புதன், 21 டிசம்பர், 2011

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 11

 


எடுத்துக்கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு
இந்த பதிவில் நண்பர் இஹ்சாஸ் என்ன சொல்கிறார்? அல்லது என்ன சொல்ல முனைந்திருக்கிறார்? என்று கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு பரிசு என்று அறிவித்து விடலாமா என்று எண்ணுமளவுக்கு வெறுமையாய் காட்சியளிக்கிறது. மறுக்க வேண்டும் என்பது மட்டும் தான் நண்பருக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் எப்படி மறுப்பது என்பது கடைசிவரை அவருக்கு பிடிபடவே இல்லை. அதற்காக மறுக்காமல் இருந்துவிட முடியுமா என்ன? அதனால் தான் ஆயுதமின்றியே களத்திற்கு வந்துவிட்டார். வீரர் தான்.
இப்பேரண்டம் பெருவெடிப்பிலிருந்து தொடங்கியிருக்கலாம் என்பது அறிவியல் யூகம். இது அறிவியல் உண்மையல்ல யூகம் தான் அதனால் நாங்கள் ஏற்க மாட்டோம் என்று மதவாதிகள் யாரும் கூறவில்லை. ஏனென்றால் பெருவெடிப்புக் கொள்கையை ஒட்டிவைப்பதற்குத் தோதாக ஓரிரு வசனங்களை குரானில் கண்டடைந்து விட்டார்கள். அந்தோ! ”அறிவியல் உண்மையல்ல யூகம் தான்” என்னும் பெருமையைப் பெறுவதிலிருந்து பெருவெடிப்புக் கொள்கை நூலிழையில் தவறிவிட்டது.
அண்டவெளியில் சீராக பரவியிருக்கும் வெப்பம், பருப்பொருட்களின் விரைவு உள்ளிட்ட சில காரணங்களைக் கொண்டு பெருவெடிப்பை ஊகித்திருக்கிறார்கள். ஆனால் இதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே முகம்மது கூறியிருக்கிறார் என்று காட்டுவதற்கு கண்டுபிடித்தவை தான் குறிப்பிடப்பட்ட அந்த இரண்டு வசனங்களும். அந்த இரண்டு வசனங்களுமே பெருவெடிப்போடு ஒட்டுறவு எதையும் கொண்டிருக்கவில்லை என்பதை காட்டியிருந்தேன். இதற்கு மொத்தப்பதிவில் நண்பர் எடுத்து வைத்துப்பது இதைத்தான் \\ இதன் மூலம் வானங்களும் பூமியும் முதலில் ஒன்றாக இருந்தது என்றும் அதை பின்னர் பிரித்து பிளந்தெடுத்தோம் என்றும் அல்லாஹ் கூறுகிறான். இது தற்கால விஞ்ஞானிகள் கூறும் பிரபஞ்சத்தின் தோற்றத்தை அப்படியே எடுத்துக்காட்டுகிறது.இதன் பின் உருவான தூசுப்படலத்த்லிருந்துதான் ஏனைய கிரகங்கள் தோன்றின என்று குறிப்பிடுகின்றனர் விஞ்ஞானிகள்// இந்த ஒற்றை வரியை எழுதுவதற்கு ஏன் ஒரு பதிவை வீணாக்கினார் என்பது அவருக்கே வெளிச்சம்.
வானங்களும் பூமியும் ஒன்றாய் இருந்தது என்று எந்த விஞ்ஞானி மதவாதிகளிடம் விளக்கினார் என்று நண்பர் நமக்கு விளக்குவாரா? வானங்களிடமிருந்து பூமி முதலில் பிரித்தெடுக்கப்பட்டது இதன் பின் உருவான தூசுப்படலத்திலிருந்து ஏனைய கிரகங்கள் தோன்றின. இதை நன்கு கவனித்துப் பார்த்தால் புதிய அறிவியல் உண்மையை(!) நண்பர் கண்டுபிடித்து உலகிற்கு அளித்துள்ளார் என்பது விளங்கும். முதலில் வானங்கள் பின்னர் பூமி அதன் பிறகு உருவான தூசுப்படலத்திலிருந்து சூரியன் உள்ளிட்ட விண்மீன்கள் கோள்கள் எல்லாம் பின்னர். இந்த அறிவியல் உண்மை தெரியாமல் உலகின் அறிவியலாளர்களெல்லாம் காலத்தே மிகவும் பிற்பட்டது பூமி என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
இது ஒருபக்கம் இருக்கட்டும், பதிவின் தொடக்கத்தில் நண்பர் ஒரு விளக்கம் தந்திருக்கிறார். அதாவது குரான் வசனங்களில் அறிவியல் உண்மைகள் இருக்கின்றன என்று பலர் கூறித் திரிகிறார்களாம். அப்படி பலர் கூறித் திரிவதில் கலப்படமும் இருக்கிறதாம். எனவே கலப்படமான அறிவியல் உண்மையை எடுத்துக் கொள்ளாமல் அக்மார்க் அறிவியல் உண்மையை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே செங்கொடி கலப்படமான அறிவியல் உண்மையை எடுத்துக் கொண்டு மறுப்பு கூறியிருந்தால் நண்பர் அக்மார்க் அறிவியல் உண்மையை மட்டுமே கூறி மறுப்புரை வரைவாராம். அந்த விதத்தில் நண்பர் கூறும் அக்மார்க் அறிவியல் உண்மை தான் வானங்கள் பூமி பின்னர் ஏனையவை என்பது. இப்போது உங்களுக்கு எது அக்மார்க் அறிவியல் உண்மை? எது கலப்படமான அறிவியல் உண்மை? என்று குழப்பம் ஏற்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.
சரி, எது அக்மார்க் அறிவியல் உண்மை, எது கலப்படமான அறிவியல் உண்மை என்று பிரித்தறிவதற்கு அளவுகோல் எதையாவது நண்பர் வைத்திருக்கிறாரா? ஒருவேளை நண்பர் சார்ந்திருக்கும் குழு கூறுவது மட்டும் அக்மார்க் அறிவியல் உண்மை அதற்கு மாற்றமாக கூறப்படுவதெல்லாம் கலப்படமான அறிவியல் உண்மை என்று கூறுகிறாரோ. குரானில் அறிவியல் என்று யார் கூறினாலும் அது கலப்படமில்லாத அக்மார்க் பொய் என்பது ஒருபுறம் இருக்கட்டும். குரானில் அறிவியல் என்று கூற முற்படுபவர்கள் அனைவரின் நோக்கமும் ஒன்றுதான். 1400 ஆண்டுகளுக்கு முன்னர் முகம்மது எனுமொரு மனிதர் எழுதியதை ஆண்டவன் எழுதியது என்று பீஜப்படுத்துவது தான்.
இன்னொன்றையும் நண்பர் குறிப்பிடுகிறார். எடுத்துக் காட்டப்பட்ட இரண்டு வசனங்களில் இரண்டாவது வசனத்தை மட்டும் மறுத்துவிட்டு முதல் வசனத்தை நான் ஏற்றுக் கொண்டு விட்டதைப் போல் பாவனை காட்டுகிறார். நண்பரின் காட்சிப்பிழையை உத்தேசித்து மீண்டும் ஒருமுறை கூறிவிடலாம் \\ வானமும் பூமியும் முன்னர் இணந்திருந்தது இப்போது பிரிந்திருக்கிறது என்பதை மேற்கண்ட வசனங்களின் மூலம் அறியலாம். ஆனால் வானம் என்பது மேலே தெரியும் நீல நிற பின்னணி மட்டுமல்ல எந்தக்கோளின் எல்லையிலிருந்தும் வானம் தொடங்கிவிடுகிறது. இன்னும் தெளிவாகச்சொன்னால் சூழ இருக்கும் வானத்தில் கோள்கள் குறை மூழ்கலில் கிடக்கின்றன. அதாவது நீர் நிரப்பிய பாத்திரத்தில் ஒரு பந்து முழுவதும் மூழ்கி தரை தட்டிவிடாமலும் நீரின் மேற்பரப்பில் மிதக்காமலும் நடுவில் இருப்பதைப்போல் கோள்களின் பூமியின் அனைத்து திசைகளிலும் வானம் சூழ்ந்திருக்கிறது. இந்த அறிவியலை அறியாத குரான், பூமியையும் வானத்தையும் பிரித்துவிட்டதாய் விளம்புகிறது//
ஒன்றுமில்லாத மறுப்பை மறுத்து எழுத வேண்டுமா என நீண்ட நேரம் யோசித்தேன். இது போன்ற குழப்பத்தை மீண்டும் எனக்கு நண்பர் தராதிருக்கட்டும். ஒரு வேளை நண்பரின் எந்த இடுகைக்காவது மறுப்பு எழுதாமல் விட்டுவிட்டேன் என்றால் இப்படியான ஒரு குழப்பத்தில் நகர்ந்து விட்டேன் என்று கொள்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக