியாக இருக்காது என்பதை தன்னுடைய நம்பிக்கைக்கு சாதகமாக பயன்படுத்த முனைகிறார்கள் என்றால் அவர்களுக்கு என்ன பெயரிடுவது? நடப்பு உலகில் அரசை எதிர்த்து போராடுவதும், போராடத் தூண்டுவதும் கம்யூனிஸ்டுகளின் கடமை, இதையே ஆளும் வர்க்க கோணத்திலிருந்து பார்த்தால் அது அரச துரோகம். இங்கு எது சரியானது என்று பார்த்து அதை ஆதரிக்க வேண்டுமேயல்லாது, சிந்தனை மனிதனுக்கு மனிதன் வேறுபடக் கூடியது எனவே கடவுளை நம்பு என்றால் அது எப்படி சரியாக இருக்க முடியும்?

பொதுவாக மனிதர்கள் எந்த ஒரு பிரச்சனையிலும் தனக்கு சாதகமானதா? பாதகமானதா? என்பதைக் கொண்டே முடிவெடுக்கிறார்கள். ஆனால் அது சரியா? தவறா? எனும் அடிப்படையில் எடுக்கும் முடிவே அவர்களை சரியான நிலைப்பாட்டில் இருத்தி வைக்கும். சரியான நிலைப்பாட்டில் தாம் இருக்க வேண்டும் எனும் நினைப்பு இருக்கும் வரை ஒருவனால் சொந்த சாதக பாதகங்கள் குறித்து கவலைப்பட முடியாது. கடவுள் இருப்பு மறுப்பு எனும் பிரச்சனையில் நம்பிக்கையாளர்களை விட மறுப்பாளர்களே சரியா தவறா எனும் கேள்விக்கு அருகில் நிற்கிறார்கள். ஏனென்றால் அவர்களிடம் தான் விமர்சனம் இருக்கிறது, அவர்களிடம் தான் மீளாய்வு இருக்கிறது. அவ்வாறன்றி குலாம் உள்ளிட்டவர்கள் தாங்களும் சாதகமான நிலைப்பாட்டில் அல்ல சரியான நிலைபாட்டில் இருக்கவே விரும்புகிறோம் என்று கூறுவார்களாயின் தங்களை மீளாய்வு செய்து கொள்ளட்டும்.

கடவுளை மனிதன் விமர்சிக்க முடியுமா? மனிதன் என்பவன் யார்? அவனது தகுதிகள், எல்லைகள் என்னென்ன? என்பதை நாம் தெளிவாக அறிந்திருக்கிறோம். இது போன்ற தெளிவு கடவுளுக்கு இருக்கிறதா? மனிதன் எவ்வாறு ஐயங்களுக்கு ஆட்படாதவாறு தூலமாக இலங்குகிறானோ அது போன்று கடவுளும் தூலமாக இலங்கினால் தான் இரண்டையும் ஒப்பிட முடியும். அவ்வாறன்றி மனிதன் தூலமான நிலையிலும் கடவுள் மாயமான நிலையிலும் இருக்கும் போது இரண்டையும் ஒப்பிடுவது எப்படி சரியாக இருக்க முடியும்? மனிதனின் தகுதி எவ்வளவு உயர்ந்தாலும் கடவுளின் தகுதிக்கு அருகில் வருவதாக நம்பிக்கையாளர்கள் ஏற்றுக் கொள்வார்களா? கடவுள் எனும் கருத்து மனிதனுக்கு தோன்றிய காலத்தில் கடவுளுக்கு என்னென்ன தகுதிகளை மனிதன் ஏற்படுத்தியிருந்தானோ அதைவிட அதிக தகுதிகளோடு இன்று மனிதன் இருக்கிறான். வேறு வடிவத்தில் கூறினால் மனிதனின் அறிவும் தகுதியும் உயர உயர கடவுளின் அறிவும் தகுதியும் உயர்ந்து கொண்டிருக்கிறது.

சிறு குழந்தைகள் ஒருவித கணித விளையாட்டொன்றை விளையாடுவார்கள். யார் அதிக மதிப்புள்ள எண்ணை கூறுவது என்பது போட்டியாக இருக்கும். மாறிமாறி அதிக மதிப்பை கூறிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு குழந்தை இன்னொரு குழந்தையைப் பார்த்து நீ எவ்வளவு கூறினாலும் அதைவிட ஒன்று அதிகம் என்று கூறினால் என்ன நிலை வருமோ அந்த நிலை தான் கடவுளின் தகுதி. அதாவது மனிதனின் தகுதி எவ்வளவு உயர்ந்தாலும் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் இருப்பதாக கருதப்படும் இடைவெளி எப்போதும் குறையாது தக்கவைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் போது கடவுளை விமர்சிக்கும் தகுதி மனிதனுக்கு இல்லை என்று கூறினால் அதன் பொருள் என்ன? கடவுளின் மீது என்ன கற்பனைகளை நாங்கள் ஏற்றிவைத்தாலும், ஏற்றுக் கொள் அல்லது விலகிச் செல் மாறாக அதை விமர்சிக்கக் கூடாது என்பது தான். இதைவிட கடவுளை வேறு யாரும் கேவலப்படுத்த முடியாது. மனிதனுக்கு மனிதனே அடிமையாக இருத்தல் கூடாது எனும் போது ஆண்டவனுக்கு தான் அடிமை என அறிவித்துக் கொள்பவர்களிடமிருந்து வேறெதை எதிர்பார்க்க முடியும்?

ஒன்றின் மீது விமர்சனம் வைக்கப்படுகிறது என்றால், அது சரியாக செய்யப்பட்டிருக்கிறதா? தவறாகவா? என்று பார்ப்பது தான் சரியான அணுகுமுறை. சரியாக செய்யப்பட்டிருந்தால் அதை எதிர்கொண்டு விளக்கம் கூறுங்கள். தவறாக செய்யப்பட்டிருந்தால் எந்த விதத்தில் அது தவறான விமர்சனம் என்று தெளிவியுங்கள். அதை விடுத்து, கடவுளை விமர்சிக்க மனிதனுக்கென்ன தகுதி இருக்கிறது என்றால் அது நாலாம்தர அரசியல் வியாதிகளின் அணுகுமுறை.

கோடிக்கணக்கான ஆண்டுகளாய் தொடர்ந்து பயணப்பட்டுக் கொண்டிருக்கும் இப்பேரண்டத்தில் ஒரு துளியைப் போன்ற சூரியக் குடும்பத்தில் அதனில் தூசைப் போன்ற பூமியில் பல லட்சம் உயிரினங்கள் தோன்றி வாழ்ந்து பூண்டற்றுப் போன பின்னில் துணுக்கைப் போன்ற மனிதர்களுடைய மனதில் மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கும் கடவுள் இப்பேரண்டத்தை படைத்து பரிபாலித்துக் கொண்டு அதையும் தாண்டி வியாபித்திருக்கிறார் என்று நம்புவது எவ்வளவு பெரிய அறியாமை. அதிலும் அதை விமர்சிக்கவும் தகுதியில்லை என்பது அறியாமையினும் அடங்காமை. இவ்வாறு அடங்காத அறியாமையை கொண்டிருக்கும் நம்பிக்கையாளர்கள் அந்த அடங்காத அறியாமையையே முற்று முழுமை என்பது மனமுரண்டா அல்லது அதனிலும் மேலா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக