ஞாயிறு, 18 டிசம்பர், 2011

முஸ்லிம்களும் மூன்றாம் பாலினமும் !

 

 

ஒரு சில மீன் வகைகள், தவிர இனங்கள் தவிர்த்து ஆண் / பெண் இருத்தன்மை ஒன்றாக அமையப்பட்ட உயிரினம் மிகக் குறைவு. ஒரு செல் உயிரிகளுக்கு பால் அமைப்புகள் கிடையாது அவை தன்னைத் தானே பெருக்கிக் கொள்ளும். உயிரின இனப் பெருக்கத்திற்கு உயிர்களிடையே ஒரு ஈர்ப்பை ஏற்படுத்துவதன் மூலம் உயிர்களை எப்போதும் உற்பத்தி செய்து கொண்டிருக்க முடியும் என்கிற விதியில் ஏற்பட்ட பிரிவுகளே ஆண் / பெண் அமைபு. ஈர்ப்பு என்பது இன்பமாகவும் அதன் விளைவுகள் இனப் பெருக்கம், அவ்வாறு பெருகும் இனத்திற்கு பாதுகாப்பான தாயன்பு என்கிற இணைப்பு அவற்றின் பருவ வயது வரையிலான வளர்ச்சிக்கு இயற்கை ஏற்படுத்தி வைத்திருக்கும் ஒரு அமைப்பே ஒரே உயிரினத்தின் பால் வேறுபாடுகள். உடலமைப்பும், இனப்பெருக்க உறுப்புகளும் ஒரு உயிரனத்தை ஆண் பெண் என்று காட்டுகின்றன என்றாலும், இந்த இரண்டு பிரிவும் ஒன்றை ஒன்று உற்பத்தி செய்யும் தன்மையைப் பெற்றிருக்கின்றன. பால் உறுப்புகள் தவிர்த்து ஒரு ஆண் தன் வடிவத்தைப் போன்ற பெண்ணிற்கு தந்தையாவதும், ஒரு தாய் தன் உருவத்தை ஒத்த ஆணைப் பெற்றெடுப்பதற்கும் இயற்கை வாய்ப்புகளை வழங்கி இருக்கிறது. இவ்வாறு உருவம் பெற்றிருக்கும் உயிரினங்கள் தன்னை ஆணாகவும் பெண்ணாகவும் அறிந்து கொள்ள முதல் காரணம் அவற்றின் உடலமைப்பு தான். மனித இனத்தில் மனிதன் சமூகமாக மாறவில்லை என்றால் இந்த ஆண் / பெண் பிரிவுகளில் உடலும் மனமும் சரியாகவே பொருந்தி இருக்கும் என்று கருதுகிறேன். ஒரு ஆண் தன்னை பெண்ணாக உணர்வதற்கும், ஒரு பெண் தன்னை ஆணாக உணர்வதற்கும் உடல் குறித்த காரணங்களை விட சமூகம் குறித்தக் காரணங்களே முதன்மையாகிறது. பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், ஆண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற சமூக அமைப்பில் தான், இவற்றை மீறிய மூன்றாம் பாலினமாக மனிதர்கள் தோன்றுகிறார்கள்.

ஆண் பெண் பாகுபாடின்றிய காட்டுவாசிகளிடமோ, நரிக்குறவ்ர்களிடையோ மூன்றாம் பாலினர் உற்பத்தி ஆகுவதில்லை என்றே நினைக்கிறேன், அங்கே இனப் பெருக்கம் மட்டும் அதைச் சார்ந்த ஈர்ப்பு என்பதைத் தவிர்த்து ஆண் / பெண் மனங்கள் எதுவும் கிடையாது, வேட்டையாடுதல், தொழில்கள் ஆகியவற்றை இருவரும் சேர்ந்தே செய்கிறார்கள். நாகரீக வளர்ச்சி பெற்ற சமூகத்தில் தான் பெண்ணுக்கான இலக்கணமும், ஆணுக்கான இலக்கணமும் புழக்கத்தில் இருந்து வாழ்க்கைத் தரமாக ஆகிவிட்ட படியால், உடலும் மனமும் ஒன்றிணைந்து மூன்று வயதின் பிறகு ஒரு குழந்தை தன்னை ஆணாகவோ பெண்ணாகவோ நினைக்கத் துவங்குகிறது. பருவ வயதினில் ஏற்படும் உடலியல் மாற்றங்களில் அதை உறுதி செய்து கொள்கிறது. எதிர்பாராவிதமாக ஒரு சிலரின் பருவமாற்றங்களில் ஏற்படும் கோளாறுகள் வேறுமாதிரியான (சுரப்பிகளைத் தூண்ட அல்லது கட்டுப்பட்டு) விருப்பங்களை ஏற்படுத்த தன்னுடைய பாலினம் உறுதி செய்ய முடியாத சிக்கலுக்குச் செல்லவே அவர்கள் குழப்பத்தில் சென்று புதிய முடிவுகளை எடுக்கும் நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள். இவர்கள் தான் மூன்றாம் பாலினர். இவ்வாறு ஒரு ஆண் தன்னை ஒரு பெண்ணாக நினைத்து மூன்றாம் பாலினர் நிலை அடைவது என்பது அவராக விரும்பி ஏற்றுக் கொண்ட நிலை இல்லை, உடல் மற்றும் மனச் சூழலலால் அமையப் பெற்றதே. பிறக்கும் போது ஒருவர் ஆணாகவோ பெண்ணாகவோ பிறந்தாலும் அதன் முழுமை என்பது பருவ மாற்றங்களினால் பெறப்படுவதே. ஆகையால் ஒருவர் ஆணா பெண்ணா என்பதை பிறப்பு முடிவு செய்வதில்லை அதை பருவ வயதே முடிவு செய்கிறது. இவற்றை மதம் மற்றும் குரான் வசனங்களைக் காட்டி இஸ்லாமிய சமூகம் ஒப்புக் கொள்வதில்லை. காரணம் அல்லாவின் படைப்பு ஆணையும் பெண்ணையும் தான் படைக்கிறது. இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் ஒருவரை அல்லா படைக்கவே இல்லை என்கிறார்கள்.

ஒரு சில கட்டுபாடுகளை மூன்றாம் பாலினத்தினர் மீது இஸ்லாமிய நாடுகள் விதித்திருக்கிறது. அதாவது மூன்றாம் பாலினம் என்கிற சொல்லே இஸ்லாத்திற்கு எதிரானது ஆகவே மூன்றாம் பாலினத்தில் ஆணுறுப்பு உடையவர்கள் தன்னை ஆண் என்றோ பெண் என்றோ அழைத்துக் கொள்ள மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஈரான் போன்ற தீவிர இஸ்லாமிய நாடுகளில் மூன்றாம் பாலினர் தன்னை பெண்ணாக அறிவித்துக் கொள்ள ஆண் உறுப்பை நீக்கிக் கொண்டவராக இருக்க வேண்டும், இதற்கு சட்டத்திலும் அனுமதி உண்டு. ஆனால் திருமணம் செய்து கொள்ள அனுமதி இல்லை. அறுவை சிகிச்சை செய்து கொள்ளாதவர்களுக்கு பெண்களைப் போன்று நடந்து கொள்ள அனுமதி கிடையாது. . மலேசிய உள்ளிட்ட வேறு சில நாடுகளில் ஆண் உறுப்பை நீக்கிக் கொண்டாலும் அரசு ஆவணங்களில் அவர்களின் பாலினம் ஆண் என்றே இருக்கும். மதம் சாராத அரசுகள் ஒருவர் தன்னை ஆணாகவோ பெண்ணாகவோ அறிவித்துக் கொள்ள உரிமை வழங்குகிறது. ஆனால் இஸ்லாமிய நாடுகளில் மேற்கண்ட கட்டுப்பாடுகள் நாட்டின் ம்த உணர்வின் ஆழங்களுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் திருநங்கை அல்லது மூன்றாம் பாலினத்தினர் பற்றிய புரிந்துணர்வு இருந்தாலும் அவர்களை சக மனிதனாக மதிக்கும் நிலை இன்னும் வரவில்லை. அண்மையில் தமிழகத்தில் மூன்றாம் பாலினமாக ஆன ஒருவரை 'இஸ்லாத்துக்கு எதிராக நடந்து கொள்கிறார்' என்று அவரது உறவினரான முஸ்லிம் இளைஞரால் ஓட ஓடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இஸ்லாமிய சமூகத்தில் மூன்றாம் பாலினர் பற்றிய ஒரு தெளிவோ, வழிகாட்டுதலோ சரியாக அமையவில்லை காரணம் இஸ்லாம் உடல் உறுப்புகளை வைத்து தான் ஆண் பெண் என்று முடிவு சொல்கிறது, அதற்கு மாற்றாக அறிவித்துக் கொள்ள குரானிலோ, ஹதீசீலோ வழிகாட்டுதல் கிடையாது, தடையே நிலவுகிறது.

மூன்றாம் பாலினர் மட்டுமின்றி மனவளர்ச்சி இன்றி பிறந்தக் குழந்தைகள் குறித்து இஸ்லாமிய நண்பர்களிடம் கேட்டு இத்தகைய படைப்பு அல்லாவின் குறைதானே என்று கேட்டால் ஒப்புக் கொள்ளமாட்டார்கள், பெற்றோர் கர்பம் அடைந்த போது தவறான மருந்துகளை உட்கொண்டிருப்பார்கள் அதனால் இத்தகைய குழந்தை பிறந்திருக்கலாம் மற்றபடி 'அலக்' என்ற நிலையில் கருவுறச் செய்வதுடன் அல்லாவின் வேலை முடிந்துவிட்டது என்கிறார்கள். அல்லா நன்கு அறிந்தவன் என்றால் நாளைக்கு இந்தக் குழந்தை பிறந்தால் இப்படி ஆகிவிடும் என்று அந்த கருவுறுதலையே தடுத்து இருக்கலாமே ? என்ற என்போன்றவரின் அப்பாவித் தனமான கேள்விகள் அல்லாவின் படைப்புத் திறனை என்றுமே குறைத்து மதிப்பிடாது என்றே நினைக்கிறேன். மூன்றாம் பாலினரை மூன்றாம் பாலினர் என்று அழைக்காவிட்டாலும் ஒரு பெண்ணாக ஏற்றுக் கொள்கிறார்களே என்பது மகிழ்ச்சியான ஒன்று தான். என்னைப் பொருத்த அளவில் மூன்றாம் பாலினப் பெருக்கத்தை ஆண் / பெண் சமூக இலக்கணங்களை சரி செய்தால் குறைக்க முடியும் என்றே கருதுகிறேன், ஆணாக பிறந்த ஒருவர் விரும்பி பெண் உடைய அணிந்து கொள்ள முதல் காரணம் பெண்ணிற்கான உடை இவைகள் என்பதை சமூகம் முடிவு செய்திருப்பதும், பெண் என்பவள் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டுமென்ற இலக்கணங்கள் போன்றவையாகும், உடல் ரீதியான பருவ மாற்றங்கள் ஒரு ஆணை பெண்ணாக உணரவைத்தாலும், சமூகம் பால் வேறுபாடின்றி இருக்க தனக்குத் தானே ( ஆண் பெண்ணாக மாறும் ஆசை) தூண்டல் உடல் மற்றும் மன ரீதியில் பயணப்பட ஒன்றும் இருக்காது. மற்றபடி மத ரிதியான கட்டுப்பாடுகளோ, மருந்துகளோ இந்த உணர்வுகளை குறைத்து மூன்றாம் பாலின உற்பத்தியை குறைத்துவிடாது. ஆண் பெண் மன ரீதியான பாகுபாடு இல்லாத இனங்களில், உயிரினங்களில் இத்தகைய இரட்டை தன்மை உடைய மூன்றாம் பாலினம் அரிது அல்லது இல்லை என்றே கூறிவிடலாம்.

மூன்றாம் பாலினத்தினரையும் ஓரின சேர்கையாளர்களையும் ஒன்றாகவே பார்த்து நிராகரிக்கிறது இஸ்லாம்.

பின்குறிப்பு : கட்டுரையில் ஏதும் தவறானவை இருந்தால் சுட்டிக் காட்டுங்கள், மாற்றிக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக