செவ்வாய், 22 நவம்பர், 2011

கடவுள் என்றொரு மாயை 2

மதங்களுக்கு நம் சமூகம் தரும் அதீத மரியாதையைத் தெளிவாகக் காண்பிக்க கீழ்வரும் நிகழ்வைத் தருகிறேன்.

2006 பிப்ரவரியில் நடந்த ஒரு உலகளாவிய நிகழ்வு வேடிக்கையும் வேதனையும் கலந்தது. 2005 செப்டம்பரில் டென்மார்க் நாட்டுச் செய்தித்தாள் – Jyllands-Posten – முகமது நபியின் படங்கள் பன்னிரண்டை வெளியிட்டன. அதிலிருந்து அதற்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு டென்மார்க்கில் அரசியல் அடைக்கலம் பெற்ற இரு இமாம்களும், அங்கு வாழும் சில இஸ்லாமியர்களின் குழுவும் இணைந்து இஸ்லாமிய நாடுகள் முழுவதிலும் டென்மார்க்கிற்கும் அந்த செய்தித்தாளுக்கும் எதிராக பெரும் புரளியைக் கிளப்பி விட்டனர்.

2005-ன் கடைசியில் இந்தத் தீய எண்ணங்கொண்ட குழு தாங்களே தயாரித்த சுற்றறிக்கை ஒன்றோடு எகிப்துக்கு சென்றனர். அங்கிருந்து அவர்களின் அந்த அறிக்கை உலகின் பல இஸ்லாமிய நாடுகளுக்கும்,குறிப்பாக இந்தோனேஷியாவிற்கும் பரப்பப்பட்டன. அந்த அறிக்கையில் டென்மார்க்கில் இஸ்லாமியர்கள் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், Jyllands-Posten டென்மார்க் அரசு நடத்தும் செய்தித்தாளென்ற பொய்யான செய்தியையும் பரப்பின. அதோடு அச்செய்தித்தாளில் வந்ததாக 12 படங்களும் இருந்தன. இதில் முக்கியமான விஷயம் என்னவெனில், அதில் இருந்த 12 படங்களில் ஒன்பது மட்டுமே அந்தச் செய்தித்தாளில் ஏற்கெனவே உண்மையில் வந்த படங்கள். புதிதாகச் சேர்க்கப்பட்ட மூன்று படங்கள் எங்கிருந்து வந்தன என்பது ஒரு பெரிய கேள்வியாக முதலில் இருந்தது. இந்த மூன்று படங்களுமே எல்லோரும் நினைத்தது போல் முகமதின் படங்கள் என்று உலகம் முழுமைக்கும் பரப்பப்பட்ட அந்த படங்கள் நிச்சயமாக அவரை இழிவுபடுத்தும் படங்களாக இருந்தன. அந்த மூன்று படங்களிலும் ஒரு படம் மற்ற படங்கள் போல் கார்ட்டூனாக இல்லாமல் ஒரு புகைப்படமாக இருந்தது. அது, தாடி வைத்த ஒரு மனிதன் பன்றி முகமூடியோடு இருப்பது போன்றது. பின்னால் அது Associated Press-ன் ப்ரான்ஸ் தேசத்து ஆள் ஒருவன் (pig-squealing contest) பன்றி போல் கத்தும் போட்டியில் ஈடுபட்டிருந்தபோது எடுத்த புகைப்படம் என்பது தெரியவந்தது. அந்தப் படம், இஸ்லாமுக்கும், நபிக்கும், நபியைப் பற்றி வந்த மற்ற புகைப்படங்களுக்கும், டென்மார்க்குக்கும், டென்மார்க்கின் Jyllands-Posten-க்கும் எந்த தொடர்பும் இல்லாத ஒரு புகைப்படம். ஆனால் கெய்ரோவில் ஆரம்பித்து இஸ்லாமிய நாடுகள் முழுமைக்கும் இந்தப் பொய்த்தகவல் பரப்பப்பட்டது; பரப்பியவர்கள் எதிர்பார்த்தது போலவே எல்லாமே நடந்தேறியது.

Jyllands-Posten-ல் 12 கேலிச்சித்திரங்கள் பதிப்பிக்கபட்ட பின் 5 மாதங்கள் கழித்தே இந்த பிரச்சனை விஸ்வரூபமெடுத்தது.

முக்கியமாக பாகிஸ்தானிலும், இந்தோனேஷியாவிலும் டென்மார்க் நாட்டின் கொடிகள் எரிக்கப்பட்டன. (எப்படி அவர்களுக்கு அந்நாட்டு கொடிகள் எல்லாம் கிடைத்தனவோ?) டென்மார்க் அரசு மன்னிப்பு கேட்கவேண்டுமென்ற கோரிக்கைகள் வலுத்தன. ( எதற்காக அந்த அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்? கேலிச்சித்திரங்களை அரசா வரைந்தது? இல்லை அவர்களா அதைப் பதிப்பித்தார்கள்? இஸ்லாமிய நாடுகளில் இல்லாத, அவர்களில் பலரால் புரிந்து கொள்ள முடியாத சுதந்திரமான அச்சு ஊடகம் உள்ள நாடு அது.) டென்மார்க் நாளேட்டிற்கு ஆதரவு தரும் வகையில், இங்கிலாந்து தவிர்த்து, நார்வே, ஜெர்மன், ப்ரான்ஸ், அமெரிக்க நாட்டு அச்சு ஊடகங்கள் அந்த கேலிச்சித்திரங்களைத் தங்கள் ஊடகத்திலும் அச்சேற்றின. இது எரிகிற எண்ணெயில் எண்ணெய் ஊற்றியது போலாயிற்று. டென்மார்க் தூதரகங்கள் உலகெங்கும் தாக்கப்பட்டன; அவர்களது இறக்குமதிப் பொருட்கள் புறந்தள்ளப்பட்டன.டென்மார்க் மக்கள் மட்டுமல்லாமல் பல மேற்கத்திய நாட்டு மக்கள் அச்சுறுத்தப்பட்டனர். பாகிஸ்தானில் உள்ள கிறித்துவ ஆலயங்கள் தாக்கப்பட்டன - அவர்களுக்கும் இச்சம்பவத்திற்கும் ஏதும் தொடர்பில்லாவிட்டாலும். லிபியாவில் ஒன்பது பேர் கொல்லப்பட்டார்கள்.

பாகிஸ்தான் இமாம் ஒருவரால் கேலிப்படம் வரைந்தவரின் தலைக்குப் பத்து லட்சம் அமெரிக்கன் டாலர்கள் பரிசு என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு அந்தக் கேலிப்படங்கள் பன்னிரண்டு கார்ட்டூனிஸ்டுகளால் வரையப்பட்டன என்பதோ, அந்தப் பன்னிரண்டு கேலிப்படங்களில் முக்கியமான மூன்று படங்கள் டென்மார்க்கில் வரையப்படவோ, அச்சிடப்படவோ இல்லை என்பதோ தெரியாது.(அதோடு அவர் அறிவித்த பத்து லட்சம் அமெரிக்க டாலர் அவரிடம் ஏது?)

நைஜீரியாவில் பல கிறித்துவக் கோயில்கள் தாக்கப்பட்டன; கிறித்துவ கருப்பின மக்கள் தெருக்களில் தாக்கப்பட்டனர். பிரிட்டனில் நடந்த எதிர்ப்பு ஊர்வலங்களில் மக்கள் தாங்கிவந்த பதாகைகளில் சில: "இஸ்லாமைப் பழித்தவர்களை வெட்டு"; "இஸ்லாமைக் கேலி செய்தவர்களை வெட்டு"; "ஐரோப்பா இதற்கு தங்கள் அழிவின் மூலம் பதில் சொல்லியாக வேண்டும்".

இந்த நேரத்தில் நம் அரசியல்வாதிகள் பலர் எப்படி இஸ்லாம் ஒரு அமைதியையும், இரக்கத்தையும் கொண்டாடும் மதம் என்பதை நமக்கெல்லாம் நினைவூட்டிக் கொண்டிருந்தார்கள்.

பாகிஸ்தானில் நடந்த ஒரு ஊர்வலத்தில் ஒரு பெண்மணி தாங்கியிருந்த பதாகையில் எழுதப்பட்ட வாசகம்: "ஹிட்லரை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்"!

யாரையும் கேலி செய்யவோ,துன்புறுத்தவோ யாருக்கும் அதிகாரமில்லைதான். ஆனால்,மதங்களுக்குக் கொடுக்கப்படும் அதீத சலுகைகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அரசியல்வாதிகள் அவர்களது கேலிச்சித்திரங்களை நித்தம் நித்தம் ஊடகங்களில் பார்க்கிறார்கள். அதை யாரும் எதிர்த்து பெருங்குரலேதும் எழுப்புவதில்லை. ஆனால் மதத்தொடர்பானவைகளுக்கு மட்டும் ஏனிந்த தனிச்சலுகைகள். மெங்கன் (H.L. Mencken) சொன்னதை இங்கு நினைவுபடுத்துகிறேன்: "ஒருவன் தன் மனைவிதான் அழகு என்றோ, அவன் தன் பிள்ளைகள்தான் புத்திசாலிகள் என்றோ சொல்லும்போது அவனது கூற்றை எந்த அளவுக்கு நாம் மதிப்போமோ அந்த அளவிற்கு மட்டுமே மற்றவர்களின் மதக்கோட்பாடுகளை நாம் மதிக்க வேண்டும்".(pp 46-50)


*

ஆக, இந்தப் பதிவில் என் தனிக்கருத்துக்கள் ஏதுமில்லை; தேவையுமில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக