சனி, 10 டிசம்பர், 2011

அல்லாவின் பார்வையில் பெண்கள்: 3. விவாரத்து



விவாகரத்து செய்யும் வசதி பெண்களுக்கு அவசியம் என்பதிலோ, அதை இஸ்லாம் அங்கீகரித்திருக்கிறது என்பதிலோ மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. ஆனால் அதை ஆண்களுக்கு நிகராக இஸ்லாம் கொடுத்த பெண்களுக்கான உரிமை என்பதில், அதை இஸ்லாம் தான் முதலில் வழங்கியது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமுண்டு. தவிர்க்க முடியாத ஒன்றாக, ஆணாதிக்கப் பார்வையுடன் தான் விவாகரத்து உரிமையை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருக்கிறது. அதேநேரம் விவாகரத்து எனும் அனுமதி பெண்களுக்கு சரியான அளவில் பலனளிக்க வேண்டுமென்றால் பொருளாதார சுதந்திரம் பெண்களுக்கு இன்றியமையாதது. இஸ்லாம் இதில் பெண்களை ஆண்களுக்கு கீழாகவே வைத்திருக்கிறது என்பது வெளிப்படை.

பெண்களுக்கும் விவாகரத்துரிமை என்றதும் ஆண்களைப் போல் ‘தலாக்’ எனும் சொல்லை மும்முறை கூறி பெண்கள் திருமணத்தை ரத்து செய்துவிட முடியாது. ஆண்கள் செய்யும் விவாகரத்திற்கும் பெண்கள் செய்யும் விவாகரத்திற்கும் இடையே நடைமுறையில் வேறுபாடு இருக்கிறது. பெண்களின் விவாகரத்திற்கு ’குலாஃ’ அல்லது ’குலாஉ’ என்று பெயர். விவாகரத்து பெற விரும்பும் பெண் தலைவரிடம் (நீதிமன்றம்) சென்று முறையிட வேண்டும். அவர் கணவனை அழைத்து, திருமணத்தின் போது கணவன் கொடுத்த மணக் கொடையை மனைவி திரும்பக் கொடுத்ததும் இருவருக்கும் இடையிலான திருமணம் முறிந்ததாக கொள்ளப்படும்.

இஸ்லாத்திற்கு முன்பு அரேபியாவின் குடும்ப அமைப்பில் ஆணே தலைமைப் பொறுப்பில் இருந்தான் என்றாலும் பெண்ணிற்கான முதன்மைத்தனம் முற்றிலுமாக குலைந்து விடவில்லை. பெண்ணின் மறுமணம், விவாகரத்து போன்றவை அங்கு நடைமுறையாகவே இருந்தது. முகம்மதின் முதல் மனைவி ஹதீஜா என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால், ஹதீஜாவுக்கு முகம்மது முதல் கணவரல்ல மூன்றாவது கணவர். அமைக்கப்பட்டிருக்கும் கூடாரத்தின் வாசலை ஒரு திசையிலுருந்து வேறொரு திசைக்கு மாற்றி வைப்பதன் மூலம் தன் கணவனை விவாகரத்து செய்து விட்டதாக பெண்கள் ஆண்களுக்கு அறிவிப்பது அங்கு வழக்கமாக இருந்திருக்கிறது. இந்த வழியில் தான் இஸ்லாமும் பெண்களுக்கான விவாகரத்தை அங்கீகரித்திருக்கிறது.

இங்கு கவனிக்கப்பட வேண்டிய செய்தி என்னவென்றால், ஆண்கள் பெண்களை விவாகரத்து செய்வது குறித்து பல வசனங்களில் விரிவாக விளக்கும் குரான், பெண்கள் ஆண்களை விவாகரத்து செய்வது குறித்து எந்த இடத்திலும் தனித்த வசனமாக பேசவில்லை. மாறாக ஓரிரு வசனங்களில் மேம்போக்காக சொல்லிச் செல்கிறது. ஆதலால் குலா விவாகரத்து குறித்து பேசும்போது ஹதீஸ்களை மட்டுமே மேற்கோள் காட்டி பேசுவார்கள்.

ஸாபித் இப்னு கைஸ் இப்னு ஷம்மாஸ் அவர்களின் துணைவியார் நபி அவர்களிடம் வந்து ……… தோட்டத்தை ஏற்றுக் கொண்டு ஒரு முறை தலாக் கூறிவிடுங்கள் என்றார்கள். புஹாரி 5273

இது போன்று இன்னும் சில ஹதீஸ்களும் இருக்கின்றன. இது குறித்து கூறும் குரான் வசனங்கள்,

…….. கணவர்களுக்கு பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று முறைப்படி அவர்கள் மீதும் பெண்களுக்கு உரிமையுண்டு …….. குரான் 2:228

……. அல்லாஹ்வின் வரம்புகளை அவர்களால் நிலைநிறுத்த முடியாது என்று அஞ்சினால் அவள் ஏதேனும் ஈடாக கொடுத்து விடுவதில் குற்றமில்லை …….. குரான் 2:229

வசனம் 2:229 ல் ஏதேனும் ஈடாக கொடுத்து விடுவது என்பதற்கான பொழிப்புரையாகத் தான் புஹாரி 5273 சுட்டப்படுகிறது.  அதாவது திருமணத்தின் போது பெற்ற மஹரை திருப்பிக் கொடுத்துவிடுவது.

ஆண்களின் விவாகரத்தான தலாக்கிற்கும் பெண்களின் விவாகரத்தான குலாவிற்கும் இடையில் வித்தியாசங்கள் இருக்கின்றன.  ஆண்களின் தலாக் மூன்று கட்டங்களாக நிகழ்வது, பெண்களின் குலா ஒரே நேரத்தில் முடிவுக்கு வந்துவிடும். ஆண்களின் தலாக் யாரிடமும் முறையிட வேண்டிய அவசியமின்றி நேரடியாக மனைவியிடமே கூறிவிடலாம், பெண்களின் குலா பொதுவான தலைவரிடம் முறையிட்டே செய்யமுடியும். இவைகளை இஸ்லாம் கூறும் குடும்பவியல் நடைமுறைகளோடு ஒப்பு நோக்கினால் இந்த விவாகரத்து நடைமுறைகள் எந்த நோக்கில் திட்டமிடப்பட்டிருக்கின்றன என்பது தெரியவரும்.

ஆண்களுக்கு நான்கு முறைப்படியான மனைவிகளும் கூடவே எத்தனை அடிமைப் பெண்களை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளும் அனுமதி இருக்கிறது. மட்டுமல்லாது தனக்கு கீழ்படிய மறுக்கும் மனைவியை படுக்கையில் விலக்கிவைத்து, அடித்து கட்டுப்படுத்தும் அனுமதியும் கணவனுக்கு இருக்கிறது. இதனோடு இணைந்து தலாக் எனும் விவாகரத்து மனைவியை மிரட்டுவதற்கு வழிவகை செய்து தருகிறது. பொதுவான ஒருவரிடம் முறையிட வேண்டிய தேவையின்றி படிப்படியாக இரண்டு முறை தலாக் கூறினாலும் மீண்டும் இணைந்து கொள்ள முடியும். ஆக, மனைவியை தனக்கு கட்டுப்பட்டவளாக நடக்க வைப்பதற்கான உச்ச கட்ட ஆயுதமாக ஆணுக்கு தலாக் பயன்படுகிறது. (இதை நடைமுறையில் யாரும் காணலாம்) ஒரு மனைவி இறந்தால் அவளின் உடமைகளின் பெரும்பகுதிக்கு கணவனே வாரிசாக இருக்கும் நிலையில், திருமணத்தின் போது கொடுக்கப்பட்ட மணக் கொடை கணவனிடம் திரும்பிச் சேர்வதை உறுதி செய்யும் பொருட்டு பொதுவான ஒருவரிடம் முறையிட்டுத்தான் பெண் விவாகரத்து பெற முடியும். அதேநேரம் மனைவி முறையிட்டு கணவனும் ஒப்புக் கொண்டு விட்டால் அந்தக் கணமே விவாகரத்து செயல்பாட்டுக்கு வந்து விடுகிறது. இதுவே ஆணுக்கு தவணை முறையில் செய்யப்படுவதால் அவனுக்கு இருக்கும் அவகாசம் பெண்ணுக்கு இல்லை. எனவே பெண் தனக்கு பிடிக்காத கணவனை விவாகரத்து செய்வது என்பது வேறு வழியில்லாத நிலையில் எதிர்காலம் குறித்த பயத்தையும் மீறித்தான் செய்ய முடியும். இது கணவனின் ஏற்க முடியாத செயல்களையும் கூட சகித்துப் போக வைக்கிறது. இதுவே ஆண் என்றால் தனக்கு கட்டுப்பட மறுப்பவளை தலாக் கூறி மிரட்டி அவள் பணிந்ததும் ஏற்றுக் கொள்ள முடியும்.

பொதுவாக விவாகரத்து பெறும் பெண்களுக்கு எதிர்காலம் என்பது இருண்டதாகவே இருக்கும். காரணம், இந்த ஆணாதிக்க உலகில் பெண் எல்லாவிதத்திலும் ஆணைச் சார்ந்தே இருக்க வேண்டியதிருக்கிறது. மண உறவுகள் விலகிவிட சொந்த உறவுகள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே அவளுக்கு எதிர்காலம். இல்லையென்றால் அவளுக்கு இந்த உலகம் நரகமாகவே இருக்கும். இது தான் பெண்களை கணவன் என்ன செய்தாலும் அதை சகித்துப் போக வைக்கிறது. இது மாற வேண்டுமென்றால் பெண்ணுக்கு பொருளாதாரத்தில் சுதந்திரம் வேண்டும். ஆனுக்கு சமமாக பெண்ணை உலவவிட எந்த மதமும் சம்மதித்ததில்லை, இதில் இஸ்லாமும் விலக்கில் இல்லை.  எனும்போது பெண்ணை ஆணுக்கு கீழானவளாக இருத்தி வைத்துவிட்டு விவாகரத்து உரிமை வழங்கியிருக்கிறோம் என்பதில் எந்தப் பொருளும் இருக்க முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக