புதன், 9 நவம்பர், 2011

“ஆணுக்கும், ஆணுக்கும் பிறந்தவனாம் ஐயப்பன், இந்த ஆபாசத்தைப் பாரீர்” என்று சொல்வது ச‌ரியா?

File:SabarimalaRush2010.JPG நான் திருச்சியில் இருந்து  சென்னைக்கு  வந்த போது, நான் குடி இருந்த வீட்டீற்கு அருகில் உள்ள சுவரில் ஒருவர் கருப்பு நிற வண்ணத்தில் எழுதிக் கொண்டு இருந்தார். “ஆணுக்கும், ஆணுக்கும் பிறந்தவனாம் ஐயப்பன்,  இந்த ஆபாசத்தைப் பாரீர்” “என்ன தம்பி பாக்குறீங்க, உங்களைப் போன்ற இளைஞர்கள்   எல்லாம் சிந்திக்க வேண்டும்”, என்றார். “சிந்திக்க வேண்டியது அவசியம். ஆனால் சிந்திக்கும் போது ஒரு ஆணும் இன்னொரு ஆணும் கூடினால் எப்படி குழந்தை பிறக்கும் என்ற கேள்வி வருகிறது”, என்றேன். “தம்பி நாங்களா இத  சொல்லுறோம், இந்து மதத்தை சேர்ந்தவங்க தானே விஷ்ணு என்ற ஆண் கடவுளும் , சிவன் என்கிற ஆண் கடவுளும் கூடினதால ஐயப்பன் பொறந்தாருங்கிறாங்க,  அதைத் தானே ஆபாசம் என்கிறோம்”, என்றார். “விஷ்ணு என்பவர் அழகிய பெண்ணாக, மோஹினியாக அவதாரம் எடுத்ததாகவும் அந்தப் பெண்ணுடன்தான் சிவன் என்னும் ஆண் கூடியதாகவும் சொல்கிறார்களே அன்றி ஆணுடன் ஆண் கூடியதாக இல்லையே”, என்றேன். “தம்பி நீங்க ரொம்ப கடவுள் நம்பிக்கை , பக்தி உள்ளவர் போல இருக்கு” “நான் எதையும் ”நம்புவது” இல்லைங்க. ஆனால் சொல்லப் பட்ட கோட்பாட்டை அப்படியே எழுதி  விமரிசப்பதுதான் அறிவு நியாயம், நம்ம வெறுப்புணர்ச்சியைக் காட்ட மாற்றி எழுதி விமரிசிப்பது அறிவு நாணயமல்ல”, என்றேன். அத்துடன் நாங்கள் பிரிந்து விட்டோம். இப்போது இந்த “ஆணும் ஆணும் கூடியதாக” மாற்றி சொல்லும் பிரச்சாரத்தை மத வெறிக் கோட்பாட்டு பிரச்சாரகர்களும் கையில் எடுத்துள்ளனர். நாம் மக்களைக் கேட்டுக் கொள்ளுவது என்னவென்றால், தயவு செய்து மத வெறிப் பிரச்சாரகர்களின் வலையில் விழுந்து விடாதீர்கள் என்பதுதான். ஏனெனில் இந்துக்களின் கடவுள்களை வேண்டுமென்றே கொச்சைப் படுத்திஎழுதினால் பதிலுக்கு இந்துக்களும் மேரி மாதா எப்படி பிள்ளை பெற்றார் என்று ரியாக்சன் குடுப்பார்கள், இவ்வாறாக மத நல்லிணக்கப் பாதையில் செல்வோரையும் பிற மத தெய்வங்களை இகழ்பவர்களாக ஆக்கி மத வெறிப் பாதைக்கு கொண்டு வந்தால் அவர்கள் வெற்றி அடைந்து விடுவார்கள். இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மக்களின் அமைதியான ஆன்மீகத்தை முறித்து, அவர்களின் மத சகிப்புத் தன்மையை அழித்து அவர்களையும் மத வெறியர்கள் ஆக்குவதுதான் இவர்களின் நோக்கம். ஆனால்  அதற்க்கு இடம் கொடுக்கக் கூடாது. ஹரி ஹர சுதன் எனப் படும் ஐயப்பன், கடவுளின் சிவன் என்னும் ஆண் நிலைக்கும், மோகினிக்கும் பிறந்தவர், அந்த மோகினியாக அவதாரம் எடுத்தது ஹரி என்று விளக்கம் கொடுப்பதோடு கட்டுப்பாடு காக்க வேண்டும். இந்தக் கட்டுரையின்  இன்னொரு முக்கியக் கருத்தாக நாம் முன் வைப்பது, ஐயப்பன் வழிபாடு பல நல்ல விளைவுகளை தரக் கூடியதாக உள்ளது என்பதையே. ஐயப்பனை வழிபாட்டில் பிற மத தெய்வங்களை இகழ வோ, வெறுக்கவோ சொல்லப் படவில்லை. சாதி வேறுபாடுகளை உடைத்து சமத்துவத்தை நிலை நாட்டுகிறார் ஐயப்பன். எந்த சமூகத்தை  சேர்ந்தவராக  இருந்தாலும், ஒருவர மாலை போட்டுக் கொண்டால் அவரை சாமி என்று மரியாதையுடன் அழைக்கப் படுகிறார்,  மரியாதையுடன் நடத்தப் படுகிறார். அய்ய‌ப்ப‌ன் வ‌ழிபாட்டின் முக்கிய‌ அம்ச‌ம் அன்ன‌தான‌ம் ஆகும். அன்ன‌தான‌ம் என்று சொன்னாலும் பாயாச‌ம், வ‌டை என்று அச‌த்தி விடுவார்கள். இருமுடி க‌ட்டும் நாள் ஏழை ப‌ண‌க்கார‌ர் என்று விதாய்ச‌ம் இல்லாம‌ல் எல்லொருக்கும் அன்ன‌தான‌ சாப்பாடு உண்டு! ஐயப்பனுக்கு மாலை போட்டுக் கொள்வது மனிதருக்கு சுய கட்டுப் பாடுகளை தருவதாக உள்ளது. குடிப் பழக்கம் உள்ள என்னுடைய மேலதிகாரி ஒருவர், மாலை போட்டுக் கொண்டு வந்து எங்களிடம் இந்த மாசம் பத்தாயிரம் ரூபாய் மிச்சம் என்று கொஞ்சம் வருத்ததுடன் சொல்லுவார். ஆனால் இப்போது மாலை போட்டுக் கொள்ளும் பலர் விரதத்தை சரியாகக்  கடைப் பிடிப்பதில்லை என நினைக்கிறேன். இதிலே சக நண்பர்கள்  அவருக்கு உதவி செய்து அவரை தனிமையில் விடாத படிக்கு அவருடனே வீடு வரை சென்று விட்டால் அவர் விரதம் காகப் படும், ஒரு நாற்பது நாலாவது அவரது கல்லீரலுக்கும் நன்மை உண்டாகும். அதே போல மகர ஜோதி என்று சொல்லப் படுவது உண்மையான ஜோதியா அல்லது மலையிலே யாராவது நெருப்பைக் கொளுத்தி ஜோதி உண்டாக்குகிரார்களா என்பது பற்றி பல கருத்துக்களும் செய்திகளும் வருகின்றன. இதிலே கேரளா டூரிசம் போர்டு வருமானத்திற்காக சரியான நேரத்தில் பறவையைப் பறக்கவிட்டு நெருப்பையும் கொளுத்துவதாக கூட சில செய்திகளைப் படிக்கிறோம். அவை உண்மையா என்று நமக்கு தெரியாது. ஆனால் பறவை பறப்பதோ, ஜோதி தெரிவதோ அதாக தெரிந்தால் தெரியட்டும், இல்லாவிட்டால் செயறகையாக செய்து காட்ட வேண்டாம், இந்து மதம் உண்மைக்கு முக்கியத்துவம் குடுக்கும் மதம். ஐயப்பன் கடவுளா, மேலே வானுலகில் இருக்கிறாரா  அவரை வேண்டினால் கேட்டது கிடைக்குமா, நினைத்தது நடக்குமா என்பதற்கு எல்லாம் நாம் சாட்சி கொடுக்க இயலாது. நம்மைப் பொறுத்தவரையில் எந்த‌க் க‌டவுளையும் பார்க்க‌வில்லை, ச‌ரி பார்த்துக் கொள்ள‌க் கூடிய‌ நிரூப‌ண‌த்தை யாரும் த‌ர‌வில்லை. அதே நேர‌த்திலே ஐய‌ப்ப‌ன் வ‌ழிபாடு, பிற‌  ம‌த‌ங்க‌ளின் மீது வெறுப்புண்ர்ச்சியை தூண்டாத‌தாக‌, அமைதியான‌ ஆன்மீக‌த்தை உருவாக்குவ‌தாக‌, சுய‌க் க‌ட்டுப்பாட்டை உருவ‌க்கி ஒருவ‌ரை உய‌ர்த்தும் வ‌கையில், தான சிந்த‌னையை வ‌ள‌ர்க்கும் வ‌கையில் அமைந்துள்ள‌து என்கிற‌தை சொல்ல‌ நாம் த‌ய‌ங்க‌ வேண்டிய‌தில்லை. ஐய்ய‌ப்ப‌னின் கோட்பாடும் கொடுங்கொல், ச‌ர்வாதிகார‌ கொடூர‌னை த‌ட்டிக் கெட்டு அப்பாவி  ம‌க்களைக் காக்கும் கோட்பாடாக‌  உள்ள‌து! இந்தக் கட்டுரைக்கு வந்த ஒரு பின்னூட்டத்திற்கு நாம் அளித்த பதிலின் ஒரு பகுதியை கட்டுரையின் இணைப்பு – 1 ஆக சேர்க்கிறோம். இணைப்பு – 1: இங்கே மேரி மாதாவைப் ப‌ற்றி ப‌திலுக்கு ப‌தில் லாவணி பாட‌ நான் விரும்ப‌வில்லை. எந்த‌ ஒரு பெண்ணையும் ப‌ற்றி புர‌ளி பேசுவ‌து த‌வ‌று என்ப‌து ந‌ம் கோட்பாடு. பிற‌ பெண்களை தாயாக‌ க‌ருதுவ‌தே த‌மிழ‌ர் ப‌ண்பாடு. அவ்வகையில் மேரி மாதாவுக்கு வ‌ண‌க்க‌ம் செய்வ‌தையும், வ‌ழிபாடு செய்ய‌வும் நாம் த‌ய‌ங்க‌வில்லை. இயேசு என்ன‌ சொன்னார் , அவ‌ருடைய‌ க‌ருத்துக்க‌ள் எந்த‌ அளவுக்கு ச‌முதாய‌த்துக்கு உத‌வியாக‌ இருக்கும் என்ப‌தையே நாங்க‌ள் முக்கிய‌மாக‌க் க‌ருதுகிரோம். இணைப்பு – 2:
பல மாதங்களுக்கு முன்னாள் வேறொரு தளத்திலே மேரி மாதாவின் கோவிலை , மேரி மாதாவின் பெயரைக் குறிப்பிடாமலே திட்டி எழுதி, திருச்சியில் அது போல பல வழிபாட்டுத் தளங்கள் உள்ளன என்று மறை முகமாக மேரி மாதாவை திட்டியவர்கள், இன்றைக்காவது அவருக்கு மதிப்புக் கொடுக்க முன் வந்தது அந்தளவில் மகிழ்ச்சியே.
ஆணும் ஆணும் கூடியதால் உருவானவன் ஐயப்ப்னாம் என்று நாதீகவாதிகள் எழுதினாலும், இன்றைக்கு தங்களை கிறிஸ்தவர்களாக சொல்லிக் கொள்ளும் சிலர் தனக்குள் மத சகிப்புத் தன்மை இன்மையைக் காட்ட இந்த ஆணும் ஆணும் என்று மாற்றிச் சொல்லும் பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளனர்.
அதற்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக கிறிஸ்தவ மத தெய்வங்களை இகழ வேண்டாம் என்பதை முன்பே கட்டுரையில் சொன்னோம், ஏனெனில் அப்படி பின்னோட்டம் இட வேண்டாம் என்பதற்கே.
இதற்க்கு முன்பே நம் தளத்திலே சிலர் இந்து தெய்வங்களி இகழ்ந்து , அதற்க்கு பதிலாக அவர்கள் இவர்களின்  தெய்வங்களி இகல்வதுமாக இருந்தது. இடையிலே நாம் பல பின்னூட்டங்களி மட்டுறுத்திய போது, சிலர் நான் கிரிப்டோ கிறித்தவன் என்ற வகையில் கூட கருத்து  தெரிவித்தனர்.
எனவே மத வெறியை மட்டுப் படுத்த இயலாத சிலர் இயேசு கிறிஸ்துவின் சீடர்களாக தங்களை சொல்லிக் கொண்டு, பிற மத தெய்வங்களை பற்றி தவறான தகவல்களை  எழுதி வருவதாலே, பதிலுக்கு அது போல செய்ய வேண்டாம் என்று முன் கூட்டியே எச்சரித்து இருக்கிறோம்.
”ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவனாம் ஐயப்பன், இந்த ஆபாசத்தைப்  பாரீர்”  என்று சொல்வது என்று  சொல்வ‌து ச‌ரியா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக