சனி, 17 டிசம்பர், 2011

“ஆணுக்கும், ஆணுக்கும் பிறந்தவனாம் ஐயப்பன், இந்த ஆபாசத்தைப் பாரீர்” என்று சொல்வது ச‌ரியா?

File:SabarimalaRush2010.JPG
நான் திருச்சியில் இருந்து  சென்னைக்கு  வந்த போது, நான் குடி இருந்த வீட்டீற்கு அருகில் உள்ள சுவரில் ஒருவர் கருப்பு நிற வண்ணத்தில் எழுதிக் கொண்டு இருந்தார்.
“ஆணுக்கும், ஆணுக்கும் பிறந்தவனாம் ஐயப்பன்,  இந்த ஆபாசத்தைப் பாரீர்”
“என்ன தம்பி பாக்குறீங்க, உங்களைப் போன்ற இளைஞர்கள்   எல்லாம் சிந்திக்க வேண்டும்”, என்றார்.
“சிந்திக்க வேண்டியது அவசியம். ஆனால் சிந்திக்கும் போது ஒரு ஆணும் இன்னொரு ஆணும் கூடினால் எப்படி குழந்தை பிறக்கும் என்ற கேள்வி வருகிறது”, என்றேன்.
“தம்பி நாங்களா இத  சொல்லுறோம், இந்து மதத்தை சேர்ந்தவங்க தானே விஷ்ணு என்ற ஆண் கடவுளும் , சிவன் என்கிற ஆண் கடவுளும் கூடினதால ஐயப்பன் பொறந்தாருங்கிறாங்க,  அதைத் தானே ஆபாசம் என்கிறோம்”, என்றார்.
“விஷ்ணு என்பவர் அழகிய பெண்ணாக, மோஹினியாக அவதாரம் எடுத்ததாகவும் அந்தப் பெண்ணுடன்தான் சிவன் என்னும் ஆண் கூடியதாகவும் சொல்கிறார்களே அன்றி
ஆணுடன் ஆண் கூடியதாக இல்லையே”, என்றேன்.
“தம்பி நீங்க ரொம்ப கடவுள் நம்பிக்கை , பக்தி உள்ளவர் போல இருக்கு”
“நான் எதையும் ”நம்புவது” இல்லைங்க. ஆனால் சொல்லப் பட்ட கோட்பாட்டை அப்படியே எழுதி  விமரிசப்பதுதான் அறிவு நியாயம், நம்ம வெறுப்புணர்ச்சியைக் காட்ட மாற்றி எழுதி விமரிசிப்பது அறிவு நாணயமல்ல”, என்றேன். அத்துடன் நாங்கள் பிரிந்து விட்டோம்.
இப்போது இந்த “ஆணும் ஆணும் கூடியதாக” மாற்றி சொல்லும் பிரச்சாரத்தை மத வெறிக் கோட்பாட்டு பிரச்சாரகர்களும் கையில் எடுத்துள்ளனர். நாம் மக்களைக் கேட்டுக் கொள்ளுவது என்னவென்றால், தயவு செய்து மத வெறிப் பிரச்சாரகர்களின் வலையில் விழுந்து விடாதீர்கள் என்பதுதான். ஏனெனில் இந்துக்களின் கடவுள்களை வேண்டுமென்றே கொச்சைப் படுத்திஎழுதினால் பதிலுக்கு இந்துக்களும் மேரி மாதா எப்படி பிள்ளை பெற்றார் என்று ரியாக்சன் குடுப்பார்கள், இவ்வாறாக மத நல்லிணக்கப் பாதையில் செல்வோரையும் பிற மத தெய்வங்களை இகழ்பவர்களாக ஆக்கி மத வெறிப் பாதைக்கு கொண்டு வந்தால் அவர்கள் வெற்றி அடைந்து விடுவார்கள்.
இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மக்களின் அமைதியான ஆன்மீகத்தை முறித்து, அவர்களின் மத சகிப்புத் தன்மையை அழித்து அவர்களையும் மத வெறியர்கள் ஆக்குவதுதான் இவர்களின் நோக்கம்.
ஆனால்  அதற்க்கு இடம் கொடுக்கக் கூடாது. ஹரி ஹர சுதன் எனப் படும் ஐயப்பன், கடவுளின் சிவன் என்னும் ஆண் நிலைக்கும், மோகினிக்கும் பிறந்தவர், அந்த மோகினியாக அவதாரம் எடுத்தது ஹரி என்று விளக்கம் கொடுப்பதோடு கட்டுப்பாடு காக்க வேண்டும்.

இந்தக் கட்டுரையின்  இன்னொரு முக்கியக் கருத்தாக நாம் முன் வைப்பது, ஐயப்பன் வழிபாடு பல நல்ல விளைவுகளை தரக் கூடியதாக உள்ளது என்பதையே. ஐயப்பனை வழிபாட்டில் பிற மத தெய்வங்களை இகழ வோ, வெறுக்கவோ சொல்லப் படவில்லை. சாதி வேறுபாடுகளை உடைத்து சமத்துவத்தை நிலை நாட்டுகிறார் ஐயப்பன். எந்த சமூகத்தை  சேர்ந்தவராக  இருந்தாலும், ஒருவர மாலை போட்டுக் கொண்டால் அவரை சாமி என்று மரியாதையுடன் அழைக்கப் படுகிறார்,  மரியாதையுடன் நடத்தப் படுகிறார்.
அய்ய‌ப்ப‌ன் வ‌ழிபாட்டின் முக்கிய‌ அம்ச‌ம் அன்ன‌தான‌ம் ஆகும். அன்ன‌தான‌ம் என்று சொன்னாலும் பாயாச‌ம், வ‌டை என்று அச‌த்தி விடுவார்கள். இருமுடி க‌ட்டும் நாள் ஏழை ப‌ண‌க்கார‌ர் என்று விதாய்ச‌ம் இல்லாம‌ல் எல்லொருக்கும் அன்ன‌தான‌ சாப்பாடு உண்டு!

ஐயப்பனுக்கு மாலை போட்டுக் கொள்வது மனிதருக்கு சுய கட்டுப் பாடுகளை தருவதாக உள்ளது. குடிப் பழக்கம் உள்ள என்னுடைய மேலதிகாரி ஒருவர், மாலை போட்டுக் கொண்டு வந்து எங்களிடம் இந்த மாசம் பத்தாயிரம் ரூபாய் மிச்சம் என்று கொஞ்சம் வருத்ததுடன் சொல்லுவார். ஆனால் இப்போது மாலை போட்டுக் கொள்ளும் பலர் விரதத்தை சரியாகக்  கடைப் பிடிப்பதில்லை என நினைக்கிறேன். இதிலே சக நண்பர்கள்  அவருக்கு உதவி செய்து அவரை தனிமையில் விடாத படிக்கு அவருடனே வீடு வரை சென்று விட்டால் அவர் விரதம் காகப் படும், ஒரு நாற்பது நாலாவது அவரது கல்லீரலுக்கும் நன்மை உண்டாகும்.
அதே போல மகர ஜோதி என்று சொல்லப் படுவது உண்மையான ஜோதியா அல்லது மலையிலே யாராவது நெருப்பைக் கொளுத்தி ஜோதி உண்டாக்குகிரார்களா என்பது பற்றி பல கருத்துக்களும் செய்திகளும் வருகின்றன. இதிலே கேரளா டூரிசம் போர்டு வருமானத்திற்காக சரியான நேரத்தில் பறவையைப் பறக்கவிட்டு நெருப்பையும் கொளுத்துவதாக கூட சில செய்திகளைப் படிக்கிறோம். அவை உண்மையா என்று நமக்கு தெரியாது. ஆனால் பறவை பறப்பதோ, ஜோதி தெரிவதோ அதாக தெரிந்தால் தெரியட்டும், இல்லாவிட்டால் செயறகையாக செய்து காட்ட வேண்டாம், இந்து மதம் உண்மைக்கு முக்கியத்துவம் குடுக்கும் மதம்.
ஐயப்பன் கடவுளா, மேலே வானுலகில் இருக்கிறாரா  அவரை வேண்டினால் கேட்டது கிடைக்குமா, நினைத்தது நடக்குமா என்பதற்கு எல்லாம் நாம் சாட்சி கொடுக்க இயலாது. நம்மைப் பொறுத்தவரையில் எந்த‌க் க‌டவுளையும் பார்க்க‌வில்லை, ச‌ரி பார்த்துக் கொள்ள‌க் கூடிய‌ நிரூப‌ண‌த்தை யாரும் த‌ர‌வில்லை.
அதே நேர‌த்திலே ஐய‌ப்ப‌ன் வ‌ழிபாடு, பிற‌  ம‌த‌ங்க‌ளின் மீது வெறுப்புண்ர்ச்சியை தூண்டாத‌தாக‌, அமைதியான‌ ஆன்மீக‌த்தை உருவாக்குவ‌தாக‌, சுய‌க் க‌ட்டுப்பாட்டை உருவ‌க்கி ஒருவ‌ரை உய‌ர்த்தும் வ‌கையில், தான சிந்த‌னையை வ‌ள‌ர்க்கும் வ‌கையில் அமைந்துள்ள‌து என்கிற‌தை சொல்ல‌ நாம் த‌ய‌ங்க‌ வேண்டிய‌தில்லை.
ஐய்ய‌ப்ப‌னின் கோட்பாடும் கொடுங்கொல், ச‌ர்வாதிகார‌ கொடூர‌னை த‌ட்டிக் கெட்டு அப்பாவி  ம‌க்களைக் காக்கும் கோட்பாடாக‌  உள்ள‌து!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக