ஞாயிறு, 18 டிசம்பர், 2011

போலி பகுத்தறிவு வாதிகளுடன் விவாதிக்கத் தயாரா ?

 

 

இந்த தலைப்பில் ஒரு பதிவைப் பார்த்து அதிர்ச்சயடைந்தேன், அதில் பெரியாருக்கு மாலை போடுவது ஏன் என்ற கேள்வியெல்லாம் எழுப்பி இருக்கிறார்கள். பெரியார் வாழ்ந்து மறைந்தவர், மாலை மரியாதை செய்வதற்கும் கடவுள் வணக்கத்திற்கு என்ன தொடர்பு என்றே தெரியவில்லை. மாலை மரியாதை செய்வது ஒரு வழக்கம். என்னைக் கேட்டால் பெரியாருக்கு கோவில் கட்டியே கும்பிடலாம். ஆனால் அது அவரது கொள்கைக்கு எதிரானது. தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு பெரியார் என்றுமே தந்தைப் பெரியார் தான். மாதா பிதா குரு தெய்வம் என்கிற வரிசையில் தந்தையாக பெருவாரியான தமிழர்களால் போற்றப்படும் படும் பெரியார் இரண்டாவதாக இருக்கிறார். நான்காவது நிலையில் தான் கடவுளே, ஏனென்றால் அந்த கடவுளையும் கும்பிட அடைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட கோவில் கதவுகளைத் திறந்து விட்டவர் பெரியாரே. திருவரங்கம் அரங்கனை காணச் செல்பவர்கள், அதற்கும் முன்பு பெரியார் சிலையை கண்டு உள்ளே செல்வதற்கு போராடி வாய்பளித்த பெரியாருக்கு நன்றி செலுத்திவிட்டுதான் செல்கிறார்கள். அவர் வழிவந்தவரே மானமிகு வீரமணி ஐயா. வீரமணி ஐயாவைப் பற்றிய தனிப்பட்ட விமரசனங்களை அதாவது சொத்து சேர்த்தார் என்றெல்லாம் சொல்லப்படுபவற்றை விடுகிறேன், மனிதர்கள் ஒவ்வொருவரும் பாசம், பணம், புகழ் எதோ ஒன்றில் அல்லது மூன்றிலுமே பலவீனமானவர்கள் தான். ஆனால் கொள்கையளவில் இன்றும் அவரும் சரி, கலைஞரும் சரி சமரசம் செய்து கொண்டது கிடையாது.

வீரமணி ஐயாவுக்கு விவாதத்துக்கு வர அரைகூவல் விடுத்து அவரை அழைப்பவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராயினும் சற்றேனும் சிந்திக்க வேண்டும். பிராட்டஸ்டாண்ட் கிறித்துவர்களின் 'ஏசு அழைக்கிறார்' என்ற துண்டு சீட்டை (பிட் நோட்டிசை) வாங்கிப் படித்து முகம் சுளிக்காமல் செல்லும் இஸ்லாமியர்கள் இருக்கிறார்களா ? இந்துக்கள் இருக்கிறார்களா ? ஏன் கத்தோலிக்க கிறித்துவர்கள் இருக்கிறார்களா ? பிராட்டஸ் ஸ்டாண்ட் கிறித்துவர்கள் பகுத்தறிவு வாதிகளா ? பின்பு ஏன் அவர்களைப் பார்த்து ஒதுங்கியும் சில சமயும் முறைத்துவிட்டும் செல்கிறீர்கள்.

ஈராக் போரின் போது அந்தர்யாமி என்கிற வடநாட்டு ஊழியர் ஒருவரை அல்லாவின் பெயரைச் சொல்லி கழுத்தை அறுத்ததை அல்ஜெசீராவில் காட்டினார்கள், ஆப்கானில் முகத்தை மறைத்தே இஸ்லாமிய பெண்ணை பொது இடத்தில் சுட்டுக் கொன்றதையெல்லாம் காட்டினார்கள், இதையெல்லாம் எந்த பகுத்தறிவாளன் செய்கிறான். அய்யோ அய்யோ என்று அலறி மகன்களுடம் மடிந்து துடித்த ஆஸ்திரேலிய பாதிரியாரை எந்த பகுத்தறிவாளன் கொன்றான். ஐயோகோ......கற்பினிப்பெண்களின் வயிற்றைக் கீறி குழந்தையை எடுத்து வெளியில் வீசிய குஜராத் நிகழ்வு போன்ற படுபாதக செயல்களையெல்லாம் எந்த பகுத்தறிவாளன் செய்தான் ? அன்றாடம் செய்தியாக எங்கோ ஒரு ஊரில் பிள்ளை வரம் தருவதாக பெண்களின் வன்புணர்ச்சி செய்வதை எந்த பகுத்தறிவாளன் செய்கிறான் ?

மாதாவின் கண்ணில் ரத்தம் வழிகிறதாம் ! எத்தனை மாற்றுமத நம்பிக்கையாளார்கள் அது உண்மையாக இருக்கும் என்று சொன்னார்கள். பிள்ளையார் பால் குடித்ததை பகுத்தறிவாளன் மட்டும் தான் கேலி செய்தானா ? சிலை வணக்கத்தை பகுத்தறிவாளன் மட்டும் தான் அபத்தம் என்று மறுக்கிறானா ? நாட்டார் தெய்வங்கள் எனப்படும் கிராம தெய்வங்கள் இழிவு என்று ஊருக்கு வெளியே அவற்றை நிறுத்து காவலுக்கு மட்டுமே அவை உரியது என்று புறம் தள்ளுபவன் பகுத்தறிவாளனா ? இன்னும் அடுக்கிக் கொண்டே செல்லலாம். அறிவியல் ஆன்மிகத்தை மெய்பிக்கிறதாம். தாரளமாக மெய்பிக்கட்டும். அப்படியென்றால் அடுத்து அவர்கள் கண்டுபிடிக்கும் முன் அவற்றையெல்லாம் வெளியிட்டு காப்புறிமை பெற்றுக் கொள்ளலாமே.

மதவாதிகளே நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காலம் முன்னோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையைவிட நாகரீக வளர்ச்சியில், தன்னம்பிக்கையில் முன்னேறி இருக்கிறார்கள், தயவு செய்து அவர்களின் காலைப் பிடித்து கற்காலத்துக்கு இழுத்துச் செல்லாதீர்கள். இறைநம்பிக்கை என்பது என்றுமே நம்பிக்கைதான். உணர்வு பூர்வமானதும் கூட, அதற்கும் மேல் அதை மெய்பிக்க முடியாது. அதனால் தான் அவ்வப்போது புதிய கொள்கைகளுடன் புதிய மதங்கள் பிறக்கிறது. என்றோ அதையெல்லாம் மெய்பித்து இருந்தால் ஒரே மத்துடனே இறைநம்பிக்கை நின்றிருக்கும். பகுத்தறிவாளர்கள் தகர்க்க நினைப்பது இறை நம்பிகையல்ல, அதன் மூலம் பரப்படும் கட்டுக் கதைகளைத்தான். இவை இல்லாது இருந்தால் பகுத்தறிவாளர்களையே 'இறைவன்' படைத்திருக்கமாட்டான்.

நான் இங்கு சொல்லி இருப்பது எந்த மதத்திற்கும், அதன் அடிப்படைவாதிகளுக்கும் பொருந்தும் !

மதங்கள் கடவுளல்ல, மதங்கள் கடவுள் என்று நினைத்தால் கடவுள் இல்லைதான். அதில் கூறப்பட்டுள்ளதை மட்டுமே நம்பி அடுத்த மதத்ததைத் தூற்றுபவன் அந்த கடவுளை நம்பினாலும் அவன் காட்டுமிராண்டியே. உங்களுக்கு இருப்பது இறைநம்பிக்கையா ? கடவுள் நம்பிக்கையா ? அதில் தெளிவு இருந்தால் பகுத்தறிவாளர்களுடான உங்கள் விவாதம் தேவையற்றது !

போலி பகுத்தறிவு வாதிகளுடன் விவாதிக்கும் முன் இஸ்லாமியர்கள், இந்துக்கள், கிறித்துவர்கள் ஆகிய மூன்று மதநம்பிக்கையாளர்களும் எந்தமதம் சிறந்தது ? எது அறிவியல் பூர்வமானது ? எது மூடநம்பிக்கையற்றது ? என்று தங்களுக்குள் விவாதித்துவிட்டு, அதில் வெற்றிபெற்றால் அடுத்து பொது எதிரியான(?) பகுத்தறிவாதிகளுடன் விவாதிக்களாம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக