செவ்வாய், 22 நவம்பர், 2011

கடவுள் என்றொரு மாயை 3

கதைகளில் வரும் மிகவும் மோசமான பாத்திரப்படைப்புகளையும் தாண்டியதாகவே பழைய ஏற்பாட்டின் கடவுள் சித்தரிக்கப்பட்டுள்ளது. பொறாமை, அதன் மீதான பெருமிதம்; சின்னத்தனமான (petty), நீதியற்ற, மன்னிக்காத, பழிவாங்கும், இனவாதியான, குழந்தை, சகோதரன், பிள்ளைகள் என்று எந்த வேறுபாடும் இல்லாமல் எல்லோரையும் கொல்லும், வீண்பெருமையடிக்கும், பெண்களை வெறுக்கும், தலைக்கனம் மிகுந்த, மற்றவரைத் துன்புறுத்தி இன்பம் கொள்ளும் மிக மோசமான ஒரு பாத்திரப் படைப்பு.(51)

*

தாமஸ் ஜெபர்சன்: மோசஸின் கடவுள் மிகவும் பயங்கரமான ஒரு பாத்திரம்(character): கொடூரமான, பழிவாங்கும், தன்னிஷ்டத்திற்கு ஆட்டிப் படைக்கும், நியாயமற்ற பாத்திரம்.(51)

*

கிறித்துவத்தில் பேசப்படும் தமதிரித்துவம் (Holy Trinity)ஒரு வேடிக்கையான தத்துவம். அதையும் தாண்டி கத்தோலிக்க கிறித்துவத்தில் நாலாவதாக மரியாளும் சேர்க்கப்படுகிறாள். அதனால் கடவுளே கூட இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்படுகிறார். (55)

அதிலும்தான் எத்தனை விதவிதமான மரியாள்கள்: Our Lady of Fatima, Our Lady of Lourdes, Our Lady of Guadalupe, Our Lady of Medjugorje, Our Lady of of Akita, Our Lady of Zeitoun, Our Lady of Garabandal, Our Lady of Knock ... ( அடடா! .. இதில நம்ம ஊரு பூண்டி மாதா, வேளாங்கண்ணி மாதா - இதெல்லாம் விட்டுப் போச்சு!!)

1981-ல் இரண்டாம் ஜாண் பால் என்ற போப்பாண்டவர் ஒரு கொலை முயற்சியில் குண்டடி பட்டு மயிரிழையில் தப்பினார்.( நம்ம ஆளு எம்.ஜி.ஆருக்கு நடந்த மாதிரியேதான்!!) அதற்கு 'அன்னையின் கருணைக் கரங்கள் அந்த துப்பாக்கிக் குண்டை (விலகும்படி) வழிநடத்தியதாலேயே' அவர் தப்பித்ததாகக் கூறினார். அன்னையின் கரங்கள் அவருக்குக் காயம் ஏற்படாமலேயே இன்னும் கொஞ்சம் சரியாக 'வழிநடத்தியிருக்கலாமே'! (56)

*

GORE VIDAL: காட்டுமிராண்டிகளாக மனிதன் இருந்த காலத்தின் மத நூலான 'பழைய ஏற்பாட்'டிலிருந்து யூதமதம், கிறித்துவம், இஸ்லாம் என்ற மூன்று மனித குலத்திற்கு எதிரான (anti-human religions) மதங்கள் பரிணமித்தன. இதனால் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாய் வானுலகத்தில் இருக்கும் இந்தக் கடவுளாலும், அவரை வழிபடும் ஆண்களாலும் பெண்கள் அடிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள். (58)

*

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பொறுத்தவரை மனிதர்களை ஏழு படிகளில் பிரிக்கலாம்:

1. நூத்துக்கு நூறு நம்பிக்கையாளர்கள்.
2. நூத்துக்கு நூறைவிட சிறிதே குறைந்த நிலை: கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதெல்லாம் தெரியாது; ஆனால் நான் நம்பிக்கையோடு இருக்கிறேன்.
3. 50%க்கு மேல் .. முழுவதாக நம்பிக்கையில்லையெனினும், கடவுளை நம்புவர்கள்.
4. சரியாக 50%. கடவுள் இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம்.
5. <50%. முழுவதாக நம்பிக்கையில்லையெனினும், கடவுள் மறுப்பின் பக்கம் சாய்பவர்கள். 6. >0%. முழுவதாக மறுப்பதில்லை; ஆனால் கடவுள் பக்கம் சாய்வதில்லை.
7. கடவுள் இல்லையென்று முழுமையாக நம்புவர்கள். (73)

*

BERTRAND RUSSELL: வானுலக டீ கப் !

நம்பிக்கையுள்ளவர்கள் பலரும் கடவுள் இருப்பை மறுப்பவர்களே கடவுள் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டுமென்று சொல்கிறார்கள். இது தவறு.

நம் பூமிக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் நடுவில் நீள் வட்டப் பாதையில் சின்ன சீனா டீ கப் ஒன்று சுற்றி வருகிறது; அதை எந்த பெரிய தொலைநோக்கியாலும் காண முடியாத அளவு அது மிகச்சின்னதாக உள்ளது என்று நான் சொன்னால், அதை யாரால் தவறென்று நிரூபிக்க முடியும்?

அதைத் தவறென்று யாரும் நிரூபிக்க முடியாததால் நான் சொன்னதே சரி என்று நான் சொல்லிக்கொண்டிருந்தால் நான் பைத்தியக்காரத்தனமாக உளறிக்கொண்டிருப்பதாகத்தான் நினைக்க இடமுண்டு.

ஆனால், இதுபோன்ற வானுலக டீ கப் ஒன்று வானில் சுற்றிவருவது உண்மைதான்; நம் பழைய, புதிய, இறுதி 'ஏற்பாடுகளில்', புனித வேத நூல்களில் அப்படித்தான் சொல்லப்பட்டுள்ளது என்று பள்ளிப் பருவத்திலேயே வீடு, பள்ளி, கோவில்களில் இது நமது புத்தியில் தொடர்ந்து ஏற்றப்பட்டிருந்தால் அந்த 'உண்மையை'க் கேள்வி கேட்பதே கேலிக்குரிய, மிகத்தவறான விஷயமாகிவிடும் அல்லவா. (75)

ஆகவே, கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்கவேண்டிய கடமை நம்பிக்கையாளர்களுக்குத்தான் உள்ளது. கடவுள் மறுப்பாளர்களின் வேலையல்ல அது.


*

அடிக்கடி சொல்லப்படும் விஷயம் ஒன்று உண்டு: எப்படி என்பதை விளக்குவது விஞ்ஞானம்; ஏன் என்பதை விளக்குவது மெஞ்ஞானம் என்று.

விஞ்ஞானத்தால் பதில் சொல்ல முடியாத ஒரு கேள்விக்கு மதங்கள் பதில் சொல்லிவிடும் என்பது என்ன விதமான நம்பிக்கை?!

ஆக்ஸ்போர்டில் Martin Rees என்ற விண்வெளிப் பயணி 'விஞ்ஞானம் பதில் சொல்ல முடியாத கேள்விகள் பல உண்டு. அனேகமாக மதங்கள்தான் அதற்குரிய பதில்களைத் தரவேண்டுமென்று சொல்லியிருந்தார்'. ஒருமுறை நானும் அதே ஆழமான கேள்விகளை அவரிடம் கேட்டபோது, அவர் இந்தக் கேள்விக்குரிய பதிலைத்தர நான் நமது மதகுருவைத்தான் அழைக்க வேண்டுமென்றார். விஞ்ஞானிகளுக்கே தெரியாத பதிலை இந்த மதக்குருக்கள் மட்டும் எப்படி தர முடியும்?

விஞ்ஞானத்தில் பதில் தரமுடியாத கேள்விகள் பலவும் உண்டு. ஆனால் மதங்கள் அவைகளுக்குப் பதில் தந்துவிடும் என்பது என்னவிதமான நம்பிக்கை. மனிதன் நடக்கவேண்டிய நல்வழி பற்றி சொல்வது விஞ்ஞானத்தின் கட்மையல்ல. மதங்களுக்கு உண்டென்கிறார்கள். அவைகளுக்கு வேறு வேலை எதுவும் கிடையாது என்பதாலேயே அவைகளுக்கு அந்தத் தகுதியைக் கொடுப்பது சரியா? அப்படியே கொடுப்பதாயின் எந்த மதத்திற்கு அந்தத் தகுதியைக் கொடுப்பது? பைபிளில் விபச்சாரம் செய்தவர்களோடு, ஓய்வு நாளில் (Sabbath day) விறகு பொறுக்கியவர்களையும், பெற்றோரிடம் மரியாதையில்லாமல் பேசியவர்களையும் ஒன்றாக்கி இவர்கள் அனைவருக்குமே ஒரே மாதிரியான மரண தண்டனை என்று சொல்லியிருப்பது எத்தனைபேருக்குத் தெரியும்? எந்த மதத்தின் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்வது? (81)


*

அடுத்த பதிவில்:ஜெபம் / தொழுகை / வேண்டுதல்கள் கேட்கப்படுகின்றனவா? - ஒரு அறிவியல் சோதனை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக