சனி, 26 நவம்பர், 2011

அலறும் R.S.S. இந்து மதத்தில் குறைந்து வரும் எண்ணிக்கை பிற மதத்தில் வளர்வதால் ஒவ்வொரு இந்து பெண்ணும் மூன்று பிள்ளைகளை பெறவேண்டும் -ஒழிக நிரோத்!!


பிற மதத்தவர்களில் எண்ணிக்கை வளர்ந்து வருகிறதாம். அதனை ஈடுகட்டத்தான் இந்த உபதேசம் என்கிறார்கள்.

மத மாற்றத்தால் இந்து மதத்தில் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதால் ஒவ்வொரு பெண்ணும் மூன்று பிள்ளைகளைப் பெற்றுத் தர வேண்டும். - இந்து மத வெறியர்கள்.

பிள்ளை பெறும் இயந்திரமா? ஆர்.எஸ்.எஸின் தலைவர் குப்பஹள்ளி சீதாராமய்யா சுதர்சன் (கே.எஸ். சுதர்சன்) இந்து மதத்தைச் சேர்ந்த ஒவ்வொரு பெண்ணும் மூன்று பிள்ளைகளைப் பெற்றுத் தர வேண்டும் என்று கூறி இருக்கிறார். இது பெரும் சர்ச்சைப் புயலை வெடித்துக் கிளம்பச் செய்திருக்கிறது.

குழந்தையைப் பெற்றுக் கொள்வதா, கூடாதா என்பது ஒரு பெண்ணைப் பொறுத்த பிரச்சினை. இன்னும் சொல்லப் போனால் குழந்தைப் பேறு என்பது உடல் அளவிலும் மன அளவிலும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது என்பதால் பெண்ணின் துணைவன்கூட முடிவு செய்ய உரிமையில்லாத - கருவைச் சுமக்கும் சம்பந்தப்பட்ட பெண் மட்டுமே முடிவு செய்யக் கூடிய ஒன்றாகும்.

பெண் உரிமைக்குக் கர்ப்பப்பை தடையாக இருக்குமாயின் அதனைத் தூக்கி எறியுங்கள் என்று சொன்னார், சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியார்.

இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மூன்று பிள்ளைகளை ஒரு பெண் பெற்று தர வேண்டும் என்று கூறுவது பெண்ணை பிள்ளைப் பெறும் எந்திரமாகக் கருதும் பிற்போக்கு மனப்பான்மை தான்.

இந்துமதம் என்பதே பெண்ணை ஒரு பண்டமாகக் கருதக் கூடியதே தவிர, பெண்ணை உயிருள்ள ஆணுக்கு நிகரான மனிதராகக் கருதுவது கிடையாதே!
அந்த ஆணி வேரைப் பிடித்து அலசினால்தான் இந்து மத வெறியர்கள் இவ்வாறு கூறுவதற்கான மூலத்தைச் சரியாகக் கணக்கிடவும், கணிக்கவும் முடியும்.


ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மனுதர்ம நூலை புனாவில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் சிவிகையில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றவர்கள்தாம்.
அந்த மனுதர்ம சாஸ்திரம் பெண்களைப்பற்றி என்ன கூறுகிறது?


``பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும், பௌவனத்திரி கணவன் ஆக்ஞையிலும், கணவன் இறந்த பிறகு பிள்ளைகள் ஆக்ஞையிலும் இருக்க வேண்டியதல்லாமல், ஸ்திரிகள் தன் சுவாதீனமாக ஒருபோதும் இருக்கக் கூடாது’’ (மனுதர்மம் அத்தியாயம் 5 சுலோகம் 148) இதன்மூலம் பெண் என்பவர் தன் சொந்த அறிவைப் பயன்படுத்தக் கூடாது; அடுத்தவர்கள் ஆணையின்கீழ் அடங்கிக் கிடக்க வேண்டும் என்று பெறப்படுகிறது.

``பிள்ளை இல்லாமல் அந்தக் குலம் நசிக்கிறதாக இருந்தால், அப்போது ஸ்திரி தன் கணவன், மாமனார் முதலானவர்களின் உத்தரவு பெற்றுக் கொண்டு, தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழு தலைமுறைகளுக்குட்பட்ட பங்காளி இவர்களோடு மேற்சொல்லுகிறபடி புணர்ந்து குலத்திற்குத் தக்கதான ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொள்ளலாம். (மனுதர்மம் அத்தியாயம் -9 சுலோகம் - 59) இதன் மூலம் பெறப்படுவது என்ன? பிள்ளைப் பெறுவதற்காக விபச்சாரம் செய்யலாம் என்பதுதானே?
( படிக்க ‌உடல் முழுவதும் நெய்யைத் தடவிக் கொண்டு மற்ற ஆண்களுடன்....??.!!! )

`படுக்கை, ஆசனம், அகங்காரம், காமம், பொய், துரோகச் சிந்தனை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்’’ (மனுதர்மம் சாஸ்திரம் அத்தியாயம் 9 சுலோகம் 17) இதன் மூலம் அறியப்படுவது என்ன? படுக்கைக்குப் பயன்படுத்தப்பட வேண்டியவர் பெண் என்பது மட்டுமல்லாமல், கீழான குணங்களின் வடிவம்தான் பெண் என்று சித்திரிக்கப்படுகிறார் என்பதைக் கவனிக்க வேண்டும்.

``பெண்களையும், பிராமணரல்லாதாரையும் கொல்லுதல் பாதகமாகாது’’ (மனுதர்ம சாஸ்திரம் அத்தியாயம் 11 சுலோகம் 65) பெண்களைக் கொல்லும் அதிகாரமும் இதன்மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.
பாவ யோனியில் பிறந்தவர்கள் பெண்கள் என்று உபதேசிக்கிறது கீதை
(அத்தியாயம் 9 சுலோகம் 32).

இந்தப் பின்னணியைப் புரிந்து கொண்டால்தான் இந்த இந்துத்துவாவாதிகளின் இரைச்சலில் இருக்கக்கூடிய நஞ்சை அடையாளம் காண முடியும்.

இந்துமதத்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறதாம். பிற மதத்தவர்களில் எண்ணிக்கை வளர்ந்து வருகிறதாம். அதனை ஈடுகட்டத்தான் இந்த உபதேசம் என்கிறார்கள்.


அது சரியா, இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும்.
நம்முடைய கேள்வி எல்லாம் இந்து மதத்தவர்களின் எண்ணிக்கை ஏன் பெருக வேண்டும்? அப்படிப் பெருகுவதால் பார்ப்பனர் அல்லாதாரான பெரும்பான்மை மக்களுக்கோ, பெண்களுக்கோ என்ன பலன்?

அந்த மதமே இல்லாது ஒழிக்க பாடுபடுவதுதானே பெரும்பான்மையினரான `சூத்திரர்’ மக்களின், பெண்களின் கடமையாகவும், முழு வீச்சுப் பணியாகவும் இருக்க வேண்டும்.

பெரும்பான்மையான மக்களைச் சூத்திரர்கள் என்றும் பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்கள் என்றும், பெண்களைப் பாவ யோனியிற் பிறந்தவர்கள் என்றும் கூறுகிற மதத்தில் மக்கள் தொகை பெருகிடக் கூடாது என்பதுதான் பெரும்பான்மை மக்களின் நிலைப்பாடாக இருக்க முடியும்.

எந்த வகையில் பார்த்தாலும் திருவாளர் சுதர்சனின் காரணாக் காரியங்கள் அடிபட்டு வீழ்கின்றன!

மற்றொரு முக்கிய காரணம் வலுவாக இருக்கிறது, மக்கள் தொகை இப்பொழுதுள்ள நிலையில் இந்தப் போக்கே தொடர்ந்தால் கூட 2030-ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை மிஞ்சி விடும் என்று அய்.நா.வின் அறிக்கை கூறுகிறது. ஒவ்வொரு விநாடியிலும் 29 பிறப்புகள் இந்தியாவில் நடக்கின்றன. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற பொருளாதாரக் குரல் உலகெங்கும் ஒலிக்கிறது.

உலக அரங்கில் பொருளாதாரம் வளர்ச்சி என்கிற பார்வையில் இந்தியா 127-ஆம் இடத்தில் வவ்வால் போல தொங்கிக் கொண்டு கிடக்கிறது.

இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் `கிடந்தது கிடக்கட்டும்; கிழவனை தூக்கி மனையில் வை!’ என்கிற போக்கில் ஒருவர் சொல்லுவாரேயானால், அந்த மனிதர் எந்தப் பெரிய பதவியில் இருந்தாலும் அவர் சமுதாயத்தைப் பீடித்த நோய் என்றே கருததக்கவர் ஆவார்.<<.
------------------
ஆர்.எஸ்.எஸ். தலைவரின் கருத்து குறித்து இன்றைய இளம் பெண்கள் என்ன சொல்கிறார்கள்?தமிழ் இலக்கியம் பயிலும் சென்னைப் பல்கலைக் கழக மாணவிகளின் கருத்து....
அடுத்தவர் கருத்து அவசியமில்லாதது--த. சிவவிவேதா, எம்ஃபில்.,
எத்தனை குழந்தை பெற்றுக் கொள்வது என்பது பற்றிய கருத்து கணவன் - மனைவியைச் சார்ந்தது. ஒரு குழந்தையை வளர்ப்பதே இந்த காலத்தில் சிரமமான ஒன்று.

இதில் மூன்று, மூன்று குழந்தைகள் என்பது வளர்ப்பு முறையில் சிக்கலை ஏற்படுத்தும். இது கருத்துத் திணிப்பாக இருப்பாகிறது. அவர் அவர்களின் குடும்ப சூழல், பொருளாதாரம் சார்ந்து இந்த எண்ணிக்கை அமையுமே தவிர, இதில் அடுத்தவர் கருத்து அவசியமில்லாதது.

மதம் என்ற பெயரால் பெண்ணை அடிமையாக்கும் முயற்சி இது.
ஆகஸ்ட் 15 உங்களுக்கு சிறை மீண்ட நாள் எங்களுக்கு சிறை மாறிய நாள்
என்ற கவிஞர் பச்சியப்பன் வரிகள்தான் இங்கு நினைவுக்கு வருகிறது. <<

எதிர்க்க வேண்டிய ஒன்று-பெ. சுபா, எம்.ஏபெண்களை மதம் சார்ந்து பிரித்து மூன்று குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்ற திணிப்பை ஒட்டு மொத்த பெண்களும் எதிர்க்க வேண்டிய ஒன்றாகும்.

நடுத்தர மக்களின் பொருளாதார நிலையில் ஏற்க வேண்டிய கருத்தாக தென்படவில்லை. மக்கள் தொகை கட்டுப்பாடு என அரசு வலியுறுத்திக் கொண்டிருக்கும்பொழுது அரசுக்கு எதிரான தகவலை தந்திருப்பது கண்டிக்க வேண்டிய ஒன்றாகும்.<<

பெண்கள் அடிமையாக முடியாது- கு. உமா தேவி எம்.ஏ.,
மத மாற்றத்தால் இந்து மதத்தில் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவதால் மதத்தின் மூலம் பிழைப்பு நடத்தும் ஆர்.எஸ்.எஸுக்கு இந்து மதத்தில் மக்கள் தொகை பெருக்கம் தேவைப்படுகிறது. எனவேதான் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு எதிரான முறையில் இத்தகவலை முன்னிறுத்துகிறார்கள்.

பெண்களுக்கான விடுதலையை பெண்களே பேசும் காலத்தில் மீண்டும் பெண்ணடிமையை ஏற்படுத்தும் விதமாகவே இந்தக் கருத்து அமைகிறது.<<

சுதர்சனின் மதவெறிக்கு பெண்கள் யாரும் அடிமையாக முடியாது. வறுமையும் தலையில்...-ஞா. விஜயகுமாரி எம்.ஏ.,
இன்றைய காலகட்டத்தில் ஒரு குழந்தையைப் பெற்று வளர்த்தெடுத்து மருத்துவமனைக்கும், படிப்புக்கும், பல தரப்பட்ட அடிப்படை நிகழ்வுகளுக்கும் ஆகும் செலவுகள் பெற்றோர்களை திக்குமுக்காட வைத்துவிடுகிறது. இதில் மூன்று குழந்தைகளைப் பெண்கள் பெற்றெடுக்க வேண்டும் என்பது சமுதாயச் சீர்கேட்டுக்கு மட்டுமல்லாமல் பெண்களின் உயிருக்கும் ஆபத்தான நிலையை உண்டாக்கக் கூடியதாகும். குடும்பம் தன் பொறுப்புகளோடு வறுமையையும் தலையில் சுமந்து நிற்கும். <<

இவர் யார்?- ச. சக்தி, எம்.பில்.
மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று கட்டளைப் போட இவர் யார்? அவருடைய வீட்டிற்கு வேண்டுமானால் கட்டளைப் போடட்டும். இது பெண்களுக்கு எதிரான கருத்தாகவே கருதுகிறேன்.

வருணாசிரமத்திலிருந்து தொடர்ந்த பெண்ணடிமையை இன்று ஆர்.எஸ்.எஸின் தலைவர் சுதர்சன் புதுப்பிக்கிறார். இவற்றை ஒட்டு மொத்தப் பெண்களும் எதிர்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். <<

மத வெறித்தனம்- மு. சத்யா, எம்.ஏ
ஏழை - எளிய கிராமத்து மக்களின் குழந்தை வளர்ப்பு என்பது அவர்களுடைய பொருளாதார நிலைக்கு சிக்கலான ஒன்றாகும். மதம் என்ற போர்வைக்குள் புகுந்துகொண்டு பெண்களை மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற மத வெறித்தனம் இன்னும் மக்களை வறுமைக் கோட்டிற்குக் கீழேதான் அழைத்துச் செல்லும். --- சந்திப்பு : காஞ்சி ராஜ் <<

குழந்தையைப் பெற்றுக் கொள்வதும், வேண்டாம் என தீர்மானிப்பதும் ஒரு பெண்ணின் உரிமை - -முனைவர் பத்மாவதி விவேகானந்தன்கடந்த கால வரலாற்றில் பெண் விடுதலை, பெண் முன்னேற்றம் குறித்து பலர் பாடுபட்டிருக்கிறார்கள். அவர்களில் பெண்களின் பல்வேறு நடைமுறைகளையும் விஞ்ஞானப் பூர்வமாக ஆராய்ந்து, அவற்றின் முடிவை பெண்களிடம் பட்டிதொட்டி எங்கும் பரப்பிய பெருமைக்குரியவர் தந்தை பெரியார்.

பெரியார் பெண்களுக்குச் சொன்ன அறிவுரைகளில் மிகவும் முக்கியமானது ‘பெண்- குழந்தைப் பெறும் இயந்திரமல்ல’ என்பது. பெண் இரத்தமும், சதையுமுள்ள மனித உயிர். அவளுக்கும் சிந்திக்கும் சக்தியும், சுயமரியாதையும் உண்டு. ஆண்களைப் போலவே கல்வி கற்கும் உரிமையும், சுயமாக சம்பாதிக்கும் உரிமையும் உண்டு.

அன்பும், அறிவும் ஆற்றலும் மிக்க பெண்ணை வெறும் போகப் பொருளாக மட்டும் பயன்படுத்தி அவளை குழந்தை பெறும் இயந்திரமாக்கிவிட்ட சமூகத்தை கேள்விக்குள்ளாக்கி பெண் உரிமைக்குக் குரல் கொடுத்த பெரும் மேதை தந்தை பெரியார்.

இன்று தந்தை பெரியார் போன்றவர்களின் கனவு ஓரளவிற்கேனும் நனவாகி வரும் சூழலில் பெண்ணை மீண்டும் பின்னோக்கி இழுக்கும் முயற்சிகள் பெண்களை முன் வைத்தே நடைபெறுகின்றன என்பது ஆரோக்கியமான சமூக வளர்ச்சிக்கு உதவாது.

பெண்ணடிமைச் சூழலுக்குச் சாதகமான பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வரும் சூழலில் பெண்கள் மூன்று குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ளலாம் என்று ஒருவர் கருத்துக் கூறியிருக்கிறார்.

இந்திய தேசத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான தடையாக இருப்பது மக்கள் தொகைப் பெருக்கமே என்பதை பல்வேறு பொருளாதார வல்லுநர்களும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

அரசாங்கமே, `நாம் இருவர், நமக்கொருவர்’ என்ற வாசகத்தைப் பட்டிதொட்டி எங்கும் பரப்பி வருகிறது. உலக மயமாக்கல், தனியார் மயமாக்கல் போன்ற திட்டங்களால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்வி தனியார் மயமாக்கப்பட்டுள்ள சூழலில் ஒரு குழந்தைக்கான கல்வி செலவிற்கே பெற்றோர்கள் படாத பாடு படவேண்டியிருக்கிறது.

மக்களின் தேவையை நிறைவு செய்யும் விதத்தில் எந்த அரசாலும் செயல்பட முடியாமல் இருப்பதற்கு மக்கள் தொகைப் பெருக்கம் முக்கிய காரணமாக இருக்கும்போது, மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என்பது தேச நலனுக்கு எதிரான கருத்தாகும்.

மேலும் எத்தனைக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது என்பதை தீர்மானிக்கும் உரிமை அந்தந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தீர்மானிக்க வேண்டிய ஒன்று. தன் குடும்பத்தின் பொருளாதார வசதி, தன் உடல் நலம், வேலைக்குப் போகும் பெண்ணாக இருக்கும் பட்சத்தில் குழந்தை வளர்ப்பில் தேவையான உதவிகரமான சூழல் போன்றவற்றைக் கருத்தில் கொண்டே முதல் குழந்தையைப் பற்றியே யோசிக்க வேண்டியிருக்கிறது.

கருவில் வளரும் குழந்தைக்கான உரிமை பெண்ணுக்கே உண்டு என சில நாடுகளில் உச்சநீதிமன்றங்கள் தீர்ப்புவழங்கியிருக்கின்றன. குழந்தையைப் பெற்றுக் கொள்வதும், தேவையற்ற சூழலில் அதனை கலைத்து விடுவதும் பெண்ணின் உரிமை என்பதை பெருவாரியான நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.

தமிழகத்திலும் கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்வதும், வேண்டாம் என தீர்மானிப்பதும் ஒரு பெண்ணின் உரிமை. அதற்கு மூன்றாவது மனிதர்களின் ஆலோசனைகள் தேவையற்றவை.

தற்போதைய சூழலில் கல்வி முடித்து, வேலைக்குப் போய், தன் சொந்தக் காலில் நின்று, பின் திருமணத்தைப் பற்றி யோசிப்பதற்குள் குறைந்த பட்சம் 25 வயதேனும் ஆகிவிடும் சூழலில் மூன்று குழந்தைகளைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியுமா? என்பது தெரியவில்லை.

நாடு இருக்கும் நிலையில் `நாம் இருவர் நமக்கு ஒருவர்’ என்பதே போதுமானது. அதிக குழந்தைகள் குறிப்பிட்ட மதத்தின், சாதியின் மக்கள் தொகையை வேண்டுமானால் அதிகப்படுத்தலாம்; நிச்சயமாக நாட்டு நலனை அல்ல. http://unmaionline.com/20051201/lady.htm

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக